|
கிழக்குத் தேர்தல்கள் தொடர்பான ஆய்வு முடிவுகளினால் அரசாங்கம் குழப்பமடைந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும்; தேர்தல் குறித்து கிழக்கு மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் அரசாங்கத்தை குழப்பமடையச் செய்துள்ளதாகத் தெரியவருகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் ஆய்வு பணிகளுக்காக ஆறு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.கிழக்கில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நிறைவடைந்தவுடன் 3 குழுக்கள் ஆய்வுகளை மேற்கொண்டதாகவும், மற்றைய 3 குழுக்கள் கடந்த வாரம் ஆய்வுகளை மேற்கொண்டதாகவும் தெரியவருகிறது.
இந்த ஆய்வு முடிவுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் இரகசியமாக கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
கிழக்கு மக்களின் நிலைப்பாடு குறித்து அறிந்து கொண்ட ஜனாதிபதி மிகவும் குழம்பிப் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொள்ளாது ஓலுவில் துறைமுக திறப்பு விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்டதாகவும், 150 லட்ச ரூபா செலவில் செய்மதித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிழக்கு மக்களுக்கு விசேட உரையாற்றியதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும், பாராளுமன்றத்தை திடீரென ஒத்தி வைப்பதற்கும் இந்த ஆய்வு முடிவுகளே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள, முஸ்லிம் மக்கள் மாத்திரமன்றி பெரும்பான்மை தமிழ் மக்களும் பிள்ளையான் வெற்றியடைந்தால் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் என தெரிவித்துள்ளதாக இந்த ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு எதிராக வாக்களிக்க பெரும்பான்மை மக்கள் தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது.
ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட ஒவ்வொரு ஆய்வதிகாரிகளுக்கும் தலா 50,000 ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை நாடாளுமன்ற கூட்டம் ஒரு மாதத்துக்கு ரத்து
கொழும்பு, மே 7: இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒரு மாதத்துக்கு ரத்து செய்யப்படுகிறது. இதற்கான நடவடிக்கையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ளார். இந்த தகவலை அரசு அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.
நாடாளுமன்ற கூட்டத்தை ரத்து செய்ய வகைசெய்யும் உத்தரவு வியாழக்கிழமை பிறப்பிக்கப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். சொன்னது யார் என்பதை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் இந்த தகவலை தெரிவித்தார் அரசு அதிகாரி. நாடாளுமன்ற கூட்டம் ரத்துக்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
இதனிடையே, இந்த நடவடிக்கை லஞ்ச ஊழல் புகார் பற்றிய விசாரணையை தடுப்பதற்கான உத்தி என்று எதிர்க்கட்சி புகார் கூறியுள்ளது.
ராஜபக்ஷ அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுபற்றி விசாரிக்க பல்வேறு கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதன் உள்நோக்கம் அந்த விசாரணைகளை தடுப்பதற்காகத்தான்.
நாடாளுமன்றக் கூட்டம் ரத்து செய்யப்படுவதன்மூலம் அந்த கமிட்டிகளும் கலைக்கப்பட்டுவிடும். இது நியாயமற்ற செயலாகும். இதை ஆட்சேபிப்போம் என்று எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலர் திஸ்ஸ அட்டநாயக தெரிவித்துள்ளார்.
|