|
இலண்டனில் தியாகிகள் தினம்
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(பத்மநாபா)வின் வெளிநாட்டுப் பிராந்தியத்தினரால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் ‘தியாகிகள் தினம’; ஜூன் மாதம் 20ந்திகதி, தெற்கு இலண்டனில் நடைபெற்றது.
1990ம் ஆண்டு ஜுன் மாதம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எவ்) செயலாளர் நாயகம் பத்மநாபாவும், கட்சியின் பன்னிரு முன்னணி உறுப்பினர்களும் ஈழத்தமிழ்மக்கள் சம்பந்தமான அரசியல் முன்னெடுப்புகள் பற்றி தமிழகத்தின் சென்னையில் ஒரு வீட்டில் நிராயுதபாணிகளாக கூடிக் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தபோது புலிகளின் ஏவலாளிகளால் நயவஞ்சகமாக படுகொலை செய்யப்பட்டனர்.
அந்த நாளையே, படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாகவும், தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற ஒரே உன்னத நோக்குடன் முன்வந்து தம் இன்னுயிரை அர்ப்பணித்த போராளிகளையும், அரசியல்வாதிகளையும், செயற்பாட்டாளர்களையும், மற்றும் பலியாகிய பொதுமக்களையும், கட்சி பேதமின்றி நினைவு கூரும் முகமாக ‘தியாகிகள் தினம்; இலங்கையில் வடக்கு - கிழக்கின் பல பகுதிகளிலும், தமிழகத்திலும், இலண்டன், பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், கனடா ஆகிய வெளிநாடுகளிலும் ஈபிஆர்எல்எவ் கடந்த பத்தொன்பது ஆண்டுகளாக, வருடாவருடம் தொடர்ந்து நடாத்தி வருகின்றனர்.
இவ்விழாவில் கலந்துகொண்டோரில், ஸ்ரீலங்கா வாழ் மக்கள்பால் அக்கறை கொண்ட அரசியல், சமூகச் செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள், இதர அமைப்புகளைச் சார்ந்தவர்கள், சிங்கள, முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தோர், ஈபிஆர்எல்எவ் வெளிநாட்டுப் பிராந்தியத்தின் பிரான்ஸ், ஜேர்மன் கிளைகளின் பிரதிநிதிகளும் உள்ளடங்குவர்.
ஈபிஆர்எல்எவ் ஐரோப்பிய பிராந்தியத்தின் முக்கியஸ்தர்களான முத்துக்குமார், வேலாயுதம், ஜெசிந்தா ஆகியோரின் குத்துவிளக்கேற்றலைத் தொடர்ந்து, மௌன அஞ்சலியுடனும் இலண்டன் பொறுப்பாளர் சிறாப் அவர்களினால் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வில், ஈபிஆர்எல்எவ் வரலாறு சம்பந்தமான சில படங்கள், சுவரொட்டிகள், பிரசுரங்களின் முன்தோற்றங்கள் ஆகியவவை திரையில் காட்டப்பட்டன.
“வெள்ளைப் பூக்கள் மலரவே…” என்ற பாடலுக்கான நடன நிகழ்ச்சி, கவியரங்கம் ஆகியனவற்றைத் தொடர்ந்து, ஈபிஆர்எல்எவ்; பிரான்ஸ் கிளையிலிருந்து மோகன், ஜேர்மன் கிளையிலிருந்து அலெக்ஸ், மற்றும் இலண்டன் உறுப்பினர் லவீர் ஆகியோர் உரையாற்றினர்.
இவர்களது உரைகளில் வெளியாகிய கருத்துக்கள்:- புலிகளின் தலைமைத்துவத்தின் சமீபத்திய ஒழிப்பு, தமிழ் மக்கள் ஜனநாயக விழுமியங்களை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு தடையாக இருந்த ஒரு பாசிச அமைப்பின் வீழ்ச்சியாகவே கொள்ள வேண்டும்; கடந்த பல தசாப்தங்களாக தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று தமக்குத் தாமே மகுடம் சூட்டியவர்களால் தமிழ்மக்களுக்கு மறுக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளை மீண்டும் பெறுவதற்கான இடைவெளி ஓரளவு தோன்றியிருக்கிறது.
கடந்து வந்த பாதைகளை மீள் ஆய்வு செய்து, மாறிவரும் அரசியல் சமூக யதார்த்தங்களை கருத்தில் கொண்டு எதிர்கால அரசியல் முன்னெடுப்புகளை தமிழர் நலன்பால் உண்மையாகவே அக்கறை கொண்ட தமிழ்க்கட்சிகள் மேற்கொள்வது இன்றைய காலத்தின் தேவையாகும்.
ஒரு புறம் ‘தேசியம்’ என்றும், மறுபுறம் ‘பேரினவாதம்’ என்றும் கூறிக்கொண்டு மேற்கொள்ளப்படும் குறுட்டுப்போக்கு அரசியல் தமிழ்பேசும் மக்களை மேலும் மீளமுடியாப் படுகுழிகளுக்குள் தள்ளுவதற்கே வழி சமைக்கும்.
ஐக்கியம், ஜனநாயகம் ஆகியவற்றன் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளே மக்களின் சுபீட்சத்திற்கு வழிகோலும்.
அக்கூட்டத்தில் உரையாற்றிய புளொட் அமைப்பின் பிரதிநிதி, தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசியல் முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்; இதற்கு முன்னோடியாகவே, ரியுஎல்எவ், ஈபிஆர்எல்எவ், புளொட் ஆகிய மூன்று கட்சிகளும் கொள்கைகளில் ஒற்றுமையைப் பேணி, மக்கள் மத்தியில் தமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அந்நிகழ்வில் உரையாற்றிய உபாலி கூரே, அமரர் பத்மநாபா இலங்கையின் அனைத்துச் சமூகங்களின் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமையில் நம்பிக்கை கொண்ட ஒரு உன்னத மனிதன்; அவரது படுகொலை தமிழ்மக்களது மட்டுமல்ல, இலங்கையின் அனைத்துச் சமூகத்தினரதும் இழப்பு என்றார்.
1980களில், தான் சார்ந்த கட்சியைச் சேர்ந்தோர் சிலர், ஆயுதம் தாங்கியோருடன் இணைந்து வேலை செய்வதில் முதலில் ஐயப்பாடுகள் கொண்டிருந்தாலும், கொள்கைகள் அடிப்படையில்;, இலங்கையின் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் எதிர்கால சபீட்சத்திற்கு சேர்ந்து உழைப்பதற்கு ஈபிஆர்எல்எவ்தான் உகந்தது என்ற முடிவுக்கு வந்தமையையும், அதற்கான முயற்சிகளில் தான் ஈடுபட்டமையையும் எடுத்துரைத்தார்.
ஈபிஆர்எல்எவ் சார்பாக தம்பா உரையாற்றும் பொழுது, பத்மநாபா எப்பொழுதுமே சாதாரண மனிதர்களுடன் ஒரு சாதாரண மனிதனாகப் பழகும் பண்பினைக் கொண்டிருந்தார்; ‘மக்களில்லாத மண்ணை நாம் நேசிக்கவில்லை, மக்களுக்காகவே மண்ணை நேசிக்கிறோம்’ என்பதிலும், எமது பொது எதிரி யார் என்பதிலும் தெளிவாக இருந்தார் எனக் கூறினார்.
இனங்களுக்கிடையிலான ஐக்கியம் இன்றியமையாதது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். தனது கட்சியின் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது, தமிழர்நலன் கருதி, மற்றைய தமிழ்க் கட்சிகளுடனான ஒற்றுமைக்காக முயன்றார். அந்த முயற்சியின் விளைவாகவே எல்ரிரிஈ, ஈபிஆர்எல்எவ், ரெலோ, ஈரோஸ் ஆகியவை ஒன்றிணைந்த ஈஎன்எல்எவ் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
இந்தியாவின் தலையீட்டினால் ஏற்படுத்தப்பட்ட -- அனைத்து வடக்கு-கிழக்கு சமூகத்தினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட -- திருகோணமலையை தலைநகராகக் கொண்ட வடக்கு - கிழக்கு இணைந்த மாகாண சபையை ஒரு ஆரம்ப படிக்கல்லாக ஏற்றுக் கொள்ளாது நிராகரிக்கப்படின், அது தமிழ்பேசும் மக்களின் ஈடுசெய்ய முடியாத அழிவிலேயே கொண்டு போய்விடும் என்பதில் அவர் மிகத் தெளிவாக இருந்தார்; அம் மகாணசபையை நடைமுறைப்படுத்துவதற்கு மற்றைய கட்சிகளுக்கு அதில் முன்னுரிமை கொடுக்கவும் முன்வந்தார் எனக் குறிப்பிட்டார்.
அவரது கொள்கைகளின் தாற்;பரியங்களையும், அவரது அரசியல் தீர்க்கதரிசனத்தையும் மக்கள் உணராதவாறு, ஈபிஆர்எல்எவ் மீது தமிழ் ஊடகங்களும் சமூகப் பிரமுகர்களாக தம்மைக் காட்டிக்கொண்டவர்களும் வசைமாரி பொழிந்தனர். இந்தப் போக்கின் பாரதூர விளைவுகளைத் தமிழர்கள் இன்றும் அனுபவிக்கிறார்கள் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.
இப்பொழுது உள்ள நிலைமையை ஒரு அரை மட்டத்திற்கு தண்ணீர் உள்ள பாத்திரத்தை, ‘அது அரைவாசி வெறுமையாக இருக்கிறது’ என்று ஒரு கண்ணோட்டத்திலும், ‘அது அரைவாசி நிறைவாக இருக்கிறது’ என்று இன்னுமொரு கண்ணோட்டத்திலும் பார்க்கக்கூடியதுபோல், தற்போதைய நிலைமையையம் பார்க்கலாம் என்றார். -- இன்றைய நிலைமையில், கொலைகள் கணிசமாகக் குறைந்துள்ளமை, வீதித் தடைகளும் மீனபிடித் தடைகளும் குறிப்பிடத்தக்க அளவில் நீக்கப்பட்டுள்ளமை, ஏ9 வீதியூடாக பிரயாணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை ஆகியன மக்களைப் பொறுத்தளவில் முன்னேற்றமான நிகழ்வுகளே; அதே வேளை, தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது, மக்கள் பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுப்பது போன்ற பல விடயங்கள் இன்னமும் செயற்பட வேண்டியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், ‘ஏகப்பிரதிநிதிகள்’ என்பதினை ஏற்றுக்கொள்ள முடியாது என ஈபிஆர்எல்எவ் எப்பொழுதும் எதுவித மாற்றமுமின்றி கூறி வருகிறது.
புலிகளின் இராணுவ முன்னெடுப்புகளும், பலங்களும் வலிமையிழக்கப்படாதிருந்தால், தமிழர்களின் நிiiமை இன்னமும் மோசமாகியிருக்கும் என்பதுதான் உண்மை.
இப்பொழுது, தமிழர்களின் நிலையைச் செப்பனிட்டு, வன்முறைகளற்ற ஜனநாயக விழுமியங்களையும் மனித உரிமைகளையும் பேணும் ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்பும் கடமை அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் இருக்கிறது. -- அந்த அடிப்படையிலேயே எமக்குள் ஐக்கியம் ஏற்படல் வேண்டும்; அதனை நோக்கி நாம் செயலாற்ற வேண்டும் என்றார்.
நிகழ்வின் இறுதி நிகழ்ச்சியாக ஒரு கலந்துரையாடல் நடாத்தப்பட்டது. சிவா அனுசரணையாளராக சில கேள்விகளை முன்வைக்க அவற்றின் மீது வௌ;வேறு கருத்துக்களைக் கொண்ட சிவலிங்கம், கீரன், உபாலி கூரே ஆகியோர் தமது கருத்துக்களைத் தெரிவிக்க, வருகையாளர்களும் தத்தம் கருத்துக்களை தெரிவிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
அக் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் சாராம்சம்:-நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் ஏறத்தாழ 300,000 தமிழ்மக்கள் பாரிய அவலங்களுக்குள் ஆளாக்கப்பட்டிருகிறார்கள் என்பதில் எவ்வளவு உண்மை என்ற விடயம் பற்றிய கருத்துக்கள் தெரிவிக்கப்படுகையில், இது பற்றி வௌ;வேறு விதமான தகவல்கள் வெளி வருகின்றன் அவை எந்தளவுக்கு உண்மை என்பதனை உறுதிப்படுத்துவது சிரமமாக இருக்கிறது.
வெளிநாட்டு அரசுசார்பற்ற நிறுவனங்களையும் ஊடகவியலாளர்களையும் சுதந்திரமாக அந்த நிலையங்களுக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட இலங்கை அரசு அனுமதிக்காததும் இதற்கு ஒரு காரணமாகும்.
சில வெளிநாட்டு அரசுசார்பற்ற நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும் திட்டமிட்டே உண்மைக்கு புறம்பான அல்லது சிறு குறைபாடுகளையும் பூதாகாரமாக்கும் செய்திகளை வெளியிடுகிறார்கள் என்பது இலங்கை அரசின் பதிலாக உள்ளது.
மக்களின் அவல நிலைமைகள் பற்றி வெளியிடப்படும் செய்திகளும்கூட பக்கச்சார்பான பிரச்சாரங்களாகவும் இருக்கின்றன. ஒரு வகையில் பார்க்கப்போனால், போர் முடிவுற்று இப்பொழுது ஒரு மாதகாலமே ஆகிறது. இந்தக் குறுகிய காலகட்டத்தில்;; புலிகள் யார் என முற்றாக இனங்காண முன்னர் ஒரேயடியாக அனைத்து மக்களையும் தம் இடங்களுக்குச் செல்ல அனுமதிப்பதை அரசாங்கத்திடம் எதிர்பார்க்க முடியாது; மீள்குடியேற்றத்தை நோக்கி அரசாங்கம் செயல்படுவதைக் காணக்கூடியதாகவும் இருக்கிறது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இந்த அவலம் ஏற்படுவதற்கு அரசாங்கத்தை மட்டும் குறைகூற முடியாது; அதற்கு புலிகளும் முக்கிய காரணம். எனவே, அந்த மக்களின் அவலங்களைப்பற்றி அக்கறையாக பேசுவதற்கு, புலிகளுக்கு வக்காலத்து வாங்கியவர்களுக்கும், முண்டு கொடுத்தவர்களுக்கும் எதுவித தார்மீக உரிமையும் கிடையாது.
சில புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளினால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மக்களின் அவல நிலைமையை முன்நிறுத்துவதிலும் பார்க்க, பயங்கரவாத அமைப்பு என அரசாங்கங்களினால் பிரகடனப்படுத்தப்பட்ட புலிகளினதும், புலிகளின் தலைவரது இருப்புகளையும் முன்நிலைப்படுத்தியமையால் அந்த ஆர்ப்பாட்டங்கள் மக்களின் அவலங்கள் எவையையும் நீக்கவில்லை எனக் கூறப்பட்டது. சரணடைந்த புலிகளுக்கு ஒரு பொது மன்னிப்பை வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும். இலங்கை அரசு தமிழ்ப்பகுதிகளைச் சிங்களமயமாக்கும் முயற்சிகள் எடுக்கிறதா என்ற கேள்விக்கு கருத்துக்கள் தெரிவிக்கையில், சிலர் தமக்குக் கிடைத்த தகவல்களின் பிரகாரம் அது உண்மைதான் என்றும், சிலர் அதில் உண்மையில்லை, தமிழ்மக்களைத் தமது இருப்பிடங்களுக்கு மீள்குடியேற்றங்கள் செய்வது போலவே போரினால் இடம் பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் இனத்தவரையும் தம் முன்னைய இருப்பிடங்களுக்கு மீண்டும்; செல்ல வாய்ப்புகளை அரசு ஏற்படுத்துவதாகவும் கூறினர்.
தமிழ்ப்பகுதிகளில் சிங்கள மக்கள் குடியேறுவதை நாம் தடுக்கப்படாது; ஏனெனில், அது போலவே பல சிங்களப் பகுதிகளில் தமிழர்கள் பெருவாரியாகக் குடியேறியுள்ளனர்; அரசாங்கம் இனவிகிதாசாரத்தை மாற்றும் முகமாக திட்டமிட்டு ஏற்படுத்தும் குடியேற்றங்கள்தான் கண்டிக்கப்பட வேண்டியவை என்ற கருத்தும் வெளிப்படுத்தப்பட்டது.
புலிகள் இல்லாதபடியால் இலங்கை அரசு இந்தச் சிங்களமயமாக்குதலை மேற்கொள்கிறது என்ற சிலரின் வாதம் தவறானது; ஏனெனில், புலிகள் இருக்கும்போதுதான், பல தமிழ்ப்பகுதிகளில் சிங்கள இராணுவமயப்படுத்துதல் நடந்தேறியது யாவரும் அறிந்ததே என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
இங்குள்ள இளம் தலைமுறையினரின் அமைப்புகளை நாம் சந்தித்து உண்மை நிலைமைகளை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இப்படியாக மனம் திறந்து கருத்துக்களை சகலரும் வெளிப்படுத்தும் கலந்துரையாடல்களை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் முன்னெடுப்பது அத்தியாவசியம்; அவை அடிக்கடி மேற்கொள்ளப்பட்டு, கலந்துரையாடல்களில் வெளிப்படுத்தும் கருத்துக்களை பரவலாக பிரச்சாரப்படுத்துவதும், நடைமுறைப்படுத்துவதும் அவசியமான செயற்பாடுகள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது புலிகளின் அழிவிற்குப் பின்; நிலவும் கருத்துச் சுதந்திரம் பற்றி பேசப்பட்டாலும், ஈபிஆர்எல்;எவ்இனர் இப்பொழுதல்ல, கடந்த 19 ஆண்டுகளாக ஒவ்வொரு தியாகிகள் தினத்திலும கருத்துச் சுதந்திரத்திற்கு சோர்வில்லாது தொடர்ச்சியாக வழி சமைத்துக் கொண்டு வருவது யாரும் செய்யத் துணியாத செயலென்றும் அது பாராட்டப்பட வேண்டியதும் என்றும் கங்கா கூறினார். கலந்து கொண்ட, பங்குபற்றிய அனைவருக்கும், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக நிறைவுற செயற்பட்ட ரவிக்கும் மற்றையோருக்கும், ஈபிஆர்எல்எவ் இலண்டன் கிளையினர் சார்பாக சிறாப்; அவர்களின் நன்றி தெரிவித்தலுடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.
|