|
பிள்ளையான் குழுவினரின் ஆயுதங்களை களையுமாறு கோரி தேர்தல் ஆணையகத்திற்கு முன்னால் எதிர்ப்பு போராட்டம்
பிள்ளையான் குழுவினரின் ஆயுதங்கள் களையப்பட்டு, கிழக்கில் நியாயமான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தன.
தேர்தல் ஆணையகத்திற்கு முன்னால் நடைபெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் ஆணையாளருக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் இன்று பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமான இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிள்ளையானுக்கு காட்டிக் கொடுத்துள்ளதாக மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
ஆயுதக்குழுவொன்றுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களமிறங்கிய முதல் சந்தர்ப்பம் இதுவென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்காக அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கியதாகவும், தமது கட்சி வன்முறைக்கு எதிரான கட்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி அதிகாரத்திற்கு உள்ள பேராசையின் காரணமாக ஆயுதக்குழுவொன்றுடன் இணைந்து கட்சியை காட்டிக் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தல்கள் மிகப் பயங்கரமான சூழ்நிலையின் கீழே நடைபெறுகின்றது. ஆயுதமேந்திய பிள்ளையான் குழு சுதந்திரமாக மக்கள், தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமையை முற்று முழுதாக பறித்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஆதரவிலேயே இந்த ஆயுதக் குழுக்கள் இயங்குகின்றன. இதனால் இது குறித்து ஜனாதிபதியிடம் முறையிடுவதில் அர்த்தமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ள ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கு அனைவரும் அணி திரள வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
தேர்தல் ஆணையாளர் வழமைபோன்று அரசியல் அழுத்தங்களுக்கு உள்ளாகாமல் நேர்மையாக கடமையாற்றுவார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கிழக்கு தேர்தல்களில் போட்டியிடும் ஆயுதக் குழுவான பிள்ளையான் குழுவினரின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சத்தியாக்கிரக போராட்டம் தொடர்ச்சியாக தேர்தல் தினம் வரை முன்னெடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆயுததாரிகளின் ஆயுதங்கள் களைப்பட வேண்டுமென அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் தினமன்று சட்டவிரோதமாக ஆயுததந்தரிகள் எவரும் சஞ்சரிக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டுக் குழுவின் (கபே) சார்பில் சட்டத்தரணி ஸ்ரீரால் குணதிலக்க இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார். தேர்தல் ஆணையாளர், பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் சட்ட மா அதிபர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களின் போது சட்டவிரோதமாக எவரும் ஆயுதந்தரித்திருக்கக்கூடாதென உத்தரவிடுமாறு இந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
17ஆவது திருத்த சட்டமூலத்தின் அடிப்படையில் நியாயமானதும், சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடாத்த தேர்தல் ஆணையாளரும், பொலிஸ் மா அதிபரும் கடமைப்பட்டிருப்பதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-லங்கா டிஸ்நெற்
|