|
ம.ம.மு. தலைவர் பெ.சந்திரசேகரன் மாரடைப்பால் மரணம்: மலையக மக்கள் முன்னணியின் தலைவியாக திருமதி சந்திரசேகரன் நியமனம்
சமூக அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்புத்துறை அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெரியசாமி சந்திரசேகரன் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 52 . இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அமைச்சரை உடனடியாக கொழும்பின் நவலோக்க வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போதும், சிகிச்சை பலனின்றி அவர் மரணமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையகத்தில் பிரபல அரசியல்வாதியாக திகழ்ந்த அவர், பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றியவராவார்.
1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி பிறந்த சந்திரசேகரன், முதன்முதலாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூலம் அரசியலுக்கு பிரவேசித்தார்.
இதற்கு முன்னர் அவர் வகித்து வந்த சமாதான நீதிவான் பதவியே அவரைச் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துக்கு இட்டுச்சென்றது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இருந்து விலகிய அவர் மலையக மக்கள் முன்னணியைத் தோற்றுவித்து, புளொட் அமைப்புடன் இணைந்து முதலாவது மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.
அதன் பின்னர் நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவரின் ஆசனம் மூலமே 2001 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கம் ஆட்சி அமைக்க கூடியதாக இருந்தது.
இந்தநிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கிவந்த அவர், தற்போது அரசாங்கத்தின் அமைச்சராக இருந்து வந்தார்.
இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சந்திரசேகரன் உலகளாவிய ரீதியில் தமிழ்த் தலைவராக மதிக்கப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பிரதிநிதியாகவும் செயற்பட்டு வந்தார்.மலையகத்தில் தனி அலகு கொள்கையை இவரின் கட்சி கொண்டிருந்ததுடன் மலையகத்தின் பிரச்சினைகளை வெளயுலகுக்கும் கொண்டு சென்றது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவியாக திருமதி சந்திரசேகரன் நியமனம்
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் சமூக அபிவிருத்தி மற்றும் அநீதியொழிப்பு அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் மறைவைத்தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியின் தலைவியாக திருமதி சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் உயர்மட்ட அரசியல் குழு இன்று கொழும்பில் கூடி ஏகமனதாக இந்தத்தீர்மானத்தினை எடுத்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் பூதவுடல் அன்னாரின் ராஜகிரிய இல்லத்தில் தற்போது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதோடு அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 4 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் தலவாக்கலையில் இடம் பெறவுள்ளன.
இந்த நிலையில் மலையக மக்கள் முன்னணியின் மண்வெட்டி சின்னத்தில் கடந்தப் பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தனித்துப்போட்டியிட்டு பாரளுமன்ற உறுப்பினராக பெரியசாமி சந்திரசேகரன் தெரிவு செய்யப்பட்டமைக்குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் சந்திரசேகரனின் திடீர் மறைவைத்தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இரண்டாவதாக எஸ்.அருள்சாமியும் மூன்றாவதாக எம்.சிவலிங்கமும் உள்ளனர்.
இந்த இருவரும் தற்போது வேறு அமைப்புக்களில் அங்கத்துவம் பெறுவதால் எஸ்.அருள்சாமியை பாராளுமன்ற உறுப்பினராக நியமிகக்க கூடிய சந்தர்ப்பம் இல்லையெனத்தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அமைச்சர் சந்திரசேகரனின் பாராளுமன்ற பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் உயர்பீடம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகத்தெரிவிக்கப்படுகின்றது.
|