|
சிட்னி இளைஞனுக்கு யார் பொறுப்பேற்கப்போகின்றார்கள்.
அவுஸ்திரேலியாவில் அசிட் தாக்குதல் தொடர்பாக கைதானவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு
விக்டர்.
சிட்னியில் கடந்தமாதம் சிங்கள இளைஞர்களின் வீட்டை உடைத்துச் சென்று அவர்களைத்தாக்கி அசிட் ஊற்றிய சம்பவம் எல்லோரும் அறிந்ததே. ஊர்வலம் போய்விட்டு புலிக்கொடியோடு காரில் வந்த தமிழ் இளைஞர்களை சிங்கள இளைஞர்கள் தாக்கினார்கள் தமிழ் இளைஞர்களும் திருப்பித் தாக்கினார்கள். அதில் பொலிசார் தலையிட்டு இளைஞர்களை அந்த இடத்திலிருந்து அனுப்பினார்கள்.
அன்று இரவு இந்த அசிட் ஊற்றிய நிகழ்வு நடந்தது. அதில் சம்பந்தப்பட்டதாக இளையோர் அமைப்பைச்சேர்ந்த கந்தராஜா என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். நேற்று 01.06.2009இல் இவர் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டார். நீதிமன்றம் வரும் போது தலையை தான் போட்டிருந்த மேலங்கியால் மறைத்து தன்னை அடையாளம் காணமுடியாதவாறு மறைத்துக்கொண்டார். இது அவுஸ்ரேலியாவில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் காட்டப்பட்டது.
நீதி மன்றில் கொலை முயற்;சிக்கான குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் அவருக்கு பிணையில் செல்லும் உரிமையும் மறுக்கப்பட்டு மீண்டும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அத்தோடு இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய இன்னும் ஆறு இளைஞர்கள் தேடப்பட்டு வருகின்றார்கள்.
புலம்பெயர்ந்த நாடான அவுஸ்ரேலியா ஒரு ஜனநாயக நாடு. மனிதர்களை மட்டுமல்ல விலங்குகள் பறவைகளுக்குகூட தீங்கு செய்ய சட்டத்தில் அனுமதி மறுக்கும் நாடு. இந்த நாட்டில் வந்திருக்கும் தமிழர்களின் ஒரு பிள்ளை இப்படி நடந்து கொண்டிருப்பது வேதனைப்படுவதும் வெட்கப்படுவதுமான ஒரு விடயம். அதுவும் கைது செய்யப்பட்டவர் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவர். அப்படியானவர் ஏன் இந்தக்குணத்தோடு செயற்பட்டார்? இவர் இலங்கைப்பிரச்சினைபற்றி எவ்வளவு அறிவோடு இருக்கின்றார் என்பதை ஒரு ஆய்வுக்கண்ணோட்டத்தோடு பார்த்தால் இதற்கான தண்டனையை பெறவேண்டியவர்கள் யார் என்பது புரியும். சரியான அரசியல் விளக்கம் கொடுக்கப்படாமல் புலி ஆதரவு என்று இளைஞர்களை கொடி பிடிக்கப்பண்ணியதும், ஆர்ப்பாட்டம் பண்ணப் பண்ணியதும், தமிழன் சிங்களவன் என்று இனவாதம் என்ற நஞ்சை இந்தக் குழந்தைகளின் மனதில் ஊட்டியவர்களும் இங்குள்ள புலி ஆதரவுக் கோசம் போட்டுக்கொண்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்கின்ற புலம் பெயர் புலி அமைப்பாளர்களே.
இந்த இளைஞர்கள் இலங்கைத் தமிழ் மக்கள் மேல் கொண்ட பாசத்தையும் அவர்களின் துடிப்பையும் தங்கள் பிழைப்புவாத அரசியலுக்காகவும் தாங்கள் தலைவர்களாக பந்தா பண்ணவும் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை.
இன்று தாங்கள் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருந்து கொண்டு மக்களை நேசித்த துடிப்பு மிக்க இளைஞர்களை கொலைக் குற்றவாளிகளாக மாற்றியுள்ளார்கள். இளைஞர்களை இனவாதிகளாகவும் போர் வெறி பிடித்தவர்களாகவும் மாற்றிய குற்றத்திற்காக தண்டிக்கப்பட வேண்டியது. சஞ்சை காந்தியின் பெயரைத் தாங்கிய, புலம் பெயர்நாட்டில் பாசிசத்தை வளர்க்கும் இங்குள்ள புலி அமைப்பின் தலைவரும் அவரோடு ஓத்தூதித் திரிபவர்களும் தான் என்பதை தாய் தந்தையர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் பாவிக்கும் வரை பாவித்து விட்டு இப்போ கைவிட்டுவிட்டார்கள். இனி கோடு கச்சேரி என அலையப்போவது. பெற்றவர்கள்தான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
நல்ல நாட்டிற்கு வந்து மனித நேயம் உள்ளவர்களாக வாழ வழியிருந்தும் சேர்வாரோடு சேர்ந்ததால் இன்று கொலைகாரப் பட்டத்துடன், அடையாளத்தை மறைத்தக்கொண்டு போக வேண்டிய நிலைக்கு வந்த இந்த இளைஞனைப்போல் வேறு எவருக்கும் இனி வரக்கூடாது என்பது என் விருப்பு. அதற்கான முயற்சியில் பெற்றோரே கவனமெடுங்கள். நாம் நிம்மதி இல்லாது ஓடி ஓடி இங்குவந்தவர்கள் இங்காவது எங்கள் பிள்ளைகள் நிம்மதியாக வாழட்டும். இன வெறி போர் வெறி பிடித்தவர்கள் தயவுசெய்து அந்த நாட்டில் போயிருந்து உங்கள் வீரங்களைக் காட்டுங்கள். ஓ இங்குதான் உங்களுக்கு காசு சேர்க்க முடியும் நீங்கள் போக மாட்டீர்கள்.
______________________________________________________________________________________
அவுஸ்திரேலியாவில் அசிட் தாக்குதல் தொடர்பாக கைதானவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு
அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னி பகுதியில் இரு இலங்கை மாணவர் மீது அசிட் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதான அமலதீபன் ஸ்ரீஸ்கந்தராஜா (23 வயது) என்பவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மேற்கு சிட்னியின் வெஸ்ற்மீட் பகுதியில் கடந்த மே 17 இல் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அமலதீபன் ஸ்ரீஸ்கந்தராஜாவை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.
சதுரிகா வீரசிங்க (27 வயது), ஜயசிறி வட்டவல (22 வயது) ஆகிய இருவரும் தமது வீட்டிலிருந்தபோது குழுவொன்றினால் தாக்கப்பட்டனர். இதில் வயிற்றில் குத்தப்பட்டு ஒருவர் காயமடைந்ததுடன், தோள் மூட்டில் முறிவும் ஏற்பட்டுள்ளது.
ஒருவரை கைது செய்துள்ள நிலையில் ஏனையோரை தேடி வருவதாக விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் தாக்குதல் படைத் தளபதி அல்பேர்ட் ஜோசப் தெரிவித்ததாக ஏ.என்.ஐ. செய்திச் சேவை நேற்று புதன்கிழமை குறிப்பிட்டிருக்கிறது.
டோர்வூல் தாக்குதல் படையினரால் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக ஆண் ஒருவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நேற்றுக் கைதானவர் மீது வேறு குற்றச்சாட்டுகளும் உள்ளன. சம்பவத்தைத் தொடர்ந்து வாகனத்தில் உடன் சென்றவரை அடையாளம் காட்டத் தவறிய குற்றச்சாட்டையும் கைது செய்யப்பட்டவர் எதிர்நோக்கியுள்ளார்.
பாரதூரமான குற்றத்தை மறைத்ததாக மேலும் இருவர் மீது ஏற்கனவே குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமலதீபனை கைது செய்திருப்பது தொடர்பாக பாதிக்கப்பட்ட இருவருக்கும் அறிவிக்கப்பட்டிருப்பதாக புலனாய்வு இன்ஸ்பெக்டர் ஜோசப் கூறியுள்ளார்.
காயமடைந்த இருவரும் குணமடைந்து வருகின்றனர்.
|