|
பழைய கதை இன்றும் தொடர்கிறது
ஒன்றுபட்ட போராட்டத்துக்கென வெளிக்கிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிளவுபட்டு நிற்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு மேற்கொண்ட முடிவின் விளைவே இது. பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவுக்குக் கூட்டமைப்பைத் தள்ளியவர்கள் இரண்டு முன்னாள் பிரமுகர்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றது. இவர்களில் ஒருவர் பல்கலைக் கழகத்துடனும் மற்றவர் நீதித் துறையுடனும் சம்பந்தப்பட்டவர்கள். வெற்றிக் காற்று மற்றப் பக்கம் வீசுகின்றது என்று கூட்டமைப்புத் தலைமையை இவர்கள் நம்ப வைத்திருக்கின்றார்கள்.
இந்த முடிவினால் கூட்டமைப்பு மூன்றாகப் பிளவுபட்டுவிட்டது. இந்தப் பிளவு பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது எனக் கூற முடியாது.
முன்னாள் பிரமுகர்கள் பிழையாக வழிநடத்தும் அளவுக்குக் கூட்டமைப்புத் தலைமை தடுமாற்றத்தில் இருந்ததா எனச் சிலர் கேட்கலாம். ஏமாற்றம் தடுமாற்றத்துக்கு வழிவகுப்பது வழமை. இவர்கள் புலிகளை முழுக்க முழுக்க நம்பினார்கள். புலிகள் தனிநாடு பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களுடன் சங்கமம் ஆகினார்கள். அதில் பலத்த ஏமாற்றம்.
அந்த ஏமாற்றத்தில் ஏற்பட்ட தடுமாற்றத்தில் இனப் பிரச்சினையின் தீர்வுக்குத் தங்கள் கொள்கை என்ன என்பதை இன்னும் அவர்களால் கூற முடியவில்லை. கொள்கைத் திட்டம் தயாராகின்றது என்பதையே இன்றுவரை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் இது ஒரு இருண்ட காலம் எனக் கூறலாம். தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களில் எண்ணிக்கையில் கூடுதலானவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். இதனால் தாங்களே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று அவர்கள் உரிமை கோருகின்றார்கள். முன்பெல்லாம் தமிழ் மக்களுக்குத் தலைமை வகித்தவர்கள் சரியாகவோ பிழையாகவோ இனப் பிரச்சினையின் தீர்வுக்கு ஒரு கொள்கையை முன்வைத்தார்கள். இப்போது தலைமை வகிப்பதாக உரிமை கோரும் கூட்டமைப்பிடம் கொள்கை இல்லை. கொள்கை இல்லாத தலைமையின் காலத்தை இருண்ட காலம் என்று சொல்லலாம் தானே.
|