|
திருகோணமலை தேர்தல் திருவிழா: தேர்தல் சுவரொட்டியில் சம்பந்தருக்கு அருகில் எம்ஜிஆருக்கும் இடம்
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் திருவிழா திருகோணமலையிலும் சூடுபிடித்துள்ளது.
- BBC
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அலங்கார ஊர்வலங்கள், இசை நிகழ்ச்சிகள் என வாக்காளர்களைக் கவருவதற்காக வேட்பாளர்கள் கலக்கிக்கொண்டிருப்பதாக எமது நிருபர் கூறுகிறார்.
இரு தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ந்த இலங்கையின் உள்நாட்டுப் போரின் உக்கிரங்கள் பாதித்த மிகவும் முக்கியமான பகுதிகளில் ஒன்றான திருகோணமலையில், போர் ஓய்ந்தபின்னர் நடக்கின்ற முதலாவது நாடாளுமன்ற தேர்தல் இதுவாகும். அதுமாத்திரமன்றி இலங்கையின் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் கணிசமாக கலந்து வாழும் பகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த நிலையில் போட்டியென்பது கட்சிகளுக்கும், சுயேச்சைக்குழுக்களுக்கும் இடையில் மாத்திரந்தான் என்று இல்லாமல், அதிக விருப்ப வாக்குகளைப் பெறும் நோக்கில் உட்கட்சி சலசலப்புகளும் அதிகமாக காணப்படுவதாகவும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த மாவட்டத்துக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4. இவர்களை தேர்வு செய்ய பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 244 133.
16 அரசியல் கட்சிகள் மற்றும் 15 சுயேச்சைக்குழுக்கள் இந்தத்தடவை நாடாளுமன்ற தேர்தலில் இந்த மாவட்டத்தில் போட்டியிடுகின்றன. மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 217.
தாம் இரண்டு ஆசனங்களை இந்தத் தடவை கைப்பற்றக் கூடியதாக இருக்கும் என்கிறார் தமிழ் அரசுக்கட்சியின் முதன்மை வேட்பாளரான இரா.சம்பந்தன். இந்த மாவட்டத்தில் வாழுகின்ற தமிழ் மக்கள் முழுமையாக வாக்களிப்பதிலேயே தமது வெற்றி வாய்ப்பு தங்கியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
தமதது வெற்றியின் முக்கிய அம்சமாக இளைஞர்கள்தான் இருக்கிறார்கள் என்கிறார், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணியின் முதன்மை வேட்பாளர் கௌரி முகுந்தன்.
பொதுக்கூட்டங்களை நடத்துவதை விட மக்களை நேரடியாக சந்தித்து பேசுவதிலேயயே தாம் நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறுகிறார் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் முதன்மை வேட்பாளரான திருமதி ஜூடி தேவதாசன்.
ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் கணிசமான ஆதரவு காணப்படுகின்றது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் குறித்த வாக்குறுததிகள், பொருளாதாரம், வேலைவாய்ப்பு என்பன போன்ற பல விடயங்கள் இங்கு வாக்கு சேகரிப்பதற்கான விவாதப் பொருளாக வேட்பாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன.
யாருக்கு, எத்தனை ஆசனங்கள் என்பதை ஏப்ரல் 8 ஆம் திகதி வாக்களிப்பின் பின்னர்தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
|