|
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே….
- தேசியத்தலைவர்
உங்கள் வீட்டுக்கு விருந்தினர்கள் தங்குவதற்கு வருகிறார்களாயின் முதலில் நீங்கள் செய்யும் வேலைகள் ஞாபகத்திற்கு வருகிறதா?
உங்கள் வீட்டு பாத்ரூம் மலகூடம் உட்பட முழுவீட்டையும் துப்பரவுசெய்வீர்கள். பிறகு….
விருந்தினர் உறங்கவிருக்கும் படுக்கை அறையில் இருக்கும் கட்டிலின் விரிப்புகளை மாற்றுவீர்கள். மறக்காமல் தலையணை உறைகளையும் மாற்றிவிடுவீர்கள். ஆனால் தலையணைகள் மாத்திரம் மாறாது.
ஓரே தலையணை ஆனால் அதன் உறை மாத்திரம் மாறிவிடும்.
அவுஸ்திரேலியாவில் இப்படி பல பழைய தலையணைகள் இருக்கின்றன. அவற்றை பழம் பெருச்சாளிகள் பதம் பார்த்திருப்பதனால். சேதங்களை மறைப்பதற்காக புதுப்புது தலையணை உறைகளை மாற்றிவிடுவார்கள்.
கனவில் வாழ்ந்த ஈழ மண்ணில் பெருந்தலை சாய்ந்ததும் அதனை நினைத்து சிறு ஒப்பாரி கூட பாடுவதற்கு வக்கில்லாத கூட்டம் பழம் தலையணைகளுக்கு உறை மாற்றத்தொடங்கியிருக்கிறது. அப்படி சமீபத்தில் உறை மாற்றப்பட்டிருக்கும் தலையணைதான் ஆஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ்.
ஐம்பதுக்கு ஐம்பது கேட்ட ஜீ.ஜீ.பொன்னம்பலம் பின்னர் அமைச்சர் பதவிக்காக இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையை பறிக்கும் சட்டத்திற்கு கை உயர்த்திய கதை இன்றைய இளையோருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லைத்தான்.
ஐ.நா சபையில் பேசிவிட்டு ஊருக்கு திரும்பிய போது அவரது வயது 65. ஊர்மக்கள் அதனால் 65 சவரினில் தடித்த தங்கச்சங்கிலி அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். உடனே அந்த மேடையில் அவரது கருத்த (சிகரட் புகைத்தமையால்) உதடு சொன்னது:
இந்த தங்கச்சங்கிலியை விற்று இந்த ஊருக்கு ஒரு நெசவுசாலை கட்டித்தருவேன். உதட்டிலிருந்து வந்த வார்த்தைகள் உதட்டுக்குள்ளேயே அடங்கிவிட்டது.
நெசவு சாலை வரவேயில்லை. ஆனால் அவரது தமிழ்க்காங்கிரஸ் வாரிசு அரசியலை (அப்பன் மகன் பேரன்) வளர்த்துவிட்டிருக்கிறது.
இலங்கையில் மலையகத்தில் தொண்டமானின் காங்கிரஸ_ம் வாரிசு அரசியலைத்தான் தந்திருக்கிறது.
இரண்டு காங்கிரஸாலும் தமிழ் மக்கள் யாதொரு பயனும் அடையவில்லை. இந்த பாரம்பரியமிக்க காங்கிரஸ்களின் வரலாறும் இன்றைய இளையோர் அறியாததுதான்.
வானொலியில் வந்து இளையோர் அமைப்புக்கு கருத்தரங்கும் பட்டறைகளும் நடத்தப்போவதாக சொல்லும் இளைய தளபதி கரன் அவர்கள் இந்த காங்கிரஸ்களின் சவடால்களையும் அம்பலப்படுத்த அந்த பட்டறைகளை பயன்படுத்தினால் இளையோருக்கு நல்லது.
இப்பொழுது ஆஸ்திரேலியாவில் ஒரு தமிழ்க்காங்கிரஸ் தோன்றியிருக்கிறது. அதுதான் இப்போதைய புதிய தலையணை உறை.
முன்பு இலங்கை தமிழ்ச்சங்கம் பின்னர் அதே தலையணைக்கு பிரபாகரனை திருப்திப்படுத்துவதற்காக புதிய உறை ஈழத் தமிழ்ச்சங்கம்.
மேலும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ப்பண்பாட்டுக்கலைக்கழகம். திராவிட கலாச்சாரச் சங்கம். தென்துருவ தமிழ்ச்சங்கங்களின் சம்மேளனம். (இதற்கு தேங்காய் துருவிச்சங்கம் என்றும் ஒரு பெயர் உண்டு) தமிழர் புனர் வாழ்வுக்கழகம். தமிழர் பொருண்மிய மேம்பாட்டுக் கழகம். தமிழர் மருத்துவ நிதியம். இத்தனை தலையணைகளுக்கும் நடுவே இப்பொழுது புதிதாக முளைத்திருக்கிறது ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்.
அனைத்துமே புலிகளின் பினாமிகள்தான். இங்கிருப்பார் அங்கிருப்பார் அங்கிருப்பார் இங்கிருப்பார்.
ஆனால் இவற்றையெல்லாம் பழம்பெருச்சாளிகளின் கூடாரம் என்று நினைத்த இளைய தலைமுறையினர், தொடர்ச்சியாக கவன ஈர்ப்பிலும் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருக்க எங்கே எல்லா கிரடிட்டும் இளையோர்களுக்கே போய்விடும் என்பதற்காக பழம் பெருச்சாளிகள் மீண்டும் தலையணை உறை மாற்றுவதற்கு வெளிக்கிட்டிருக்குதுகள்.
இந்த தமிழ்க்காங்கிரஸ் என்ன என்ன செய்யும் என்பதை இப்பொழுதே பட்டியலிட்டு சொல்லலாம்.
1.சந்தாப்பணம் 200 வெள்ளியில் தொடங்கும். 2.யார் தலைவர்? யார் யார் செயற்குழு என்ற ஆராய்ச்சி. 3.பிரபாகரனின் படமோ புலிக்கொடியோ யாரும் ஏந்தக்கூடாது என்று எழுதப்படாத சட்டம். 4.ராஜராஜசோழனின் மூதாதயைர் தூக்கிய வேலுப்பிள்ளை பிரபாகரன் தூக்கிய புலிக்கொடியை அவர்கள் மறைந்தபின்பு மறந்தேவிடவேண்டும் என்ற பவ்வியமான கட்டளை. 5.துர்துக்குழுக்களின் பயணம். 6.முதலில் யார்? 7.மன்மோகன் சிங்கா அல்லது சோனியா காந்தியா? 8.ஹிலாரி கிளின்டனா? பராக் ஒபாமாவா? பான்கீ மூனா? மிலிபாண்டா? 9.ஜெயலலிதாவா? கருணாநிதியா? வைகோ(ல்)வா? நெடுமாறனா?
பழைய தலையணை தென்துருவ தமிழ்ச்சங்கம் செல்வி ஜெயலலிதா தனிநாடு என்று சொன்னதுதான் தாமதம் உடனே வாழ்த்துக்கடிதம் எழுதியதல்லவா?, அவரது கூட்டணி தேர்தலில் தோற்றுப்போனதும் அனுதாபக்கடிதம் எழுதியதா என்பது தெரியவில்லை. இந்தத்தூதுக்குழுக்கள் கடைசியாகத்தான் மகிந்த சகோதரர்களைப் பாhர்க்கப்போகும். (முன்பு போனவர்களை சாமர்த்தியமாக மறந்துவிட்டு தாங்கள் போவதற்கு புது வியாக்கியானம் கூறும்)
அதுவரையில் இந்த புதிய தலையணை உறை தமிழ்க்காங்கிரஸ் தமிழ் ஊடகங்களில் இந்திய மற்றும் வெளிநாட்டு தலைவர்களுடன் எடுத்துக்கொண்ட படங்களை பத்திரிகைகளில் பிரசுரித்து தங்களின் புகழை விண்ணுக்கு உயர்த்தும்.
வவுனியாவில் தங்கியிருக்கும் தமிழ் மக்களில் எத்தனை விதவைகள் எத்தனை அனாதைகள் எத்தனைபேர் அவயம் இழந்தவர்கள் எத்தனை பிள்ளைகளுக்க படிப்பு இல்லை என்பதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள்.
இந்தக்கனவான்கள் எத்தனை காலம் இப்படி ஏமாற்றிக்கொண்டே இருக்கப்போகிறார்கள். இவர்கள் இந்த நாட்டுக்கு வந்து குடியேறி கால் நூற்றாண்டுக்கும் மேலாகிறது. இதுவரையில் இவர்கள் செய்த பயனுள்ள காரியம்தான் என்ன?
அமைச்சர்களுக்கு கவர்னர்களுக்கு எம்.பிக்களுக்கு கைகுழுக்கவும் அவர்களுக்கு விருந்து வைக்கவும்தான் இவர்களுக்கு நேரம் .இருந்தது
வந்த காலம் முதல் புலிகளுக்கு நிதி சேகரித்துக்கொடுத்தார்கள். அதேசமயம் தங்கள் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை அதி உச்சத்துக்கு எழுப்பி வீட்டுக்கு மேல் வீடுகளை வாங்கிக்கொண்டார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு அதிக பட்ச கல்வியைக்கொடுத்து பல்கலைக்கழகம் அனுப்பி டொக்டாரக இஞ்சினியராக சட்டத்தரணியாக அக்கவுண்டனா மாற்றிக்கொண்டார்கள்.
ஆனால் தமிழ் ஈழம் காணவேண்டும் தம்பி விடமாட்டடார் என்று சொல்லிச்சொல்லியே கோடிகோடியாக பணம் திரட்டி ஆயுதத்துக்குக்கொடுத்து ஆயிரக்கணக்கான பிள்ளை களை பலி கொடுப்பதற்கும் இலட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாவதற்கும் வழி சமைத்தார்கள்.
இன்று வவுனியாவில் எண்பதினாயிரம் படிக்கவேண்டிய பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றி யோசிக்கிறார்களா? தடுப்பு முகாம்களில் இருக்கும் முன்னாள் போராளிகளான ஆயிரக்கணக்கான இளம் சிறார்களைப்பற்றி சிந்திக்கிறார்களா?
அவர்களின் புனர் வாழ்வுக்கு இந்த காங்கிரஸ் ஜாம்பவான்களிடம் என்ன திட்டம் இருக்கிறது?
இப்பொழுதுதான் புரிகிறது
ரமேஷ் நடத்தும் தமிழ் ஓசை வானொலியிலும் சபேசன் நடத்தும் தமிழ்க்குரல் வானோலியிலும் மக்களே விழிப்போடிருங்கள் என்று அடிக்கடி அறிவிக்கின்றார்கள்.
அந்த விழிப்பு கோசம் இந்த புதிய தலையணை உறை தமிழ்க்காங்கிரஸ்காரர்களுக்காகத்தானா?
தலைவன்தான் கண் மூடிவிட்டான். சரி நாமாவது விழித்திருப்போம்.
|