|
தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு இந்திய அரசாங்கம் கடிவாளம் போடும்?
வி. சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)
இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக்கண்டுவிட இலங்கை அரசு முனைப்புடன் செயற்படத் தொடங்கியுள்ளது. இலங்கையின் இந்த முயற்சிக்கு இந்தியாவும் பூரண ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. பெரும்பாலும் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் உருவான 13வது திருத்தச்சட்டமே இனப்பிரச்சினைத் தீர்வின் முதற்கட்டமாக அமுலாக்கப்படவுள்ளது. ஆனால் பாராளுமன்றத்தில் தமிழ்மக்களின் சார்பாக 22 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வழக்கம் போலவே இந்த தீர்வு முயற்சிகளை குழப்பும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து, இனப்பிரச்சினைக்கான அனைத்து தீர்வு முயற்சிகளையும் குழப்பி, பின்னர் தனது வங்குரோத்து அரசியலை மறைக்க தனிநாட்டு கோஷத்தைக் கிளப்பி, தமிழ் இளைஞர்களை வன்முறைப்பாதையில் தள்ளி, பெரும் அழிவுகளை ஏற்படுத்திய (முன்னைய தமிழர் விடுதலைக்கூட்டணி) தமிழ் தேசியக்கூட்டமைப்பு, தற்பொழுது மீண்டும் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளைக் குழப்பி, இன்னொரு இரத்தக்களரியை உருவாக்க முனைந்து நிற்கிறது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு, இலங்கை அரசுக்கு எதிராக மட்டுமின்றி, புலிகளைப் போல இந்திய அரசுக்கு எதிராகவும் தொடர்ச்சியாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. தற்போது மேற்கத்திய நாடுகள் இலங்கைக்கு எதிராக மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளில், ஐக்கிய தேசியக்கட்சியுடன், தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இணைந்து கொண்டுள்ளது. இது புதுமையானது அல்ல. அவர்களுடைய கடந்த 60 வருட கால வரலாறு முழுவதும் இத்தகையதே. அண்மையில் சென்னையில் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியை சந்தித்த ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்திய அரசு, இலங்கை அரசுடன் இணைந்து இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் தான், இலங்கை இராணுவத் தளபதி, ‘இந்தியா எமக்குத் தேவையான ஆயுதங்களை வழங்க மறுத்ததினால் நாம் சீனாவிடம் ஆயுதங்களை வாங்க நேர்ந்தது’ எனக் கூறியிருந்தார். அந்த அறிக்கை வந்தபின்னரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தொடர்ந்து இந்திய அரசுக்கு எதிராக விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபடுவது, மேற்குலகின் இந்திய - இலங்கை அரசுகளுக்கெதிரான வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாகத்தான் என அரசியல் அவதானிகள் சிலர் கருதுகின்றனர். சென்னையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த சம்பந்தன் குழுவினர், சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். சாதாரண புலி உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதில் தவறில்லை. ஆனால் அவர்கள் கூட, தகுந்த புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னரே, சமூகத்தின் மத்தியில் விடப்பட வேண்டும். இல்லாவிடின் அவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ இதுவரைகாலமும் பின்பற்றிய வன்முறை நடவடிக்கைகளை, மீண்டும் மக்கள் மத்தியில் செய்யத் தொடங்குவார்கள். அதன் மூலம் தமிழ்ப்பகுதிகளில் மீண்டும் குழப்ப நிலையே உருவாகும். அதேவேளையில,; சரணடைந்த முக்கியமான புலி உறுப்பினர்களைப் பொறுத்தவரை, அவர்கள் மீது நீதிமன்ற விசாரணைகள் நடாத்தப்பட்டு, அவர்கள் மக்களுக்கு எதிராக இழைத்த குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என்பதுதான் தமிழ் மக்களின் விருப்பமாகும். அவ்வாறில்லாமல் அவர்களை வெளியேவிட்டால், விபரீதமான விளைவுகள்தான் ஏற்படும். மக்களே அவர்கள் மீது தாக்குதல் நடாத்துவார்கள். உதாரணமாக, முக்கிய புலிப் பிரமுகர்களான கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை, மாவீரர் பணிமனை பொறுப்பாளர் பொன்.தியாகம் போன்றோர் மீது வவுனியா நலன்புரி முகாம்களில் வைத்து பொதுமக்கள் ஏற்கெனவே இவ்வாறான தாக்குதல் நடாத்தியதைக் குறிப்பிடலாம். நிலைமை இவ்வாறிருக்க சம்பந்தன் குழுவினர் புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் எனக் கோருவது மீண்டும் வடக்கு கிழக்கில் குழப்பநிலையை உருவாக்கவா? அரசபடைகள் யுத்தகாலத்தில் இழைத்த மனித உரிமை மீறல்கள் குறித்து பேசும் தமிழ் கூட்டமைப்பினர், புலிகள் பாதுகாப்பு தேடி ஓட முற்பட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட்டும், கொட்டன்களால் தாக்கி கைகால்கள் முறித்தும் மேற்கொண்ட, மனித உரிமை மீறல்கள் குறித்து பேச மறுப்பது ஏன்?
செய்வதெல்லாம் செய்துவிட்டு, தமிழ் கூட்டமைப்பினர் இப்பொழுது எதற்காக தமிழக முதல்வரிடம் காவடி தூக்குகின்றனர்? காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம் மட்டுமின்றி, கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசாங்கமும் தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது என, புலிகள் மட்டுமின்றி, தமிழ் கூட்டமைப்பும் கமந்த சில மாதங்களாக உரத்துப் பிரச்சாரம் செய்து வந்த சங்கதி கருணாநிதிக்கு தெரியாது என சம்பந்தர் குழுவினர் நினைக்கிறார்கள் போலும்! தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கடந்த பல மாதங்களாக தமிழகத்தில் முகாமிட்டிருந்து, காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், தி.மு.கவுக்கு எதிராகவும் தேர்தல் பிரச்சாரம் செய்ததும், அதற்கு காங்கிரஸ் கட்சி ஆட்சேபனை தெரிவித்து, அவரை நாடு கடத்தும்படி கோரியதும் அனைவரும் அறிந்த விடயங்கள்! இப்படியான ஒரு சூழ்நிலையில், சிங்கள இனவாதிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், இலங்கை - இந்திய அரசுகள் முதலில் 13வது திருத்தச் சட்டததையாவது அமுல்படுத்தி, தமிழ் மக்களின் பிரச்சினையை ஓரளவாவது தீர்த்துவைக்க நடவடிக்கை எடுத்துள்ள ஒரு நிலையில், அதை தாம் முற்றுமுழுதாக நிராகரிப்பதாகக் கூறிக்;கொண்டு, எதற்காக சம்பந்தர் குழுவினர் இந்தியாவில் சுற்றித்திரிகின்றனர் என விளங்கவில்லை. கடந்த காலத்தில் தமிழகத்தின் அரசியல் செல்லாக்காசுகளான வை.கோ, ராமதாசு, தா.பாண்டியன் போன்றோருடன், புலிகளும், அவர்களது பினாமி அமைப்பான தமிழ் கூட்டமைப்பும் கூட்டுச்சேர்ந்து, மத்தியிலும், தமிழகத்திலும் உள்ள ஜனநாயக சக்திகளுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளை, தமிழக மக்கள் கடந்த பொதுத்தேர்தலில் திட்டவட்டமாக நிராகரித்த பின்னரும் கூட்டமைப்பினருக்கு அங்கு என்ன வேலை? இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, புதுடில்லிக்கு விஜயம் செய்து இந்தியத் தலைவர்களைச் சந்தித்து, இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு பற்றியும், அங்கு மேற்கொள்ள வேண்டிய புனர்வாழ்வு நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடவுள்ள இவ்வேளையில், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.கவின் மூலம் அவற்றுக்கு தடங்கல் ஏற்படுத்தவே தமிழ் கூட்டமைப்பினர் கருணாநிதியின் உதவியை நாடியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கருணாநிதி அவ்வளவு தூரத்திற்கு ‘ஏமாந்த சோணகிரி’ அல்ல. மகிந்தவின் விஜயத்திற்கு முன்னர், இந்திய அதிகாரிகள் கூட்டமைப்பினரை புதுடில்லிக்கு கூப்பிட்டுப் பேசவுள்ளதாகவும் தெரிய வருகிறது. அந்தப் பேச்சுவார்த்தை, தமிழ் கூட்டமைப்பினரின் ‘நாரதர்’ வேலைகளுக்கு தூபம் போடுவதற்கல்ல. பதிலாக அவர்கள் 13வது திருத்தச் சட்ட அமுலாக்கத்திற்கு எதிராக ‘குரைத்துத்’ திரிவதற்கு வாய்ப்பூட்டுப் போட்டு, கடிவாளம் போடுவதற்கே என நம்பகமாகத் தெரியவருகிறது.
|