|
நளினி விடுதலை தொடர்பான மேல்முறையீடு: சுப்பிரமணியன் சுவாமிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
சென்னை, பிப்.5: நளினி விடுதலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
""நளினி விடுதலை தொடர்பாக பத்திரிகைகளில் சுவாமி தெரிவிக்கும் கருத்துகள் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவது போல் உள்ளன. இது தொடர்ந்தால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள நளினி, கடந்த 19 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். முன் கூட்டியே விடுதலை கோரி நளினி தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு நிராகரித்தது.
இதை எதிர்க்கும் வழக்கில், ""சட்டப்படி ஆலோசனை குழுவைக் கூட்டி நளினி விடுதலை தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்'' என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
""ராஜீவ் கொலை வழக்கில் நளினியின் தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இதே வழக்கில் நளினி மீண்டும் மன்னிப்பு கோர முடியாது. இதுதொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்று கோரி சுப்பிரமணியன் சுவாமி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அதே உத்தரவின் மற்றொரு பிரிவை எதிர்த்து நளினி தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதி எலிப் தர்மாராவ், நீதிபதி என்.பால்வசந்தகுமார் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்குகள் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன், ""நளினி விடுதலை தொடர்பான ஆலோசனைக் குழுவின் அறிக்கை அரசுக்கு இன்னும் வரவில்லை. இந்தப் பிரச்னையில் மத்திய அரசை கலந்தாலோசிக்காமல் மாநில அரசு தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்காது'' என்று தெரிவித்தார்.
நளினி தரப்பு வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், ""இந்த வழக்கில் நேரில் ஆஜராக நளினி அனுமதி கோரியுள்ளதையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்று கோரினார்.
அதற்கு சுப்பிரமணியன் சுவாமி தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் எதிர்ப்பு தெரிவித்தார்.
""மேல்முறையீட்டு வழக்கில் தனது தரப்பில் நீதிமன்றத்தில் வாதாட மூத்த வழக்கறிஞரை சுவாமி நியமித்துள்ளார். ஆனால், உயர் நீதிமன்றத்துக்கு வெளியே பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வழக்குத் தொடர்பாக அவரே வாதாடுகிறார். உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குத் தொடர்பாக அவர் வெளியில் கருத்து தெரிவிக்கலாமா? இதுதொடர்ந்தால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
சுப்பிரமணியன் சுவாமி சார்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், எதிர்காலத்தில் இது நடைபெறாது என்று உறுதியளித்தார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 10}ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
|