|
16400 வாக்குகள் வீணடிக்கப்பட்டது ஏன்?
-ஈழப்பிரியன்
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் குறித்து பலரும் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து விட்டார்கள். தமிழ் மக்கள் மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை செய்து முடித்துவிட்டார்கள் என்றே பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். ஆனால் அந்த தேர்தலில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பற்றி யாரும் கருத்தில் கொள்ளாததால் இதனை எழுதவேண்டியாகியிருக்கின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக இரண்டு தடவைக்கு மேல் பதவி வகித்த சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்ததுமே அவரை நோக்கி பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அவர் ஜனாதிபதியிடம் பணத்தை வாங்கிக் கொண்டுதான் இந்த முடிவுக்கு வந்தார் என்று மற்றுமொரு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேரடியாகவே குற்றம்சாட்டினார். சிவாஜிலிங்கம் கிட்டத்தட்ட துரோகியாகவே ஆக்கப்பட்டார். தன்னை துரோகி அல்ல என்று நிரூபிப்பதற்காக சிவாஜிலிங்கம் பாடாதபாடு பட்டபோதிலும் அது முடியாமல் போயிற்று.
வேலுப்பிள்ளையின் சடலத்தை பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அவர்மீது கருணை காட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும் அதுவும் நடைபெறவில்லை. கடைசியில் அவர் பெற்ற வாக்குகள் வெறும் மூவாயிரம் மட்டுமே.
ஆனால் இந்தத் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா(113788), மகிந்த ராஜபக்ச(44154), சிவாஜிலிங்கம்(3205) தவிர்ந்த ஏனைய பத்தொன்பது வேட்பாளர்களும் யாழ். மாவட்டத்தில் பெற்ற வாக்குகள் 16400. பல வேட்பாளர்கள் தத்தமது சொந்த கிராமங்களில் பெற்ற வாக்குகளைவிட யாழ். மாவட்டத்தில் பெற்ற வாக்குகள் அதிகம். இந்த அசாதாரண முடிவுக்கு என்ன காரணம்?.
1) மக்கள் வாக்குச்சீட்டுக்களை படித்துப்பார்க்க தெரியாது இருந்தார்கள்.
2) வெற்றி பெறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட சரத் பொன்சேகாவுக்கோ, அல்லது மகிந்த ராஜபக்சவுக்கோ வாக்களிக்க விரும்பவில்லை.
3) வாக்களிக்க போகவேண்டும் என்று யாரோ நிர்ப்பந்தித்தார்கள். அதனால் போய் வாக்களிப்பது ஆனால் முக்கிய வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதில்லை.
இந்த மூன்று காரணங்களுமே இருக்கமுடியும். அதில் முதலாவது காரணம் நிச்சயமாக யாழ்ப்பாண வாக்காளர்களுக்கு பொருத்தமானதாக இருக்காது.
இரண்டாவது காரணம் என்றால், அவர்கள் வாக்களிக்காமலே இருந்திருக்கலாம். வாக்களிக்க போய், தமக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத இந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவேண்டிய தேவை இருந்திருக்காது.
ஆக, மூன்றாவது காரணமே இறுக்கமாகத் தெரிகின்றது. அவர்களை யாராவது கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கலாம். அவ்வாறு வாக்களிக்க போகாவிட்டாhல் அவர்களால் தமக்கு ஆபத்துவரலாம் என்பதற்காக வாக்களிக்க சென்றிருக்கலாம். ஆனால் முக்கிய வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை விரும்பாததால் தமது வாக்கை அந்த முகம்தெரியாத வேட்பாளர்களுக்கு போட்டிருக்கலாம்.
இந்த காரணமமே வலுவான காரணம் என்றால், அவர்களை வாக்களிக்க வற்புறுத்தியவர்கள் இனம்காணப்படாதவரை யாழ்ப்பாணத்தில் ஜனநாயகம் என்பது கானல் நீராகத்தான் இருக்கும்.
-ஈழப்பிரியன்
|