|
மறு பக்கம் நான்கு / ஒரே பக்கம்
- அஹ்மத் ஷா
குட்டித் தீவான இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தல் என, உலகம் தெரிந்த மெத்தப் படித்த மேதாவிகள் நினத்துக் கொண்டு - தங்கள் தங்கள் இனப் பிணங்களின்- இரத்தங்களின் வேண்டுகையில் - அவாவில் தங்களது உழைப்பை சந்ததி - சந்ததிக்காய்ச் சொத்துச் சேர்த்து வைக்கிற களிப்பில் பக்கம் பக்கமாக விளாசக் கூடும்.
நம்ப முடியவில்லை. ஒரு வருடத்துள்ளேயே ஒன்றாய் இருந்து - உலகம் பூராக "பயங்கரவாதிகள் - தடை செய்யப் படவேண்டும்" என்றெல்லாம் ஆதாரம் சமர்ப்பித்து - தொண்ணூறு விகிதத்திலாவது வேரோடு பிடுங்கிய பின் இருவருமே ஏட்டிக்குப் போட்டியாக நாடு பூராக வெற்றி விழாக் கொண்டாடி சரியாக இன்னும் அமர முடியவில்லை; "வெற்றி உனதல்ல, எனதே" என்கிறார்கள், ஆழுக்கொருத்தராக.
என்ன செய்வது? கண் எதிரே நிகழ்ந்து கொண்டிருப்பதை? நம்புகிறோம் துப்பாக்கிகளெல்லாம் தூங்கிப் போயின என்றால், விடமாட்டார்கள் போலிருக்கிறது, அரசியல் என்கிற தொழிலே ரத்தம் பார்க்கிறதாயிற்று. இதை இன்னும் ஆழமாக நோக்கினால் உறவு, குடும்பம், தவறு, வயது, காலத்தின் சிந்தனைப் போக்கு இப்படி எதுவும் எடுபடாத படி "சட்டப் படி ஆழ" வருபவராக சரத் ஜோடிக்கப் பட்டு, விற்பனைக்கு விடப் பட்டுள்ளார்.
எல்லாமே சரிதான். ஆனால் எம்மால் இன்னும் நம்ப முடியாத படி சில சம்சயங்கள் உண்டு. புத்தா, முருகா, அல்லாஹ்வே யாரும் தெரிந்தவரை எனக்குக் காட்டு. எல்லோருக்குமாக விளங்க வை...
சரத் சொல்கிற குற்றச்சாட்டுகளை முன்னிட்டு அவை எழுகி ன்றன.
1. பிரபாகரன் உட்பட அந்த மாபியாக் கும்பல் இன்றிருந்தால் (வேறெங்கே இலங்கையின் சிறைக் கூடத்தில்தான்)
அ) சரத் பேச்சு வார்த்தை செய்வாரோ?...ரணிலின் ஒப்பந்தத்தை விட மேலாக வழங்குவாரோ?
ஆ) தமிழ் நாட்டின் எடுபிடிகள் (சரத் கூற்றின் படி "அரசியல் கோமாளிகள்") தமிழ் நாட்டை இந்நேரம் என்ன பாடு படுத்தியிருக்கும். சோனியா இன்னும் சோகப் படக் கூடும். தப்பித்தது நல்ல காலம். எது?
இ) சொந்த மக்களையே - உயிர் அபயம் வேண்டி உடுத்த உடையுடன் - தப்பி வந்தவர்களைப் பேட்டி கண்டு... "என்ன கொடூர பயங்கரவாதிகள், நந்திக் கடலில் இப்படிப் பிணம் தூக்க வைத்தனரே என நின்றதாக..., சரத்தும் கூட்டமும் எங்கள் நெஞ்சில் இட்ட ரணம் ஆற முன்னரே, முயல் வேஷமிட்ட புலியான ரி.என்.ஏ உடன். அவர்களின் இணக்கத்துடன், தேவையா இது? ஓநாய் மீண்டும் நனைகிற முயல் கண்டு அழுவதை நம்ப புடியவில்லை.
2. நீங்கள் பிரேமதச காலத்தில் அறுபதாயிரம் இளைஞர்களை படு குழியுள் தள்ளிய போதெல்லாம்...
எம் மக்கள் இந்த ஐக்கிய நாடுகள், யூ.கே, யூ.எஸ், சனல்4, மனித உரிமை சங்கம் இப்படி எதுவுமே கேள்விப்படவில்லை. அதையும் விடலாம்...
தொழும் பள்ளிவாயல், கோவில், பன்சல, தனிச் சிங்கள முஸ்லிம் கிராமங்களின் வேட்டை, சக சமூக அழிப்பு, முஸ்லிம் இன வெளியேற்றம் (யாழ், மூதூர்...)
எங்கே போயிருந்தீர்கள் அப்பு? விஷம் கொடுத்ததோ நீங்கள். வாங்கி வாழ்விழந்தவர்கள், எம் மக்கள்.
அது வழக்கம் போலவே அன்றாடம், மாதங்காய்ச்சிகளின் வாடா மல்லிகள். வாசனையே தராதபடி - வராதபடி வாழ்வழிக்கப் பட்டவர்கள்..., இரு புறமுமாய் எத்தனை ஆயிரங்கள்...
மே 18 இன் பின்னர், இனம் தெரியாதோரால் - இனம் தெரியாத நபர் அழிக்கப் பவில்லை. அடுத்த மனிதரை நம்பும்படியாக வாழக் கொடுத்துவைக்காதபடி வைத்துக் கொண்டு, வளர்த்தது நல்லவைகளல்ல. மொத்த சமூகத்தயும், நான் பலமானவன் என்கிற பந்தாவில் முறுக்கிய மீசையை இன்னும் பலமாகத் தூக்கி நிற்பது... நாங்கள் பழையதை மறக்க நினைக்கிறோம். வடிவேல் கணக்காகத் தொடர்ந்தும் வந்து கொண்டு "அவனா நீ" என்று கேட்கிற நிலைமையை எங்கு கொண்டு வைக்க? எல்லா மகக்ளுக்கும் சரி என்று படுகிறதா?
புலிகளின் அழிவு என்பது, அவர்களுக்கு மடுமானதல்ல. மேற்கின் முகத்தில், வாரிப் போடப் (போட்டுக் கொண்ட) பட்ட புழுதி மண். புலியின் எதிரணி (இந்தியா, சீனா, ரஷ்யா, வியட்னாம், ஈரான், வெனிசுலா, மாலை தீவு... நிறையச் சொல்ல முடியும்.) ஒன்று சேர்ந்து உலகப் பயங்கரவாததிற்கும் ஆப்பு வைக்கப் பட்ட நிகழ்வு; இந்துவும், பெளததமும் அழிவின் தோன்றுகைக்கு வைத்த ஆப்பு.
மேற்கின் உண்மை முகம், சமாதானமும், உலக அமைதியும் எனப் பவுடர் பூசிய வேஷை போன்ற மிகக் கொடூரமானது. அது ஆழமாக ஆண்டாண்டு காலம் வேர் விட்டு விரிவாக்கி வளர்த்தெடுக்கப் பட்ட ஒன்று. அது முன்னர் ஒன்றை ஒன்று கொன்று தின்றது. இன்று தன் கொலைகார முகத்தை, தன் மக்களில் நின்றும் தூரமாக்கி... வேறொரு பிரதேசத்தில் - வேறு மக்களில் எவ்வித சேதாரமும் இன்றி ருசி பார்க்கிறது. அத்துடன் மேற்கின் மக்கள் தேவைக்கான பொருள் என்பதை மாற்றி, பொருளுக்காக நீ என காலில் சக்கரம் கட்டி விட்டது போல சுய தேடுதலுக்கான நேரமின்றிப் பறக்கிறார்கள். ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, வியட்னாம், மத்திய கிழக்கு, ஆப்கான், பாகிஸ்தான்... அதற்கு அதுவாகவே ஏதாவது ஆயுதத்தை ஏதுவாக சிருஷ்டிக்க முடியும்.
இந்த உதாரணம் சரி வருகிறதா பாருங்கள் தலிபான் - அல்கைதாவுடன் அமெரிக்க நேசப் படை பொருதுகிறது. மேற்படி இரு அமைப்புக்களுக்கும் ஆயுதம் வழங்குவது சவுதி, பாகிஸ்தான் எனில் இவர்களுக்கு அமெரிக்காவில் இருந்து ஆயுதம் வருகிறது. அட, இது என்னா போட்டி? கோட்டும், டையும் போட்டு உய(ச)ர் நாகரிகம்.
அறுபதினாயிரம் தனது இளைஞர்களைப் பலியெடுத்த ஊ.என்.பி (U.N.P), ஜே.வி.பி கூட்டுடன் சரத், சரத் வென்றால்
1. ஏப்ரலுக்குள் பார்லிமன்ட் அவுட்
2. நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமராக ரணில் வருவாராம்...
ம்... தனியாகப் போட்டி போட முடியாத ரணிலும் சில்வாவும் சேர்ந்து சரத்தை வெல்ல வைத்து அமோக வெற்றி பெற்ற பின் ரணிலிடம் தாரை வார்க்க இவராம். என்னங்கடா இது?
நம்ப முடியலையே...
யூ.என்.பியும் ஜே.வியுடன் இதே கூட்டைப் போட்டு
ரணிலைக் கேட்க (ஜனாதிபதித் தேரதல்தான்) வைத்திருக்கலாமே... சரத் எதற்கு?
புலியை அழிச்ச ஹீரோ இல்லையா? அப்படியானால் சரி. பின் எதற்கு, மிஞ்சிய புலன் பெயர்ந்ததுகள் சரத்துக்கு ஒத்துப் பாடுது? சரத்தின் வரவு புலியால் மட்டுமல்ல மூக்குடைபட்ட மேற்கின் - கையூட்டுடனும், ஆசீர்வாதங்களுடனும் அரங்கேற்றப்படுகிறது.
தங்களது இலங்கை மாதாவின் இள மக்களை அழிவின் விளிம்பில் நிற்க வைத்து, உயிர் தரித்திருப்பதே பெரும் புண்ணியம் என முப்பது வருட காலம் சிதைத்தவர்கள் இவர்கள் –
புலிக்கு ஆயுதம், பயிற்சி. அதே போல அரசுக்கும். அது இல்லீகல். இது சட்டப் படியாக. அரசிடம் இருந்த உளவுப் படையை விட மேலாகப் புலிகளுக்காக வேவுபார்த்து... தொடர்ந்தும் சம நிலை பேணி எங்களின் சக வாழ்வையே சூரையாடிய சூரசம்காரம் நந்திக் கடல். இதற்கு சரத் புலிவால் பிடித்த படி இன்றக்கு உறுமினாலும்,
- ஐக்கிய நாடுகளின் மனித உரிமை என முகமூடி போட்டு உறுமிய போதும்
- அமெரிக்கா, பிரிட்டன் என யார் சொல்லியும் -
தினவெடுத்த தலைமையும், நடுத்தர ஏழை வீட்டு இலங்கை மக்களின் வாழ்வு மீது கொண்ட கரிசனையின் வெளிப்பாடாக மகிந்த சகோதரர்கள் நின்ற வீரமுமே காரணம்.
ஜே.ஆர், ப்ரேமா, சந்திரிக்கா, ரணில் எல்லாருமே மேற்கின் அடி வருடியாகவே இயங்கி,
தினமும் கொலை வீழும் தேசமாகவே காட்டினார்கள்; கட்டினார்கள்.
இலங்கை வரலாறு எழுதப்படுகிற போது மகிந்த முக்கியமானவரே. ஐ.நா, அரச சார்பற்ற நிறுவனங்களை முதலில் வெளியேற்றியதும் இலகுவாக்கப் பட்ட வெற்றியதனால்.
போர் வெற்றியை விடுத்து, அடுத்து அவர்கள் வீசுகிற ஆயுதம்... ஊழல். அரசியலுக்கு, ஏன் இத்தனை போட்டிகளுடன் இத்தனை பேர் வருகிறர்கள்? மக்களுக்குத் தெரியாமலில்லை. எந்த விதமான மூலதனமும் இன்றி பெருந்தொகை வருமானம், அல்லது சேர்த்தெடுத்த சொத்தை அதிகரிக்க (அல்லது) பாதுகாப்புக்காக "நங்களும் அரசியல் செய்றோம்ல..."
நாம் யாருக்கும் அடிமைகள் அல்ல; அதே நேரம் யாரையும் அடிமை கொள்வோரும் அல்ல. அது மேற்காயிருக்கட்டும், இராணுவமாயிருக்கட்டும் (அரச, புலி). எந்த வீட்டுக்கும் ஒரு முகம் இருப்பது போல - ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு முகம் உண்டு -
1- இந்தியா - காந்தியும் ஜனநாயகமும்
2- பாகிஸ்தான் - ராணுவம்
3- சிங்கப்பூர் - இறுகிய சட்டம்
4- பிரிட்டன் - கிழட்டு சிங்கம்
5- இஸ்ரேல் - கொலை வெறி
6- க்யூபா - பிடில் காஸ்ரோ
7- ரஷ்யா - லெனின்
8- சீனா – மாஓ
இலங்கைக்கு மீளவும் ஒரு முகம் கிடைத்திருக்கிறது. மக்களின் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு. பார்ப்போம் வருகிற 26 இல்.
|