|
சிரேஸ்ட உறுப்பினர் பவான் புலிகளால் படுகொலை செய்யப்பட்டமைக்கு புளொட் கண்டனம்
புளொட் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரும், புளொட்டின் வவுனியா மாவட்ட உதவிப் பொறுப்பாளருமான கந்தையா செல்வராசா (பவான்) வவுனியா பூந்தோட்டம் சந்தியில் வைத்து நேற்றுமாலை 5.30மணியளவில் புலிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டித்து புளொட் அமைப்பு அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
தோழர் பவான், நேற்றுமாலை வவுனியா பூந்தோட்டம் பகுதியிலிருந்து சக தோழர் பாலதம்புவுடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தவேளை பாசிசப் புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். இவருடன் பயணித்த பாலதம்பு துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார்.
தோழர் பவான் தனது மனைவி மற்றும் ஐந்து பெண் பிள்ளைகள் ஒரு ஆண் என ஆறு பிள்ளைகளுடன் வவுனியா உமாமகேஸ்வரன்வீதி கோவில்குளத்தில் வசித்து வந்தார். புலோலி வடக்கு பருத்தித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், 1984களில் தன்னை புளொட் அமைப்பில் இணைத்துக் கொண்டு தமிழ் மக்களின் உண்மையான விடுதலையை நோக்கிய பணிகளில் பாசிசப் புலிகளால் படுகொலை செய்யப்படும்வரை அயராது உழைத்து வந்தார். அன்றிலிருந்து இற்றைவரைக்கும் போராட்டமும் எமது அமைப்பும் சந்தித்த அனைத்து நெருக்கடிகளுக்கும் அயராது முகம்கொடுத்தும் வந்தார்.
மக்களை மனதார நேசித்த தோழர் பவான், தமது அணுகுமுறைகளாலும், பண்பினாலும் மக்கள் மத்தியிலும் தோழர்கள் மத்தியிலும் மிகுந்த அன்பையும் மதிப்பையும் பெற்றிருந்தார். இவர் சமூக மேம்பாட்டில் அதீத அக்கறையுடன் செயற்பட்டவர். இவரது சமூக அக்கறையும், பொதுப்பணி தொண்டுகளும் வவுனியா மக்களால் நன்கு அறியப்பட்டது.
மக்களின் நலன்கருதி சேவையாற்றபவர்கள் படுகொலை செய்யப்பட்டுவரும் வரிசையில் தோழர் பவானும் பாசிசப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மனித நேயமற்ற இக்கொலையினை புளொட் அமைப்பினராகிய நாம் மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன், இவரது இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரது ஆறாத்துயரில் நாமும் பங்கு கொள்கிறோம். என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளொட் சிரேஸ்ட உறுப்பினர் பவானுக்கு அஞ்சலி- நேற்றுமாலை 5.30மணியளவில் வவுனியா பூந்தோட்டம் சந்தியில் வைத்து பாசிசப் புலிகளின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த புளொட் அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினரும், புளொட்டின் வவுனியா மாவட்ட உதவிப் பொறுப்பாளருமான கந்தையா செல்வராசா பவானின் பூதவுடல் இன்று வவுனியா இறம்பைக்குளத்தில் உள்ள புளொட் காரியாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகளின் பின்னர் பவானின் கோயில்குளம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்;த்தன் மற்றும் புளொட் சிரேஸ்ட உறுப்பினர்கள், புளொட் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருந்தொகையானோர் அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்போது புளொட் வெளியிட்ட அஞ்சலிப் பிரசுரத்தில்:
‘ஓ.... எம் இனிய தோழனே! இலட்சியப் பயணத்தில் இருபத்தைந்து வருடங்களாக எம்மோடு கைகோர்த்து, தோள் தந்து நின்ற உனது இயக்கமும் வழமைபோல் சமூக விரோத பாசிசப்புலிகளால் நிறுத்தப்பட்டுவிட்டது. மக்களின் விடுதலை என்ற மகத்தான கொள்கையில் இந்த இருபத்தைந்து வருடங்களில் நீ ஆற்றிய பணிகளை, பட்டதுன்பங்களை, சிந்திய வியர்வைகளை நாம் மட்டுமல்ல நீ நின்று வேலை செய்த இடங்களின் அத்தனை மக்களும் அறிவர்: அதைவிட மனுக்குல விரோதப் புலிகள் நன்கறிவர். மக்களை நேசிக்கும் எவரும் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதே புலிகளின் பிரதான இலக்கு, அதுவே அவர்களின் வரலாறு. மண்விடுதலை எனக் கூறிக் கொண்டு, மக்களை இந்த மண்ணிலிருந்தே விடுவிக்கும் மனுக்குல விரோத சாத்தான்கள் தங்களின் அழிவின் விளிம்பில் நின்று புரியும் ஊழித்தாண்டவங்களை மக்கள் புரிந்து கொள்வர். தோழனே! உன் காலடிபடாத கிராமங்கள் வெகுசிலவே. நீ கொண்டிருந்த கொள்கை புனிதமானது, நீ நடந்து வந்தபாதை தெளிவானது, நீ புரிந்த பணிகள் மகத்தானவை, நீ மக்களை நேசித்தாய்; மக்கள் உன்னை நேசித்தார்கள். மரணம் வாழ்வின் முடிவல்ல் வாழ்வை நேசித்தவர்களுக்கு மரணம் என்றுமே இல்லை. பாசிசப் புலிகள் உன் வாழ்வைப் படிக்கட்டும் அவர்கள் தங்களின் செயல்களுக்காக வெட்கித் தலைகுனியும் காலம் வெகு தொலைவிலில்லை.
விம்மிய நெஞ்சங்களுடன் விடை தருகின்றோம் எம் இனிய தோழனே.
உன்பிரிவால் ஆறாத் துயரில் ஆழ்ந்திருக்கும் உன் மனைவி, குழந்தைகள், ஊரார், உறவுகளுடன் நாமும் எம் துயரைப் பகிர்ந்து கொள்கின்றோம்.’
ஏன தெரிவிக்கப்பட்டிருந்தது. இறுதி நிகழ்வுகள் நாளை பிற்பகல் 2.00மணியளவில் கோயில்குளம் இந்து மயானத்தில் இடம்பெறவுள்ளது.
|