|
நிருபமா ராவின் இலங்கை விஜயம்
- தேசாபிமானி
இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் தமிழ் அரசியல் கட்சி தலைவர்களை நேற்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது இனப்பிரச்சினை மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாக பேசப்பட்டதாக தெரிகிறது.
2000ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டுவரை இலங்கைக்கான இந்தியத் தூதுவராக பணிபுரிந்திருப்பதால் இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை நிருபமா ராவுக்கு அனுபவம் அதிகம். எனவே இந்திய வெளியுறவுச் செயலாளராக நிருபமாவின் இலங்கை விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இலங்கை இனப்பிரச்சினைக்கு தமிழர்கள் உட்பட அனைத்து தரப்பினரினதும் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் அரசியல் தீர்வு காண்பதற்கு இலங்கை அரசு அக்கறை காட்டவேண்டும் என அண்மையில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஸ்ரீகிருஷ்ணா வலியுறுத்தியிந்த நிலையில் வெளியுறவுச் செயலாளரின் இலங்கை விஜயம் முக்கியத்துவம் பெறுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
நேற்று 7ம் திகதி தமிழ் கட்சிகள் பல நிருபமாவை சந்தித்துள்ள போதிலும் இலங்கை தமிழ் தினசரிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்தித்தது பற்றியே முக்கியத்துவம் கொடுத்திருந்தன. இந்த பேச்சுவார்த்தையில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, அரசியல் தீர்வு ஆகியன முக்கியமாக பேசப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தச் செய்திகளின்படி இலங்கை அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழக்கம்போல குற்றம் சாட்டியிருந்தது.
ஜனாதிபதியை சந்தித்த நிருபமா வன்னி மோதல் காரணமாக இடம் பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்றும் விடயத்தில் இலங்கை குறிப்பிடத்தக்க வெற்றி அடைந்துள்ளதாக பாராட்டியுள்ளார். இதன் காரணமாக சர்வதேச சமூகத்தின் கவனத்தில் இருந்து இந்த விடயம் அகன்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மீள் குடியமர்த்தும் விடயத்தில் மேலும் உதவ இந்தியா விரும்புவதாகவும் நிருபமா ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியா முன்னுரிமை கொடுத்து செயற்படும்; எனவும் தமிழ் கட்சிகள் அனைத்தும் இனப்பிரச்சினை தொடர்பாக ஒருமித்த கருத்துடன் அரசியல் தீர்வு யோசனையை முன்வைக்கும்படியும் நிருபமா தமிழ் கட்சிகளின் தலைவர்களிடம் அறிவுறுத்தியிருந்தார்.
இந்தியாவைப் பொறுத்தவரை தனது பிராந்திய நலன்களுக்கு அமைவாகவே இனப்பிரச்சினைக்கு தீர்வு தொடர்பாகவோ மீள்குடியேற்றம் தொடர்பாகவோ இலங்கை அரசின்மேல் அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். பல வழிகளிலும் இந்தியா இலங்கைக்கு உதவிவருகிறது. இலங்கையும் இந்தியாவுக்கு முதலீட்டு வாய்ப்புகளை கொடுத்துள்ளது. குறிப்பாக வடக்கு கிழக்கில் பல முதலீடுகளை இந்தியா மேற்கொள்ளப் போகிறது. இன்று இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நெருக்கம் அடைந்துள்ள நிலையில் தமது நலன்களை மீறி தமிழர் விடயத்தில் தீவிரகவனம் எடுக்கும் என எதிர்பார்க்கமுடியாது.
ஆனாலும் நிருபமா வலியுறுத்தியிருப்பது போல் தமிழ் கட்சிகள் ஒத்த கருத்துடன் ஒரு தீர்வை முன்வைத்தால் அந்த தீர்வை வலியுறுத்த இந்தியாவுக்கும் இலகுவாக இருக்கும். ஆனால் இனப்பிரச்சினை விடயத்தில் வௌ;வேறு கருத்துக்களைக் கொண்டுள்ள தமிழ் கட்சிகள், யதார்த்தத்திற்கு அப்பால் சிந்திக்கும் கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படுவது எப்போ?. இனப்பிரச்சினைக்கு தீர்வுதான் எப்போ?
சினிமா பாணியில் சொல்வதானால் தமிழ் கட்சிகள் ஒன்றுபடும் .ஆனால் ஒன்றுபடாது.
- தேசாபிமானி
|