|
அரசாங்கம் அமைப்பதற்கே மக்களின் வாக்குகள்
பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் நாளுக்குநாள் சூடு பிடிக்கின்றது. மூன்று பிரதான அணிகள் களத்தில் நிற்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒரு அணி. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அணி மற்றையது. மூன்றாவது அணி முன்னாள் இராணுவத் தளபதியின் தலைமையில் மக்கள் விடுதலை முன்னணி அமைத்த ஜனநாயக தேசிய முன்னணி.
பாராளுமன்ற தேர்தலின் பிரதான நோக்கம் நாட்டை நிர்வகிப்பதற்காக ஒரு அரசாங்கத்தைத் தெரிவு செய்வதாகும். இப்போது களத்தில் நிற்கும் மூன்று அணிகளுள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாத்திரம் ஆட்சி அமைக்கக்கூடிய நிலையில் உள்ளது. ஆட்சிக்கு வருவது உறுதியான நிலையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறும் முயற்சியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஈடுபட்டிருக்கின்றது. தங்களால் ஆட்சி அமைக்க முடியாது என்பதை மற்றைய இரண்டு அணிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.
ஜனநாயக தேசிய முன்னணியுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் கூட் டுச் சேர்ந்து ஆட்சி அமைக்கப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறுகின்றது. அதேநேரம், மற்றைய கட்சிகளுடன் சேர்ந்து தேசிய நல்லிணக்க அரசாங்கம் அமைக்கப்போவதாக மக்கள் விடுதலை முன்னணித் தலைவர்கள் கூறுகின்றார்கள். இவ்விரு அணிகளினதும் இக் கூற்றுகள் அவற்றினால் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்பதையே வெளிப்படுத்துகின்றன.
மற்றைய கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கப்போவதாக இரண்டு அணிகளும் கூறுகின்றபோதிலும் அது நம்பகத் தன்மை அற்றது. அடிப்படையில் முரண்பாடுகளைக் கொண்ட கட்சிகளுக்கிடையே கொள்கை உடன்பாடு சாத்தியமில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனநாயக தேசிய முன்னணியும் தனித்தனியாகத் தேர்தலில் போட்டியிடுவது மாத்திரமன்றி ஒன்றையொன்று விமர்சிக்கும் அளவுக்கும் செல்கின்றன. மேலும் இரண்டு அணிகளுமே தங்களுடைய தலைமையில் ஆட்சி அமைப்பது பற்றிப் பேசுகின்றன. ஒரே அணியாகப் போட்டியிடுவதற்கு உடன்பாடு காண முடியாத இத் தலைவர்கள் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு உடன் பாடு காண்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
இரண்டு அணிகளினதும் ஆட்சி அமைப்பு முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான பாத்திரம் வகிப்பதை அவதானிக்க முடிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி அமைக்கப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி வெளிப்படையாகவே கூறுகின்றது. தேசிய நல்லி ணக்க அரசாங்கம் அமைக்கப்போவதாக மக்கள் விடுதலை முன்னணி கூறுவதன் உள்ளார்ந்த அர்த்தம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அரசாங்கத்தில் இணைத்துக்கொள்வது என்பதாகும்.
இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் கொண்டிருக்கும் நிலைப்பாடுகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்குமிடையே ஆழமான முரண்பாடு காணப்படுகின்றது.
சமஷ்டித் தீர்வையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது. அதை இறுதித் தீர்வாக முன்வைக்கும் அதேவேளை, அத்தீர்வை நோக்கிய நகர்வின் ஆரம்பமாக, சமகால யதார்த்தத்துக்கு அமைவான ஒரு தீர்வை ஏற்பதற்குக் கூட்டமைப்பு தயாராக இல்லை. சமஷ்டியை ஐக்கிய தேசியக் கட்சி கைவிட்டுவிட்டது என்றும் ஒஸ்லோ அறிக் கையை நிராகரிப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்ஹ கூறியிருக்கின்றார். பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் உள்ளடக்கி ஆட்சி அமைக்கப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் கூறுவதில் நம்பகத்தன்மை அறவே இல்லை என்பதும் இவர்களால் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது என்பதுமே உண்மையான நிலை.
இந்த நிலையில், என்ன செய்ய வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாகவே இருப்பார்கள். ஆட்சி அமைய முடியாத குழப்பநிலையைத் தோற்றுவிப்பதில் பங்காளிகள் ஆகாமல் அரசாங்கமொன்றைத் தெரிவு செய்வதற்கே அவர்கள் வாக்களிப்பார்கள்.
-தினகரன் ஆசிரியர் தலையங்கம்
|