|
மகிந்த சிந்தனைக்கு மக்கள் மீண்டும் வழங்கிய அங்கீகாரம்; ஜனாதிபதி
பாராளுமன்றத் தேர்தலில் மக்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கியிருப்பதாக நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இலங்கை சிறுவர் பராயத்தினருக்காக சிறப்பானதொரு தேசத்தைக் கட்டியெழுப்புவதே இந்த வெற்றியின் மூலம் பாராளுமன்றத்துக்குத் தெரிவான உறுப்பினர்களின் முன்னுரிமைக்குரிய பொறுப்பாக இருக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
நடைபெற்றுமுடிந்த பாராளுமன்றத் தேர்தலின் பெறுபேறுகள் தொடர்பாக ஜனாதிபதி ராஜபக்ஷ விடுத்திருக்கும் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
"தாய் நாட்டுக்கு எதிரான எந்தவொரு சக்திக்கும் முகம் கொடுக்கக் கூடிய பலமிக்க பாராளுமன்றம் ஒன்றயே இலங்கை வாழ் மக்களான உங்களிடம் நான் கேட்டிருந்தேன். அதற்கமைய 3 தசாப்தகால விகிதாசார தேர்தல் முறைமை வரலாற்றில் சிறப்புமிக்க பெறுபேற்றை இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வழங்கியுள்ளீர்கள். கிடைத்திருக்கும் இந்த விசேட வெற்றியை "மகிந்த சிந்தனை வேலைத் திட்டத்துக்கு மக்கள் மீண்டும் வழங்கியிருக்கும் அங்கீகாரமாகவே நான் கருதுகிறேன்.
தாய் நாட்டுக்காக நிறைவேற்ற வேண்டிய புனித கடமையையே இலங்கை மக்களான நீங்கள் நிறைவேற்றி இருக்கிறீர்கள். என் மீதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீதும் நீங்கள் அனைவரும் வைத்த நம்பிக்கையையும் கௌரவத்தையும் பாதுகாக்க நாம் கடமைப்பட்டுள்ளதுடன், இந்த வரலாற்று சிறப்புமிக்க மக்கள் ஆணையை இலங்கையை உலகின் முன்மாதிரி அரசாக மாற்ற இடப்படும் பாதையின் முக்கிய அடியாகவே இதனை நான் கருதுகிறேன்.
இலங்கை சிறுவர் பராயத்தினருக்காக சிறப்பானதொரு தேசத்தைக் கட்டியெழுப்புவதே இந்த வெற்றி மூலம் பாராளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினர்களின் நோக்காகவும் முன்னுரிமைக்குரிய பொறுப்பாகவும் இருக்கவேண்டும். ஆதலால், இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக கைகோர்த்துச் செயற்பட முன்வருமாறு சகல அரசியல் கட்சிகளிடமும் அனைத்து பிரஜைகளிடமும் கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல் தோல்வியடைந்த கட்சிகளுக்கு அவமதிப்பு ஏற்படுத்தாமல் பெற்ற இந்த விசேட வெற்றியை அமைதியான, கௌரவமான மற்றும் ஒழுக்கமிக்க வகையில் கொண்டாடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்த இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் தேர்தலை நடத்த அர்ப்பணிப்புடன் கடமைகளை நிறைவேற்றிய தேர்தல்கள் ஆணையாளருக்கும் சகல அரச அதிகாரிகளுக்கும் பொலிஸ் மற்றும் முப்படையினருக்கும் போட்டியிட்ட கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கும் பொறுப்புடன் செயற்பட்ட சகல ஊடகவியலாளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள இதை நான் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறேன்
|