|
பிரச்சினையின் தீர்வுக்காகவே மக்களின் வாக்குகள்
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக எல்லாத் தமிழ்க் கட்சிகளும் ஐக்கியப்பட வேண்டும் என்பது அடிக்கடி காதில் விழும் கோரிக்கை. விசேடமாக, தேர்தல் காலங்களில் ஏறக் குறைய எல்லாக் கட்சிகளும் இக் கோரிக்கையை முன் வைக்கின்றன. தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஐக்கியப்பட்டுச் செயற்படுவது நல்ல விடயம்.
ஆனால் அது பெயரளவிலான ஐக்கியமாக அல்லாமல் கொள்கை அடிப்படையிலான ஐக்கியமாக இருப்பதன் மூலமே தமிழ் மக்கள் பயன் பெற முடியும். அதுவும் நடைமுறைச் சாத்தியமான கொள்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
தமிழ்க் கட்சிகள் ஐக்கியமாகச் செயற்பட்ட அனுபவம் கடந்த காலங்களில் உண்டு. வடக்கில் நீண்ட கால அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் அங்கம் வகித்த தமிழர் விடு தலைக் கூட்டணி முதலில் அரங்குக்கு வந்தது. பின்னர், அதனுடன் வேறு சில கட்சிகளும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உதயமாகியது. இவையிரண்டும் அவற்றின் பிரதான கொள்கையாகிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் மோசமாகத் தோல்வியடைந்து விட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நான்கு பிரிவுகளாகப் பிளவுபட்டுச் செயற்படுகின்றது. தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது.
அதிலிருந்து பிரிந்து தமிழ்க் காங்கிரஸ் தனியாகத் தேர்தல் களத்தில் நிற்கின்றது. கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சிவாஜிலிங்கமும் ஸ்ரீகாந்தாவும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் தனிக்கட்சி அமைத்திருக்கின்றார்கள். ஆனந்தசங்கரி கூட்டமைப்பிலிருந்து ஏற்கனவே வெளியேறித் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உத்தியோகபூர்வப் பேச்சாளராகச் செயற்படுகின்றார்.
இவர்கள் எல்லோரும் இனப்பிரச்சினைக்கு ஒரே தீர்வை முன்வைத்து ஐக்கியப்பட்டவர்கள். தனிநாடு தான் இவர்கள் முன்வைத்த தீர்வு. இத் தீர்வை அடைய முடியாத நிலையில் இன்று பிளவுபட்டுத் தனித் தனியாகச் செயற்படுகின்றார்கள்.
தனிநாடு நடைமுறைச் சாத்தியமற்றது என்றும் அக்கொள்கை அழிவுக்கே இட்டுச் செல்லும் என்றும் நிதானமான சிந்தனையாளர்கள் பலர் சுட்டிக் காட்டியதை இத் தலைவர்கள் ஏற்கவில்லை. தங்கள் வீராவேசப் பேச்சுகள் மூலம் மக்களை நம்ப வைத்தார்கள். அதாவது மக்களைத் தவறாக வழிநடத்தினார்கள்.
இதன் விளைவைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பட்டு வேட்டி பற்றிய ஆசையை மூட்டிக் கட்டியிருந்த கோவணத்தையும் கவர்ந்து செல்வது போல, மக்களிடம் தனிநாட்டு நம்பிக்கையை வளர்த்து இன்று அவர்களை இத் தலைவர்கள் பேரவலத்துக்குள் தள்ளியிருக்கின்றார்கள். அதிகாரப் பகிர்வுக்காகக் கிடைத்த சந்தர்ப்பத்தை நிராகரிக்காது விட் டிருந்தால் தமிழ் மக்களுக்கு இந்த அவலம் நேர்ந்திருக்காது.
முழுமையான தீர்வை நோக்கிய நகர்வுக்கும் சுலபமாக அமைந்திருக்கும். தனிநாட்டு மாயை மூலம் மக்களுக்கு அழிவை ஏற்படுத்திய தலைவர்கள் தங்கள் தவறை இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. மீண்டும் தேர்தல் களத்தில் நிற்கின்றார்கள். பிரச்சினையின் தீர்வுக்காக எந்தக் கொள்கையையும் இப்போது அவர்கள் முன்வைக்கவில்லை. எந்தவொரு கொள்கையும் இல்லாமலே மக்களிடம் வாக்குக் கேட்கின்றார்கள்.
முகத்துக்காகவும் வீரதீரப் பேச்சுகளுக்காகவும் வாக்களித்துப் பின்னடைவைத் தேடிக்கொண்டது போதும். பிரச்சினையின் தீர்வுக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும். நடைமுறைச் சாத்தியமான வழி மூலம் ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வை அடைவதைத் தவிர இன்று தமிழ் மக்களுக்கு வேறு மார்க்கம் இல்லை. இதற்கான கொள்கையைத் தெளிவாக முன்வைப்பவர்களை மக்கள் இனங்கண்டு ஆதரிக்க வேண்டும்.
- தினகரன் ஆசிரியர் தலையங்கம்
|