|
தனி ஈழமல்ல; சம உரிமைக்கு போராடுவோம் : முதல்வர் கருணாநிதி
ச ென்னை, ஜூலை 1: ""இலங்கையில் தனி ஈழம் என்ற கோரிக்கையை வலியுறுத்தாமல், அங்குள்ள தமிழர்களின் சம உரிமைக்காகப் போராடுவோம்'' என்று பேரவையில் முதல்வர் கருணாநிதி கூறினா.
பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், இதுகுறித்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக), பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), டி.ராமசாமி (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் பேசினர். இதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசியது: ""அரசியல் பிரச்னைகளை அடிப்படையாக வைத்து இந்தத் தீர்மானத்தை, சிறப்பு கவன ஈர்ப்பை அணுகவில்லை. அதுவரையில் மிகுந்த மகிழ்ச்சி. இலங்கையில் இருக்கின்ற அரசுக்கும், தமிழகத்தில் இருக்கின்ற ஒரு அரசுக்கும் இடையே நடைபெறுகின்ற வாக்குவாதம் அல்ல. இரண்டு இனங்கள் - அங்கே சிங்கள இனம் - இங்கே தமிழ் இனம் என்ற இனப் போராட்டம் இது.
இலங்கையில் மொழியைச் சீர் செய்வது மாத்திரமல்ல, அங்கேயிருக்கிற மக்களும் சீராக வாழ வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்த அங்கேயுள்ளவர்கள் போராடினர். அப்போது, தமிழீழம் தனியாகப் பிரிய வேண்டும் என்ற அந்தக் குரலும் எழுந்தது.
சமஉரிமை கிடைக்க போராடுவோம்... தமிழீழத்தைப் பற்றி பல்வேறு கட்சிகளும் வலியுறுத்திப் பேசிய நேரத்தில், மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில், "தமிழீழத்தை ஆதரிக்கவில்லை, மாநில சுயாட்சி என்ற அளவில் தான் அங்கே தங்களுடைய கொள்கையை எடுத்துச் சொல்கிறோம், இன்றைக்கும் சொல்கிறோம்' என்று வலியுறுத்தினார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிலே வேறுபாடான நிலையில் இருக்கலாம். பாமக தலைவர் ஜி.கே.மணி பேசும் போது, "மாநில சுயாட்சி போதும்' என்றுதான் பேசினார்.
இலங்கையைப் பொறுத்தவரையில், தமிழர்களுக்கு சம உரிமை, தமிழ் மொழிக்கு சம தகுதி, அவர்களுக்கு அதிகாரப் பகிர்வு என்று இப்படிப்பட்ட நிலைமைகளுக்காகப் போராட வேண்டியவர்களாக இருக்கிறோம்.
திராவிட நாடு கோரிக்கை... திராவிட நாடு கொள்கையை கைவிட்டதற்கான காரணத்தை விளக்கி அண்ணா ஒரு புத்தகமே எழுதினார். அதில், "கட்சி வேண்டுமா, திராவிட நாடு வேண்டுமா என்று கேட்டால் கட்சி இருந்தால் தான் திராவிட நாடு கேட்க முடியும்' என்றார்.
மக்களுக்காகத்தான் ஒரு இயக்கத்தை நடத்துகிறோம். நமக்காக அல்ல. நாம் ஒரு கொள்கையைச் சொன்னால், அந்தக் கொள்கை ஈடேற வேண்டும்; வெற்றி பெற வேண்டும்.
மக்களுக்காகச் சொல்கின்ற எந்தக் காரியமானாலும், எந்த லட்சியமானாலும் அது மக்களைப் பாதிக்கக் கூடிய அளவுக்கு அமையும்போது சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு சிந்தித்து எப்படிப் போகலாம், எந்த வழியில் செல்லலாம் என்று தீர்மானிக்க வேண்டும்.
தமிழர்கள் அரசு அமைய... இலங்கையில் தமிழர்களை மதிக்கின்ற ஒரு அரசு அமைய வேண்டும். அது எதிர்காலத்தில் ஜனநாயக அடிப்படையில் பெரும்பான்மையாகக் கொண்ட சிங்களவர்களையும் சேர்த்து ஆளுகின்ற அரசாக அமையுமானால், நம்மைப் போல மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும் இருக்க முடியாது. அதையும் அமைத்தே தீரலாம்.
அமெரிக்காவை இன்றைக்கு கருப்புத் தோல் ஆண்டு கொண்டிருக்கிறது. அதுபோன்று, இலங்கையிலும் தமிழர்கள் அரசு அமைவதற்கு வெகுதூரம் இல்லை என்ற நம்பிக்கையைப் பெறலாம்.
இலங்கையில் தமிழர்களின் வாழ்வை வளமாக்க வேண்டும். இன்றைக்கு அங்கே இருக்கின்ற சிங்கள அரசின் மூலமாகத் தான் அதைச் செய்ய முடியும்.
இந்திய அரசு அதற்கான வலியுறுத்தலை, வற்புறுத்தலைச் செய்ய வேண்டும் என்பதில் மாறுபாடான கருத்தில்லை.
இலங்கையில் போர் முடிந்த பிறகும், தமிழர்களுக்கு முழுமையான சுதந்திரமும், நல்ல வாழ்வும் கிடைக்கவில்லை என்ற உணர்வோடு இந்தப் பிரச்னையை அணுக வேண்டும்.
நம்முடைய பேச்சால், நடவடிக்கையால் சிங்களவர்களின் கோபத்தை அதிகரித்தால் அது தமிழர்களுக்குத் தான் வேதனையாக வந்து சேரும்.
கோபத்தை அதிகரிக்காமல்... இலங்கையில் உள்ள தமிழர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பது உண்மையென்றால், சிங்களவர்களின் கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக பலமுறை தீர்மானம் நிறைவேற்றியபோது தமிழர்களாகக் கூடவில்லை. கட்சியினராகக் கூடினோம். இப்போது, அந்தப் பேதங்களை மறந்து, தமிழர்கள் என்ற நிலையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.
வணங்கா மண் கப்பலில்... இலங்கைத் தமிழர்களுக்காக நிவாரணப் பொருள்களை ஏற்றி வந்த வணங்கா மண் கப்பல் திரும்பிச் செல்லாது.
அதிலே உள்ள பொருள்கள் இலங்கைத் தமிழர்களுக்குத் தான் போய்ச் சேரும் என்பதில் மாற்றமில்லை. அந்த முடிவை எப்படி நிறைவேற்றுவது என்பதற்காக மத்தியில் உள்ளவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் உள்ளவர்கள் குழுவாக வந்து இலங்கையின் நிலவரங்களை பார்வையிட வேண்டும் என அந்த நாட்டின் அமைச்சர் தொண்டமான் கூறினார். மத்திய அரசின் கருத்தோடு கலந்து தான் இதைச் செய்ய முடியும் என கூறியிருக்கிறேன்'' என்றார் முதல்வர் கருணாநிதி.
|