|
தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க இங்கிலாந்து விமான பயணிகளுக்கு `ஸ்கேன்' சோதனை நடத்தப்படும்
பிரதமர் கார்டன் பிரவுன் அறிவிப்பு
தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க இங்கிலாந்து விமான பயணிகளுக்கு `ஸ்கேன்' சோதனை நடத்தப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் அறிவித்தார்.கடந்த வாரம், நைஜீரியாவில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நகர் வழியாக அமெரிக்காவின் டெட்ராய்ட் நகருக்குச் சென்ற பயணிகள் விமானத்தை, அப்துல் முத்தலீப் என்னும் 23 வயது அல்கொய்தா தீவிரவாதி ஊசி மூலம் எடுத்துச் சென்ற திரவ வெடிமருந்து மூலம் தகர்க்க முயற்சித்தான். ஆனால், அதை விமான பயணிகள் விமான ஊழியர்களுடன் இணைந்து முறியடித்தனர். அந்த விமானம் டெட்ராய்ட் நகரில் தரையிறங்கியதும், அப்துல் முத்தலீப் அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
திரவ வெடி மருந்தை உடலோடு சேர்த்து முத்தலீப் எடுத்துச் சென்றதால் அதை விமான நிலைய அதிகாரிகளால் சோதனையின்போது கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் வெடிமருந்து திரவ வடிவில் கொண்டு செல்லப்பட்டதால் அதை மெட்டல் டிடெக்டர்களாலும் கண்டறிய இயலவில்லை.
இதனால், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்கா நாடுகளுக்கும் தீவிரவாதிகளால் நூதன முறையில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, பயணிகள் உடல் முழுவதையும் நிர்வாணமாக சோதனை செய்யும் ஸ்கேன் முறையை அறிமுகப்படுத்தப்போவதாக நெதர்லாந்தும், நைஜீரியாவும் உடனடியாக அறிவித்தன.
பாதுகாப்பை பலப்படுத்துவது அவசியம்
தற்போது, இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனும் விமான நிலையங்களில் பயணிகளுக்கு ஸ்கேன் சோதனை நடத்தப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.
இது குறித்து அவர் பிரதமர் அலுவலக இணைய தளத்தில் எழுதியிருப்பதாவது:-அல்கொய்தா தீவிரவாதிகளும் அவர்களின் துணை அமைப்புகளும் தங்களது இயக்கங்களில் இளைஞர்களை சேர்த்து அவர்களுக்கு துர்போதனை செய்து உலகம் முழுதிலும் உள்ள அப்பாவி மக்களை கொல்வதையும், ஊனமடையச் செய்யவதையும் ஒரே லட்சியமாகக் கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இதைத்தான் டெட்ராய்ட் விமான சம்பவம் வெளிப்படுத்துகிறது.
எனவே உலக நாடுகள் அனைத்தும் இணைந்து விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பை உருவாக்குவது மிகவும் அவசியம். சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகள் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்வதில் அமெரிக்காவுடனும் மற்ற நாடுகளுடனும் இங்கிலாந்து இணைந்து செயல்படும். பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு விமான நிலைய பரிசோதனை முறைகளை மறுஆய்வு செய்ய இங்கிலாந்து அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது.
இதன்படி, விமான பயணிகள் அனைவரது உடல் முழுவதையும் ஸ்கேன் செய்யும் அதிநவீன சாதனங்கள் இங்கிலாந்தின் அனைத்து விமான நிலையங்களிலும் நிறுவப்படும். மேலும், வெடி மருந்து பொருட்கள் எடுத்துச் செல்வதை கண்டுபிடிக்கும் விதத்தில் அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட எக்ஸ்ரே சாதனங்களும் விமான நிலையங்களில் வைக்கப்படும். இதன் வாயிலாக விமானத்தை தகர்க்க தீவிரவாதிகள் செய்யும் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்படும்.
மேற்கண்டவாறு கார்டன் பிரவுன் கூறி இருக்கிறார்.
முதல் கட்டமாக, அட்லாண்டிக் கடலை கடந்து செல்லும் விமானங்களில் பயணிகளுக்கு இந்த ஸ்கேன் முறையை அமல்படுத்த இங்கிலாந்து அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது.
|