|
உபதேசம் மட்டும் உதவாது
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தொடர்ந்து கொண்டிருந்த தாக்குதல் தற்போது கொலைகளாகப் பரிணமித்துள்ளது. இது ஒரு ஆபத்தான போக்கு.
சனிக்கிழமையன்று பஞ்சாபைச் சார்ந்த நிதின்கார்க் என்ற 25 வயது இளைஞர் ஆஸ்திரேலியாவில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். இவ்வாறு ஒரு இந்தியர் கத்திக்குத்துக்கு பலியானது இதுவே முதல்முறை. கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இந்திய மாணவர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதலின் ஒரு பகுதி என பொதுவான கருத்து உண்டு. ஆனால், ஆஸ்திரேலிய அரசு அதை மறுத்துள்ளது. தனிப்பட்ட காரணம் என்று கூறுகிறது.
இந்நிலையில் மேலும் ஒரு இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் வில்பிரிக் பகுதியில் சாலை ஒரத்தில் எரிந்து கருகிய நிலையில் காணப்பட்ட சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் உடல் இந்தியர் என அறியப்பட்டுள் ளது. இதற்கு சம்பளத் தகராறே காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்லும்போது கொடுக்கும் வாக்குறுதிக்கும், அங்கே கொடுக்கும் சம்பளத்திற்கும் சம்பந்தம் இருப்பதில்லை. இதனால் பல்வேறு பிரச்சனைகளும் தகராறுகளும் ஏராளமாக நடப்பதாக ஆஸ்திரேலிய ஏடுகளே செய்திகள் வெளியிடுகின்றன.
ஆக வெளிநாடு செல்லும் இந்தியர்களின் வாழ்க்கைக்கும் உத்தரவாதம் இல்லை. கொடுக்கப்படுகிற வாக்குறுதிகளும் காப்பாற்றப்படுவதில்லை. இதையெல்லாம் தடுக்கவோ, முறைப் படுத்தவோ இந்திய மத்திய அரசு தயாரில்லை.
ஆஸ்திரேலியாவில் என்ன நடக்கிறது? அங்கு கல்வி ஒரு பெரிய வியாபாரப் பொருளாக்கப்பட்டுவிட்டது. இந்திய மாணவர்களை அங்கே கொண்டு செல்ல ஏராளமான ஏஜென்சிகளும் இந்தியாவில் செயல்படுகின்றன. இந்த கல்வி வியாபாரத்தால் ஆஸ்திரேலிய மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், இந்தியாவிலிருந்து செல்லும் இந்திய மாணவர்கள் அங்கே தங்கள் செலவை ஈடுகட்ட குறைந்த சம்பளத்தில் பணியில் ஈடுபடுகிறார்கள். இதனாலும் ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு வேலை இழப்பும், சம்பளக்குறைப்பும் ஏற்படுகிறது. இதனால் அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் பெருகும் அதிருப்தியை அங்குள்ள இனவெறி அமைப்புகள் விசிறி விட்டு மோதலாக வெடிக்கச் செய்கின்றன. உண்மையில் சுரண்டல் வர்க்கத்தின் லாப வெறிக்காக இந்திய-ஆஸ்திரேலிய மாணவர்கள், இளைஞர்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை.
தங்கள் பாதுகாப்பை தாங்களே செய்து கொள்ள வேண்டுமென இந்திய மத்திய அரசு கூறுவதன் உள்ளர்த்தம் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. அதேபோல இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா போவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என்று சொல்லுகிற இந்திய மத்திய அரசு, அவர்களுக்கு இந்தியாவில் படிக்கிற வாய்ப்பு உறுதி செய்யப்படுமா என்பதை தெளிவுபடுத்தவில்லை.
நமது இளைஞர்கள் விரும்புகிற வரை கல்வி கற்கிற வாய்ப்பை இந்திய மண்ணிலேயே ஏற்படுத்துவதும்; வேலை வாய்ப்பை உறுதி செய் வதும்தான் நிரந்தரத் தீர்வாக முடியும். அதற்கு இந்திய ஆட்சியாளர்களின் கொள்கை அடியோடு மாற வேண்டும். அந்த திக்கை நோக்கி அரசை உந் தித்தள்ள இந்த மரணங்களில் விளைந்த கோபம் உதவட்டும்.
|