|
தமிழ்கைதிகள் விரைவில் விடுதலை: நீதி அமைச்சின் செயலாளர் தகவல்!
விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப் பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவிருப்பதாக நீதி அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கைதிகளின் விடுதலை தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழ்ப் புத்தீஜீவிகள் குழு ஒன்று அவரை நேற்று சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தியபோதே அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.புலம்பெயர்ந்த தமிழ் புத்திஜீவிகள் குழு ஒன்று ஜனாதிபதியை அண்மையில் அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தது.
இச்சந்திப்பின்போது தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இந்த தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தபோது, “எந்தத் தமிழர்களையும் தேவையில்லாமல் சிறையில் வைத்திருப்பது தமக்கு விருப்பமானதல்ல. சட்டப்படியான விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்யுமாறு ஏற்கனவே தான் நீதி அமைச்சின் செயலாளருக்கு பணித்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இந்த குழுவின் சார்பில் டாக்டர் நொயல் நடேசன் (அவுஸ்திரேலியா), இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (பிரிட்டன்), டாக்டர் இராமநாதன் நரேந்திரநாதன் (அவுஸ்திரேலியா) சபாபதி சுப்பையா குகநாதன் (பிரான்ஸ்) ஆகியோர் நீதி அமைச்சின் செயலாளரை அவரது அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை சந்தித்து இதுதொடர்பாக கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பின்போது, உடனடியாக சட்ட மா அதிபர் மொகான் பீரிஸ் இவர்களுடன் தொடர்புகொண்ட அவர், இந்தக் கைதிகளின் விடுதலை தொடர்பாக சிறப்பு அதிகாரிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டு அவர்கள் கைதிகள் ஒவ்வொருவரினதும் விடயங்கள் தொடர்பாக தனித்தனியாக ஆராயப்பட்டு வருவதாகவும் இவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
கொழும்பு சிறையில் 359 பேரும், மகசின் சிறையில் 120 பேரும், மட்டக்களப்பு சிறையில் 9 பேரும், அனுராதபுரம் சிறையில் 45 பேரும், போகம்பரை சிறையில் 56 பேரும் திருகோணமலை 66 பேரும், தங்காலை 2 பேரும், நீர்;கொழும்பு 13 பேரும் தற்போது தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் இவர்களில் பெரும்பான்மையானவர்களே விடுதலை செய்யப்படவிருப்பதாகவும் நீதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
|