|
மிச்சம் பகுதியில் வொட்கா போத்திலைப் பயன்படுத்தி முரட்டுத்தனமாக வன்செயல் புரிந்த குண்டர்களுக்கு சிறைத் தண்டனை
- ஜெமி ஹென்டர்சன்
 
சித்திரவதை புரிந்து கிலியூட்டும் ஒரு ஸ்ரீலங்காவாசியும் அவரது செயலுக்கு உடந்தையாய் இருந்தவரும், ஒரு கடைக்காரரின் மனைவியை அவளது சிறுவயதுப் பிள்ளையின் முன்பாக கொடூரமாகத் தாக்கியதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஆறுமாதங்களுக்கு மேலாகவே ஸ்ரீலங்காவை பிறப்பிடமாகக் கொண்ட இந்த இரண்டு மனிதர்களும், லண்டன் மிச்சம், தேவாலய வீதியில் உள்ள தேவாலய மினி சந்தை உரிமையாளரிடமிருந்து தங்கள் இஷ்டம்போல பொருட்களை எடுத்து வந்துள்ளார்கள், மற்றும் அதைப்பற்றி காவல் துறையினரிடம் முறைப்பாடு செய்தால் அவர்களை கொன்று விடுவதாக மிரட்டியும் வந்துள்ளார்கள்.
தம்மைத்தாமே குண்டர்கள் என விபரித்துக் கொள்ளும் இந்த நபர்கள் மேற்கொண்ட இந்தத் தொடர் திருட்டுகள் 2011 ஜனவரி 15, சனிக்கிழமையன்று கடை உரிமையாளருக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எதிரான வன்முறைத் தாக்குதலாக உருவெடுத்தது.
உரிமையாளரின் 46 வயதான அவரது மனைவி தனது பத்து வயது மகனுடன் கடையில் இருந்த போது இந்தக் குண்டர்களில் ஒருவன் 26 வயதான கடை உதவியாளர் ஒருவரது தலையில் வொட்கா போத்தல் ஒன்றினால் தாக்கி விட்டு உரிமையாளரின் மனைவியை அடித்து நிலத்தில் தள்ளிவிட்டு உதைத்திருக்கிறான்.
31 வயதான அரிகரன் செந்திவேல் மற்றும் 37வயதான சுகுமார் சாந்தரட்னம் ஆகிய இருவருக்கும் கடந்த ஜனவரி 30 ந்திகதி திங்கட்கிழமை கிங்ஸ்டன் முடிக்குரிய நீதிமன்றத்தினால், துன்பம் உண்டாக்கும் உடற்காயங்களை விளைவித்தமை, உண்மையான உடற் தீங்கினை ஏற்படுத்தியமை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டமை போன்ற குற்றங்களுக்காக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது.
சம்பவம் நடைபெற்றபோது அந்த இரண்டு பேரும் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடியபோதிலும், வேறொரு சம்பவத்தைக் கையாள்வது சம்பந்தமாக தற்செயலாக அந்த இடத்தில் இருக்க நேர்ந்த மேர்ட்டன் காவல்துறை உத்தியோகத்தர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
இந்த விசாரணையை தலைமையேற்று நடத்திய துப்பறியும் உத்தியோகத்தரான சார்ஜன்ட் மாட்டின் வூட்ரோப் இதுபற்றிக் கூறுகையில் “ மிச்சம் பகுதியில் உள்ள தங்கள் சமூகத்தினருக்கு சேவையாற்றி கடுமையாக உழைத்துவரும் உள்ளுர் கடைக்காரர்களுக்கு இந்தத் தாக்குதல் அச்சமும் ஆத்திரமும் ஊட்டுவதாக உள்ளது” எனக் கூறினார்.
“கடை உரிமையாளர்களின் தைரியம் காரணமாகவும் மற்றும் அவர்களின் கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கண்காணிப்பு ஒளிப்படக் கருவியிலிருந்து கிடைத்த தெளிவான ஆதாரங்கள் காரணமாகவும்தான் இந்த இரண்டு குற்றவாளிகளும் குற்றம் புரிந்துள்ளார்கள் என்று சரியாக நிரூபிக்கப்பட்டுத் தண்டிக்கப் பட்டுள்ளார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.
அவரது சகாவான துப்பறியும் காவலர் ஜென் லை கூறுகையில்,அவர்களுக்கு ஏற்பட்ட “அதிர்ச்சிகரமான தாக்குதல்” என அவர் விபரித்த தாக்குதல்களிலிருந்து மீண்டுவந்துள்ள பாதிப்புக்கு உள்ளானவர்கள் தங்கள் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பி வருகிறார்கள் என்றார்.
சாந்தரட்னம் ஆரம்பத்தில் பிரித்தானியாவுக்கு வந்தது ஸ்ரீலங்காவில் நடக்கும் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிப்பதற்காகவே மற்றும் அங்கு ஒரு மனிதாபிமான உதவியாளராக வேலை பார்த்தபோது அவர் பிடிக்கப்பட்டு மனநோய் சம்பந்தமான பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று சொல்லப்பட்டதையும் நீதிமன்றம் கேட்டது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர் பல வாரங்களாக மிகவும் கொடுமையாக சித்திரவதைப் படுத்தப்பட்டதால் அவரது உடம்பில் சிகரட் சூட்டுக்காயங்களுக்கான நூற்றுக்கணக்கான தளும்புகள் காணப்படுகின்றன.
அவருக்கு நிகழ்த்தப்பட்ட சோதனைகள் மூலம், சாந்தரட்னத்துக்கு “பரனோயிட் ஸ்கிசோஃப்ரினியா” மற்றும் பிந்திய மனஉளைச்சல் கோளாறு இருப்பதாக கண்டறிப்பட்டுள்ளது.
தீர்ப்பு வழங்கும்போது நீதிபதி ஜோர்ஜினா கென்ட், இந்த இரண்டு மனிதர்களும் மிருகத்தனமான தாக்குதல்களை நடத்திய அதேவேளை பண இயந்திரந்தை இடம் பெயர்த்துவதற்கும் முயற்சித்திருக்கிறார்கள் என்பதை பாதுகாப்பு கண்காணிப்பு ஒளிப்படக் கருவியிலிருந்து கிடைத்த தெளிவான ஆதாரங்கள் மூலம் தெட்டத்தெளிவாகத் தெரிகிறது எனக்கூறினார்.
நீதிபதி கென்ட் மேலும் தெரிவித்தது, “ நீங்கள் வேண்டுமென்றே உங்களுக்கு எதுவித நட்டமுமின்றி கடைக்கு சேதம் விளைவித்ததினால் உரிமையாளரும் அவரது மகனும், அச்சத்தால் அடங்கி ஒடுங்கிப் போயிருக்கிறார்கள். அவள் பயந்துபோயுள்ளாள் என. தெளிவாகத் தெரிகிறது. நீங்கள் அவளை தடுத்து நிறுத்த முயன்றபோதும் அவள் உங்களிடமிருந்து தப்பிக்கவே முயற்சி செய்திருக்கிறாள்”.
“தான் அனுபவித்த உணர்ச்சிபூர்வமான துயரத்தை அவள் விரிவாக விபரித்தாள். அவள் தான்மட்டும் இந்த பயங்கரத்தை அனுபவிக்கவில்லை ஏனெனில் அவளது பத்து வயது மகனும் இந்த பயங்கரமான நிகழ்ச்சிக்கு சாட்சியாக இருந்துள்ளான்”.
இரண்டு மனிதர்களுக்கும் 36 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது,ஆனால் அவர்கள் 378 நாட்களை ஏற்கனவே சிறையில் கழித்துவிட்டதால்,இந்த இருவரும் ஒருவருட காலத்துக்குள் விடுதலையாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
(நன்றி: விம்பிள்டன் கார்டியன்)
தேனீமொழிபெயர்ப்பு: எஸ்.குமார்.
|