|
பொன்சேகா மருமகன் பதுங்கல்: இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் வீட்டில் பொலிசார் சோதனை
கொழும்பு, மார்ச் 4: முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மருமகன் பதுங்கியிருப்பதாகக் கூறி இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் வீட்டில் பொலிசார் சோதனை நடத்தினர்.
இலங்கை முன்னாள் ராணுவ தளபதியும், அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவருமான பொன்சேகாவின் மருமகன் தனுனா திலகரத்னே. ராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் பல லட்சம் முறைகேடு செய்ததாக தனுனா மீது அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து தற்போது அவர் தலைமறைவாக உள்ளார்.
தமது உறவினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ஹசன் திலகரத்னே வீட்டில் தனுனா பதுங்கியிருக்கலாம் என போலீஸப்ருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து கொழும்பு மாவட்டம் பில்லியான்டலா பகுதியில் உள்ள ஹசன் திலகரத்னே வீட்டில் செவ்வாய்க்கிழமை சி.ஐ.டி. போலீஸப்ர் சோதனை நடத்தினர். இத்தகவலை சி.ஐ.டி.இயக்குனர் விஜய அமரசிங்கே தெரிவித்ததாக கொழும்பு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சோதனை நடந்ததை ஹசன் திலகரத்னே வீட்டில் உள்ளவர்களும் உறுதி செய்ததாகவும் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனுனா மீது அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அதன் பேரில் விசாரணைக்காக கைது செய்யவே இச்சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹசன் திலகரத்னே 2003-ம் ஆண்டில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விளையாடியவர். தற்போது மேற்கு மாகாண கவுன்சிலராக உள்ளார். இலங்கையில் ஏப்ரல் 8-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பொன்சேகா தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். சோதனை நடைபெற்ற நேரத்தில் ஹசன் திலகரத்னே வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
|