|
புளொட் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிதம்பரபுரம் பகுதிக்கு விஜயம்-
வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், புளொட் அமைப்பின் ஜேர்மன்கிளை முக்கியஸ்தர் ஜெகநாதன் மற்றும் புளொட் முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் இன்றுபிற்பகல் சிதம்பரபுரம் பிரதேச மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது அப்பகுதி மக்களால் பொதுக்கூட்டம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இங்கு உரையாற்றிய கிராமப் பெரியோர்கள், மாதர்சங்கம், கிராமிய அபிவிருத்தி சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், புளொட் அமைப்பினர் கடந்த காலங்களில் இப்பகுதிகளில் மேற்கொண்டிருந்த வேலைத்திட்டங்களை சிலாகித்துப் பேசியதுடன், கடந்த பத்து வருடகாலமாக புளொட் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இல்லாததன் காரணத்தினால் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்பகுதிகளில் எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும், எவ்வித அபிவிருத்தியும் செய்யப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர். அத்துடன் இம்முறை பொதுத் தேர்தலின்போது நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்படுவதன் மூலமே இப்பகுதியின் அபிவிருத்திப் பணிகளையும், இடம்பெயர்ந்த மக்களின் அவலங்களையும் போக்க முடியுமென்றும் தெரிவித்துள்ளனர்.
இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் தி.த.சித்தார்த்தன், முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன் மற்றும் புளொட்டின் ஜெர்மன் கிளை முக்கியஸ்தர் ஜெகநாதன் ஆகியோர், கடந்த காலங்களில் புளொட் அமைப்பு இப்பகுதிகளில் மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் விளக்கிக் கூறினர். அத்துடன் தொடர்ந்தும் தாம் இப்பகுதிகளில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், எனவே மக்கள் அனைவரும் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பூரண ஆதரவை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். இதேவேளை நேற்றையதினம் ஆச்சிபுரம் உள்ளிட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்த புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியதுடன், அப்பகுதி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களிலும் உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து பிரதேச மக்களின் போக்குவரத்து சிரமங்களைப் போக்கும் நோக்கில் ஆச்சிபுரத்திலிருந்து வவுனியா நகருக்கான தனியார் பஸ் சேவையொன்று புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன், புளொட் வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சி தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புளொட் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட புளொட் வேட்பாளர்களும், புளொட் சர்வதேச கிளை முக்கியஸ்தர்களும் செட்டிகுளம் முகாமிற்கு விஜயம்-
நங்கூரம் சின்னத்தில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரான கந்தையா சிவநேசன் (பவன்), முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், துரைசாமி சுந்தர்ராஜ் (சிவசம்பு), வரோனிகா (இந்திரா) மற்றும் புளொட் அமைப்பின் கனடா, லண்டன், நோர்வே கிளைகளின் முக்கியஸ்தர்களான செல்வம், காண்டீபன், தயா, ராஜா ஆகியோரும், திரு.தர்மலிங்கம் உள்ளிட்ட புளொட் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும் இன்று வவுனியா செட்டிகுளம் சோன் 04 நிவாரணக் கிராமத்திற்கு விஜயம் செய்தனர். இதன்போது அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டனர். தாம் குடிநீர், வீட்டு வசதி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் துன்பப்படுவதாகவும், தாம் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டால் இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து விடுபடலாமென நம்புவதாகவும் அம்மக்கள் தெரிவித்தனர். இதன்போது கருத்துரைத்த புளொட் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட புளொட் வேட்பாளர்களும், புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் முக்கியஸ்தர்களும், இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அடிப்படைத் தேவைகள் யாவும் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமென்பதில் மிகவும் அக்கறையாகவே இருக்கிறோம்.
முகாம்களில் உள்ளோரின் மீள்குடியேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். மீள்குடியமர்ந்துள்ள மக்கள் தமது விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அத்தியாவசிய உதவிகள் தேவைப்படுகின்றது. எனவே அதற்குத் தேவையான உதவிகளை வழங்கவும், திறக்காமலிக்கும் பல பாடசாலைகளையும் திறந்து கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்கச் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. அத்துடன் தடுப்பு முகாம்களில் உள்ள சிறுவர் போராளிகளை விடுவிப்பது தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தி அவர்களை விடுவிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தோம். கணிசமானளவு சிறுவர் போராளிகள் தற்போது பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். எனினும் இன்னும் பல சிறுவர் போராளிகள் தடுத்து வைக்கபட்டுள்ளனர். அவர்களையும் விடுவித்து பெற்றோரிடம் சேர்ப்பிக்க மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றோம். இப்பணிகளைத் தொடர்வதற்கு மக்களின் பூரண ஒத்துழைப்பும் ஆதரவும் எமக்குத் தேவைப்படுகிறது. எனவே பொதுத் தேர்தலின்போது நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களுக்கு மக்கள் பூரண ஆதரவை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.
|