|
படை வீரர்களுடன் இணைந்து மிகவிரைவில் சமாதானத்துக்கான வழியை ஏற்படுத்துவேன் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
எமது படைவீரர்களுடன் இணைந்து மிக விரைவில் நாடு முழுவதும் சமாதானத்தையும் மக்களின் நல்வாழ்வுக்குமான வழியையும் ஏற்படுத்துவேன். கிழக்கை மீட்டு அப்பகுதி மக்களுக்கு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழிவகுத்த பெருமை எமது படையினரையே சாரும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று முதல் ஜூன் மாதம் 07 ஆம் திகதி வரையான கால எல்லை, படையினருக்கான மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் குறிக்கும் முகமாக வெளியிடப்பட்ட தேசிய படை நினைவுக் கொடியின் முதலாவது கொடி நேற்று ஜனாதிபதிக்கு அலரி மாளிகையில் கையளிக்கப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது: எமது நாட்டின் இறைமையையும் சுயாதிபத்தியத்தையும் பாதுகாப்பதற்காக உயிர்நீத்த படையினரை நாம் என்றும் நினைவுகூர வேண்டும். அது எமது கடப்பாடாகும். தமது நாட்டை அதன் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உயிரைப் பயணம் வைத்து யுத்த களத்தில் முன்செல்லும் படையினரின் அர்ப்பணிப்பு விலை மதிக்க முடியாதது. எனவே, அவர்களது குடும்பங்களிற்கு நலன்புரிகளை வழங்க வேண்டும். எது எமது பொறுப்பாகும்.
யுத்த களத்தில் மட்டுமல்ல இந்நாட்டில் வாழும் மக்களின் நலன்புரிகள் தொடர்பாகவும் அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்கள். தமது உணவை இன்னொருவருக்கு வழங்கிய எமது படையினர் நாட்டின் அபிவிருத்திக்கும் பங்களிப்புச் செய்கின்றனர். இதனை மறக்க முடியாது. கிழக்கு மாகாணத்தில் புலிகளால் நிர்மூலமாக்கப்பட்ட பாதைகள், பாலங்களை அமைக்கவும் பாடசாலைகளின் நிர்மாணப் பணிகளிலும் படையினர் பங்களிப்பைச் செய்தனர்.
பயங்கரவாதத்திலிருந்து கிழக்கு வாழ் மக்களை மீட்டெடுத்தனர். சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்கு வழிவகுத்தனர். எனவே, இவர்களுடன் இணைந்து கொண்டு மிக விரைவில் நாட்டில் சமாதானத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள், முப்படைத் தளபதிகளும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் - ஜனாதிபதி ஆலோசகர் பசில் எம்.பி. கூறுகின்றார்
பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் துரிதகதியில் முன்னெடுக்கப்படுவதைப் போல அம்மக்களுக்கு ஜனநாயக உரிமையைபெற்றுக்கொடுப்பதற்கான வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில், எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்வதற்கு மக்களின் ஆதரவு அத்தியாவசியமானது என்றும் அவர் கூறினார். கிழக்கு மாகாணத்திலிருந்து தொலைப்பேசியூடாக கேசரிக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது; சுமார் 20 வருடங்களுக்கு மேலாக வாக்குச் சீட்டுக்களை காணாமல் துப்பாக்கி முனைகளில் அச்சுறுத்தப்பட்டு பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த மக்கள் இன்று ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொள்வதற்காக மக்களின் பிரதிநிதிகளை தெரிவுசெய்ய இருக்கின்றனர். இத்தகைய தெரிவின் மூலமாக கிழக்கு மாகாணம் மீண்டும் பயங்கரவாதிகளிடம் சிக்கி விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
மூவின மக்களும் சகோதரத்துவத்துடன் வாழுகின்ற கிழக்கு மாகாணத்தில் அந்த ஒற்றுமை தேர்தலுக்குப் பின்னரும் நீடிக்க வேண்டும் என்பதுடன் சகல இன மக்களும் அதனை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டமைப்பு பலமடைந்ததைப் போல கிழக்கு மாகாண தேர்தலுக்குப் பின்னர் அம்மாகாணத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு நல்கும் பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.
கட்சியின் தலைமையுடன் முரண்பட்டுக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து வருகின்ற நிலையில், அக்கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் கிழக்கில் மீண்டும் முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கான சூழல் உருவாக்கப்படும் என்பதில் எவ்விதமான ஐயப்பாடும் இல்லை.
கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு கிழக்கு மாகாணம் மிளிர வேண்டுமாயின் இந்த தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
|