|
மக்கள் 'டிவி' அலுவலகம் மீது மா.கம்யூனிஸ்ட் தாக்குதல் : பதிலுக்கு பா.ம.க., ரகளை
சென்னை : மார்க்சிஸ்ட் தலைவர் வரதராஜன் மரணம் குறித்து வெளியான செய்தியால், மக்கள் "டிவி' அலுவலகம் மீது, மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் கல் வீசி தாக்கினர். இதையடுத்து, மா.கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பா.ம.க.,வினர் அடித்து நொறுக்கினர். இச் சம்பவம், சென்னையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
மார்க்சிஸ்ட் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.ஆர்.வரதராஜன், ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். வரதராஜன் தற்கொலை செய்து கொள்ளவில்லை; கொலை செய்யப்பட்டுள்ளார் என மக்கள் "டிவி'யில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இச்செய்தி தவறானது என மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற் காக சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள மக்கள் "டிவி' அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். நேற்று காலை 11 மணிக்கு மார்க்சிஸ்ட் கட்சி தென் சென்னை மாவட்டச் செயலர் சண்முகம், வடசென்னை மாவட் டச் செயலர் பீமா ராவ், மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் உட்பட 100க்கும் மேற் பட்டோர், மக்கள் "டிவி' அலுவலகம் முன் கூடினர். அப்போது திடீரென மார்க்சிஸ்ட் கட்சியினர், மக்கள் "டிவி' அலுவலகம் மீது கல் வீசி தாக்கினர். "டிவி' அலுவலக கண்ணாடிகள் நொறுக்கின. அலுவலகத் திற்கு உள்ளேயும் செங்கற்கள் விழுந்ததில், மக்கள் "டிவி' ஊழியர்கள் காயமடைந்தனர்.
மக்கள் "டிவி' இணை ஆசிரியர் பாஸ்கர சந்திரன், நுங்கம் பாக்கம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சண்முகம், பீமா ராவ், பாலகிருஷ்ணன் உட்பட 101 பேர் கைது செய்யப்பட்டனர். மக்கள் "டிவி' அலுவலகம் தாக் கப்பட்ட தகவலறிந்த பா.ம.க., வினர் சிலர், சென்னை தி.நகர் வைத்தியநாத தெருவில் உள்ள மா.கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு, இரண்டு கார், மூன்று பைக் மற்றும் அலுவலக கண்ணாடிகளை பா.ம.க.,வினர் அடித்து நொறுக்கினர். மார்க்சிஸ்ட் கொடிக் கம்பம் உடைக்கப்பட்டதுடன், மார்க்சிஸ்ட் தலைவர் ராமமூர்த்தியின் படமும் உடைக் கப்பட்டது. மா.கம்யூனிஸ்ட் அலுவலகம் உள்ள தெருவில், பா.ம.க., கொடியுடன் ஒரு கார் வந்தது. அந்த காரில் பா.ம.க., இளைஞர் அணி துணைத் தலைவர் குமார் இருந்தார். ஆத்திரமடைந்த மார்க் சிஸ்ட் தொண்டர்கள், அவரை விரட்டிச் சென்றனர். அவர்களை தடுத்து சமாதானப் படுத்திய போலீசார், குமாரை கைது செய்தனர். குமார், பா.ம.க., கவுன்சிலர் வெங்கடேஷ் உட்பட 14 பா.ம.க., வினரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு பா.ம.க., கவுன்சிலர் பிரகாசை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: வரதராஜன் மரணம் குறித்த செய்தி தொடர்பாக விளக்கம் கேட்பதற்காக, மக்கள் "டிவி' ஆசிரியரை சந்திக்க மார்க்சிஸ்ட் தொண்டர்கள் சென்றனர். அப் போது, மக்கள் "டிவி' அலுவலகத்திற்குள் இருந்து தான் மார்க் சிஸ்ட் கட்சியினர் மீது கற்கள் வீசப்பட்டன. மறைந்த தலைவர் வரதராஜன் இறுதி நிகழ்ச்சிகள் நடந்து 10 நாட்கள் கடந்துவிட்ட பின், இன்னும் அரசு மற்றும் போலீஸ் தரப்பில் பிரேத பரிசோதனை முடிவுகள் வரவில்லை. பா.ம.க., கவுன்சிலர் பிரகாஷ் தலைமையில் 50 பேர் அடியாட்களுடன் வந்து, எங்கள் அலுவலகத்தை தாக்கினர். பா.ம.க.,வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறினார்.
தாக்குதல் சம்பவம் குறித்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: மக்கள் "டிவி' அலுவலகம் மீது, மா.கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வன் முறை வெறியாட்டத்தில், அலுவலகம் கடுமையாக சேதப்படுத் தப்பட்டுள்ளது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் விலை உயர்ந்த ஒளிப்பதிவு கருவிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு ஒளிப்பதிவாளர்கள், பெண் ஊழியர்கள் உட்பட பல அலுவலக ஊழியர்களும் படுகாயம் அடைந்துள்ளனர். பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம் குறித்து மற்ற எல்லாரையும் விட மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் மிக அதிகமாக பேசி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் நடத்தி வரும் வன்முறை கலாசாரத்தை இன்று தமிழகத்திலும் அரங்கேற்றி உள்ளனர்.
இந்த வன்முறை வெறியாட் டத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். மறுப்பு அறிக்கை வெளியிட்டால், அதை உடனடியாக ஒளிபரப்பு செய்வதாக மக்கள் "டிவி' சார்பில் உறுதி அளிக்கப் பட்டுள்ளது. சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு, மக்கள் "டிவி' அலுவலகத்தை தாக்கி, ஊழியர்களை காயப்படுத்தி, அலுவலகத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
|