|
சீனாவின் வளர்ச்சி – ஒரு பார்வை (6)
நகர்ப்புற வளர்ச்சி
– ஜி.விஸ்வநாதன்
சீனாவின் பொருளாதாரத் தலைநகரமாக இன்று விளங்கும் ஷாங்காய், பல ஆண்டுகளுக்கு முன்பே ஓரளவு வளர்ச்சி கண்டுதான் இருந்தது. அப்போது கிழக்கு நாடுகளின் பாரீஸ் என்று அது அழைக்கப்பட்டது. ஆனால், 1930-ல் ஜப்பானியர்கள் அந்தப் பகுதியைக் கைப்பற்றியபோது, அங்கு வியாபாரம் மந்தமாயிற்று. பிறகு மா சே துங் காலத்தில், மாநகரங்கள் உருவாவதை அன்றைய அரசு ஊக்குவிக்காததால், ஷாங்காய் மேலும் சரிவைச் சந்தித்தது.
ஆனால், சீனாவில் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்ட பிறகு, ஷாங்காய் வேகமான வளர்ச்சியைக் கண்டது. தற்போது சீனாவுக்கு வரும் நேரடி அன்னிய முதலீட்டில் கால் பங்கு ஷாங்காய்க்கு வருகிறது. அந்நகரில்தான் சீனாவிலேயே பெரிய பங்குச் சந்தை அமைந்துள்ளது. சீன வர்த்தகத்தில் 87 சதவிகிதத்தை இந்த பங்குச் சந்தைதான் நிர்வகிக்கிறது.
ஷாங்காய் மாநகரத்தில்...
முதலீடுகளை ஈர்ப்பதில் மட்டுமின்றி, சீன அரசுக்கு வருவாய் தேடித் தருவதிலும் ஷாங்காய் பெரும் பங்கு வகிக்கிறது. வருடத்துக்கு 40 பில்லியன் டாலரை ஷாங்காய் மட்டும் அரசுக்கு ஈட்டித் தருகிறது. (1 பில்லியன் என்பது 5 ஆயிரம் கோடி ரூபாய்.).
ஆனால், சீன அரசுக்குக் கிடைக்கும் இந்த வருவாயில் 10 சதவிகிதம் மட்டுமே, ஷாங்காயின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்படுகிறது என்பதை அங்குள்ளவர்கள் ஒரு குறையாகக் கருதுகிறார்கள்.
தாராளமயமாக்கல் கொள்கை மட்டுமின்றி, உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சீனாவில் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களும் சலுகைகளும் கூட, அங்கு நகர்ப்புறங்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையான அம்சங்களாக உள்ளன. அதற்குச் சில உதாரணங்களையும் கூற முடியும்.
அங்குள்ள நகராட்சி அமைப்புகளுக்கு, சுங்கவரி விலக்கு அளிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கம்பெனிகளுக்கு 10 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் வரி விலக்கு அளிக்கலாம். தவிர, மாநகர அமைப்புகள் தனியாக பங்குச் சந்தையை வைத்துக் கொள்ளலாம். (அதாவது அவர்கள் பங்குச் சந்தையை நடத்தலாம்.)
சீன அரசு, ஷாங்காய் மாநகருக்கு மட்டும் 1,500 கோடி ரூபாயை, குறைந்த வட்டியுடன் கூடிய கடனுதவியாக அளித்துள்ளது. மேலும், மாநில அரசுகளுக்குக் கடன் பத்திரங்களை வெளியிடும் அதிகாரத்தை மத்திய அரசு தந்திருப்பது போல, சீனாவில் நகர அமைப்புகளுக்கும் கடன் பத்திரங்கள் வெளியிடும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற வளர்ச்சிக்காகத் திட்டமிடும்போது, நிலங்களைக் கையகப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டால் அரசிடம் அனுமதி கோரி காத்திருக்காமல், சீனாவில் மாநகராட்சி அமைப்புகள் நேரடியாக நில ஆர்ஜிதம் செய்யலாம். அதே போல ஆர்ஜிதம் செய்து, பிறகு தேவையில்லாமல் போனால் அந்நிலத்தை விற்கவும் மாநகராட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையிலும் உள்ளாட்சி அமைப்புகள் வருவாய் ஈட்டுகின்றன. உதாரணமாக, ஷாங்காய் மாநகரைப் பொறுத்தவரை, ஆர்ஜிதம் செய்து வைத்திருந்த நிலங்களை விற்ற வகையில், அம்மாநகராட்சிக்குக் கிடைத்த வருவாய் மட்டும் மொத்த வருவாயில் மூன்றில் ஒரு பங்காகும். 
சீனாவில் புதுமையாக ஏதாவது செய்வதற்கும் கூட நிறைய செலவு செய்யத் தயங்குவதில்லை. ஷாங்காயில் செயற்கையான ஒரு கடற்கரையை உருவாக்க, சீனாவின் தெற்குப் பகுதியில் இருந்து 1 லட்சத்து 28 ஆயிரம் டன் மணலைக் கொண்டு வந்து கொட்டி, செயற்கையான கடற்கரையை அழகாக ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
நம் நாட்டில் அரசின் திட்டங்களுக்கும், முயற்சிகளுக்கும் எதிராக சில தனி நபர்கள் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து தடையாணை பெற்று விடுகிறார்கள். அங்கு அப்படி நடக்காது. 1991 முதல் 2000-ஆவது ஆண்டு வரை சீனாவில் நில எடுப்பு பணிகளுக்காக எண்ணற்ற கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. சுமார் இரண்டரை கோடி சதுர மீட்டர் அளவுக்கு கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆறரை லட்சம் பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தை இழந்துள்ளனர். அதற்குப் பதிலாக அவர்களுக்கு நகர்ப்புறத்தில் குடியேறி வாழ்வதற்கான பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஏற்பட்டு வரும் நகர்ப்புற வளர்ச்சி (பெருக்கம்) இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025-ஆம் ஆண்டுக்குள் சுமார் 100 கோடி பேர், அதாவது மொத்த மக்கள் தொகையில் 64 சதவிகிதம் பேர் நகர்ப்புறங்களில் வசிப்பார்கள் என்று அரசு நடத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அதே கால கட்டத்தில் இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் நகரவாசிகளின் எண்ணிக்கை 37 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக நகராட்சி அமைப்புகளுக்கு முக்கிய வருமானமே சொத்து வரிதான். ஆனால், நம்முடைய நாட்டில் சொத்துக்கள் பற்றிய முழுமையான பட்டியலே நகராட்சி அமைப்புகளிடம் இல்லை என்பதுதான் யதார்த்த நிலை. இதனால் நகர்ப்புற அமைப்புகளுக்கு முறையான வருமானம் கிடைப்பதில்லை; வரி ஏய்ப்பும், ஊழலும் அதிகமாக உள்ளது.
பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது நகரசபை அமைப்புகளுக்கு நாம் செலுத்தும் சராசரி வரி குறைவானதே ஆகும். மும்பையில் வருடத்துக்கு சராசரியாக சொத்து வரியாக 28 டாலர் (சுமார் 1400 ரூபாய்) கட்டுகிறார்கள். டெல்லியில் சராசரியாக 7 டாலர் கட்டப்படுகிறது. சொத்துக்கள் பற்றிய முறையான கணக்குகளும், முறையான வரிவசூலும் இல்லாததால் இந்தியாவில் நகர சபைகள், மத்திய - மாநில அரசுகளின் மான்யங்களை நம்பி இயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இந்த அமைப்புகள் மக்களுக்கு ஒழுங்காகச் சேவை செய்ய முடியாமல், குடிநீர், சாலை பராமரிப்பு போன்ற அடிப்படை வசதிகளைக் கவனிக்க முடியாமல் திணறுகின்றன. சாலை பராமரிப்பு பணியையோ, வடிகால்களைச் சீரமைப்பதையோ உள்ளாட்சி அமைப்புகளால் இங்கு சரிவர நிறைவேற்ற முடியவில்லை என்றால், அவற்றின் நிதிநிலை பலவீனமாக இருப்பதும், அதன் காரணமாக போதிய பணியாளர்களை நியமிக்காமல் இருப்பதும்தான் காரணங்களாகும்.
நகர சபைகளுக்கு அதிக அதிகாரங்களை அளித்து, அவற்றின் நிதி ஆதாரங்களை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்டால், நிச்சயமாக சீனாவைப் போல இங்கும் விரைவான நகர்ப்புற வளர்ச்சியைக் காண முடியும்.
- துக்ளக் -
|