|
மறுபக்கம் (6)
- அஹ்மட் ஷா
இதிலுமா சிறுபான்மையாக இருப்பது? உலாகமயமாவதற்கு - ஒரே கலாச்சாரத்துள் மாற முனைகிற பூமிப் பந்து நம் முன்னோரின் வாழ்வின் மீது ஒரு ஏளனப் பார்வையை வீசக் கற்றுத் தந்திருக்கிறது - தருகிறது.
சுக்கு, மிளகு, திப்பிலி, தேன், தேசிக் காய், மஞ்சள், கோப்பி, மண் சக நீர் வைத்தியங்கள், குரக்கன், இஞ்சி, சோற்றுப் பானையின் சூட்டு ஆவியும் என நம்பி வாழ்ந்ததைச் சொல்லவில்லை....
மா மரத்தின் கீழாகப் பாய் விரித்து எவ்வித அலாரமோ அவசரமோ இன்றி கவலைகளைக் கடவுளிடம் பாரம் கொடுத்துவிட்டு இயற்கைத் தென்றலில் அசந்து தூங்கியதுமில்லை.
பகையாளியானாலும் இறப்பிலும் பிறப்பிலும் வைபவங்களிலும் ஊர் கூடிச் சேர்ந்தனுபவித்ததும் - தோள் கொடுத்ததுவுமில்லை. (இப்போது நீங்கள் "அவர் யார்ர விஷயத்திலயும் தலையிடாத ஜென்டில் மேன் என்கிறீர்கள்") குடும்ப வாழ்வு மட்டுமன்றி சமூக அமைப்பும் சீரழிந்திருக்கிறதாயின் அதற்கு நாம் பின் பற்றுகிற திட்டமிட்ட கல்வித் திட்டமே முழு முதற் காரணமாகும்.
நாம் கற்கும் பாடப் பரப்பினூடாகவே (விஞ்ஞானம், வர்த்தகம், கலை) அனைத்தையும் கற்றுத் தெளிந்து பின்னர் அடிமைப் பட்டு அதன்படி வாழவும் தொடங்கியிருக்கிறோம். இலகுவாக இப்படிப் பார்க்கலாம்.
கலை என்பது (சித்திரம், சங்கீதம், ஜனநாயகம்) சொல்லாமலே கற்பனா ரூபமானது என்பதை அறிவீர். வர்த்தகமும் கூட அப்படியே. இவ்வளவு முதலீடு செய்து நுகர்வுக்கு இத்தனை தொகை இருக்கும் போது இன்ன லாபம் பெறலாம் என இல்லாத ஒன்றைத்தான் கற்பனையில் கோட்டையாக எழுப்புகின்றனர்.
அந்தப் பாட்டு, நாட்டியம், ஆற்றின் ஆரவார அழகியல் முன்னொழுகும் நடையொலி, ஓவியம், தி.ஜா.ரா வின் மோக முள்...எதுவோ ஒன்று பற்றி இருவர் பேசுகின்றனர்.
"ரொம்ப நல்லா இருந்ததடி..." "நல்லா என்டா... எப்படி?"
எப்படி இதை விளக்குவது? அந்தப் பொழுதின் அனுபவிப்பை - அனுபவம் கடந்த பின் இறந்த வார்த்தையால் எப்படித் தருவது? அது புலனுக்கே உட்படாத அனுபவமாய் இருக்க (புலன் உதவியாக மட்டுமே இருந்தது - பார்த்தது, கேட்டது, சூடு, குளிர், மணத்தை செய்தியாகக் கடத்தியது) புலனின் வேலையாள் ஆன கடை நிலை மொழியால் எப்படி விபரிப்பது? ஆகக் கடந்து போன ஒன்றை கற்பனையில்தான் பிம்பமாக்கி விபரிக்க வேண்டியுள்ளது. ஜனநாயகம் வசந்தம் உலகப் படம் எல்லாமே இப்படித்தான். இவர்கள் பேசும் ஜனநாயகத்தைக் காட்ட உதாரணத்திற்கு ஒரு நாடு இல்லை.
விஞ்ஞானம் வேறுமாதிரியானது. இவர்கள் புலன்களை ஒட்டுமொத்தமாக நம்பியவர்கள். புலனால் பார்த்ததுமே அவர்களுக்குப் பிரச்சினை தொடங்கிவிடும். எல்லோரும்தான் அப்பிள்விழுவதைப் பார்த்தார்கள், நியூட்டனுக்கு மட்டும் "அது ஏன் பூமியை நோக்கி வருகிறது?" என அரட்டல் துவங்கிற்று. தூக்கமில்லை. பரிசோதனைகள் செய்தார்; செய்தபின் இன்னும் நாலு தரம் வெவ்வேறு சூழ்நிலைகளில் செய்து பார்த்தார். பரிசோதனை சக்சஸ். பிரச்சனைக்குத் தீர்வுகளையும் காண வெளிக்கிட...
விஞ்ஞானம் என்பது விஞ்ஞான முறைமையை தெய்வமாக்கி மக்களிடம் வியாபாரத்திற்கு விட்டுள்ளது. இல்லாத ஒன்றை நம்பிக் கெட்டது அவர்களென்றால், புலன்கள் சொன்னதை நம்பி நாண்டு கெட்டது இந்த விஞ்ஞானச் சாதி. இவர்கள் நாண்டு கொள்வதற்கு நிறையக் காரணங்கள் உண்டு. சிலவற்றைச் சுருக்கமாகப் பார்போம்.
விஞ்ஞானம் பயிலுகிற மாணவனில் இயல்பாகவே மதத்திலிருந்தான ஒரு தூரப் பார்வை வந்து விடுகிறது. என்னதான் இறைவன் தனது பிரதிநிதியாக - அகிலத்தையே வசப் படுத்தும் ஆற்றலை அளித்து மனிதனைப் படைத்தாலும் படித்த விஞ்ஞானப் படிப்பு - டாவினிஸ்ம் முதல் சந்தேக வித்தைத் தூவி விடுகிறது. எதையும் கண்ணால் கண்டு நம்புகிற சாதியல்லவா? ஒரே இனப் பறவையில் உணவு, வாழிடம், இணை தேடும் போட்டியால் அவற்றின் சொண்டில் ஏற்பட்ட மாற்றத்தை நம்பி இனப் பிரிப்பு சொன்ன பாதிரியார் டாவினின் ஆரம்பப் புள்ளியை நம்பி - கதை விரிக்க அதை எந்த வித பரிசோதனை ஆதாரமுமின்றி கூச்சமும் இன்றி குரங்கிலிருந்துதான் நான் வந்தேன் என்கிறது இந்தச் சாதி.
அண்மையில் கல்விக் கொள்கையை ஆராய ஜெனிவாவில் கூடியிருந்தார்கள். அதில் எகிப்திய அறிஞர் எட்வர்ட் சஹீட் ஒரு கருத்தை முன் வைத்தார்.
"மாணவரிடம் படைப்புக் கொள்கையையும் முன் வையுங்கள். அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அவர்களாகவே தெரிந்தெடுக்கட்டும்." என்பதாக. தேர்ந்தெடுக்க ஆழும் உலகின் மாய சூழ் வலையமைப்பு விட்டு விடுமா? நிச்சயமாக நம்மை நிம்மதியாக வாழ அவர்கள் விடப் போவதில்லை. ஏனெனில் ஒட்டு மொத்தமாக மனிதனின் புலன்களைச் சூறையாடி அவனது உச்சாணிக் கொம்பாகிய தலையில் அறிவாய் ஆழ வேரோடி உட்கார்ந்து இருந்திருக்கிறது. இதென்ன மறுப்பு என்கிறீர்களா?
வீரியமிக்க சுகாதாரம் பொருளாதார அபிவிருத்தி, கைத்தொழில் புரட்சி, பாரிய தகவல் தொழில் நுட்பம்... இன்னும் வாழ்க்கையை விஞ்ஞானம் இத்தனை இலகு படுத்தியிருக்க இது என்ன புலம்பல் என்கக் கூடும். நல்லவை வளர்கிறபோது கெட்டதும் சரிக்குச் சமனாக வளரவே செய்யும். முன்னரும் இவை இருந்தவையே. என்ன, தகவல் தொழில் நுட்பத்தால் பரபரப்பாக பேசப் படுகிறது என்கக் கூடும். இது புரையோடிய புண்ணின் மேலாக மஞ்சள் தடவுகிற பேச்சே தவிர பொறுப்பான ஒழுங்கான பதிலல்ல.
இதை சுலபமாக சுருக்கினால் ஆசியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு முன்னேறாமைக்குக் காரணம் அவை மத நம்பிக்கையில் ஆழ வேரூன்றிக் கிடப்பதே என்கிறார்கள். அண்மையில் இந்திய விண்வெழி விஞ்ஞானிகளின் தடங்கல்களுக்கு அவர்களின் மத நம்பிக்கை காரணமா என பிரித்தானிய மெத்தப் படித்ததுகள் ஆராயப் போகிறர்கள் என்பது செய்தி.
இதில் இன்னும் சோகமானது, நமது மார்க்கப் பெரியார்களெல்லாம் இப்போது விஞ்ஞானத்தைத் துணைக்கழைத்து மத நம்பிக்கைகளை வலுப் படுத்தும் ஆதாரங்களை சபையில் பேசுவது இன்றைய நிலவரமாகியுள்ளது.
இலங்கயின் முன்னாள் ஜனாதிபதி ஜெ.ஆர். ஜெயவர்த்தன திறந்த பொருளாதாரத்துக்கு கதவைத்திறந்து விடுகிறபோது ஒன்று சொன்னார்.
"சிங்களக் கலாச்சாரம் என்ற ஒன்று மெல்ல இனிச் சாகும்."
சிங்களம் மட்டுமன்றி தமிழ் முஸ்லிம்களும் தங்களின் மூல ஒளியை இழந்திருக்கிறார்கள் .கலாச்சாரம் என்றால் என்ன? இதற்குரிய பதிலைமேற்குப் பார்த்து பாடம் படித்த மேதாவிகளிடம் கேளுங்கள். ஆனால் ஒரு பிரதேசத்தின் மீதான வாழ்வும் - பேசுகிற மொழியும் ஐம்புலன்களினூடு அறிவைத் தாண்டி வளர்ந்து ஆழப் படிந்து நங்கூரம் பாய்ச்சுவதால் அது கிடைப்பது. நம் உணவு, உறவு ஆத்மாவென்று பின்னிக் கிடப்பது.
உதாரணம் மொழி: 1- பாவம், அநாதை, வாடிய புஷ்பம் 2- டேய், அநாதைப் பயலே
இவை இரண்டையும் வாசிக்கிற போது நீங்கள் என்ன உணர்கிறீர்கள்?
இரண்டையும் ஆங்கிலப் படுத்தி வாசித்தாலும் அதே மன நிலை தானா? அதில் ஒன்றும் இல்லை. வெறும் தமிழ் சொற்கள் (ப்+ஊ = பூ) என்பாரிடம் நீங்கள் 'உம்மா' என அழைத்தவரை 'மம்மி' எனக் கூப்பிடுவதில் எந்தப் பாதிப்பும் இல்லை என்பது போன்றது. சொல்லின் சக்தியை இன்றைய நாம் அறியோம். எவ்வளவோ இழந்த நமக்கு இது எதற்கு என்கக் கூடும். ஆயினும் முடியவில்லையே என் செய்ய?
பிரதேசம்: "இது எங்க ஏரியா உள்ளே வராதே"
புலம்பெயர்ந்த நமக்கு இச் சொல் சிரிப்பைத் தரக்கூடும். நம் மூத்தோர் பெற்றோர் மட்டுமன்றி ஊராலும் வளர்த்தெடுக்கப் பட்டவர்கள். அவர்களுக்கு மூத்தவர்களெல்லம் மரியாதைக்குரிய மாமாக்கள், மாமிக்கள்.
ஒருவன் கெட்டது செய்யின் அவனது தகப்பனின் - குடும்பத்தின் பாடசாலையின் ஊரின் பேரைச் சொல்லி மற்றவர் பேசுவர். திருந்தச் செய்வர். என்ன செய்யலாம் அன்றைய மூத்ததுகளுக்கு ப்ரைவெஸி தெரியவில்லை. முத்திப் போனால், "அதுகள் விரும்புதில்ல. சேர்த்துடன் நாங்கள் (எல்)லாம் இருக்கம்ல" கூடவே இருந்தார்கள். கெட்டது இன்னும் கூடினால் தறுதலைகள் எனப் பெயரிட்டு கிட்டப் போகாதே என கர்மம் கற்றுக் கொடுத்தார்கள்.
என் ஊர் எனது மண் என்பதை உள்ளூர சுவாசித்து அதன் தைரியத்தில் சந்தோஷ ஆழுமை தெரிந்தவனுக்கு மூத்தோரின் வாழ்வை பெறும் பேறாய் நினைப்பதற்கு மகிந்தா மண்ணை முத்தமிட்டது புல்லரிப்பையே தந்தது. புலம் (ன்) பெயர்ந்து புடுங்குகிற நமக்கு எட்டாக்கனியது. ஒரு பிரதேசம் சார்ந்த சொல், செயல் இன்னொரு பிரதேசத்தவனுக்கு எந்த வித பாதிப்பும் தராமலே போய்விடலாம். மொடாக் குடிகாறன் என்பது இலங்கைக்குச் சரிவரலாம். யூ.கே ற்கும் ஓகே தானா அது?
ஒரு ஊரில் ஒரு பிள்ளை அநாதையாதல் என்பது பெரும் செய்தி. நாம் வளர்ந்த சூழல் எந்த அநாதை விடுதியையும் கொண்டிருக்கவில்லை. நாம் யாசிக்கிற வாழ்வின் பிதா மகர்கள் வாழ்கிற பிரித்தானியாவில் இன்று நன்கு லெட்ஷங்களில் அநாதைக் குழந்தைகள். வாழக்கையின் தனிமனித அனுபவிப்புக்களினால் சொந்தப் பிள்ளையையே தள்ளி விடுகிற நிலைமை. அவர்களின் சுய விடுதலை அத்தனை முக்கியமானது. தன் வாழ்வு, தன் சுகம், தன் சுதந்திரம் என்பதின் அறுவடை தாய்மைக் குணத்தையே களவாடியிருக்கிறது. விசு ஒரு படத்தில் புலம்புவார்
" பிள்ளை பிறந்தவுடனேயே என் மனைவி காணாமல் போய்விட்டள். பிள்ளையின் தாயாகவே அவள் எப்போதும் இருந்தாள்" என்பதாக. ஆயினும் அந்த்தத் தாய்மையைப் போற்றிக் கொண்டாடிய சமூகம் நம்முடையது.
இன்றைக்கு தனித் தீவுகளாகிவிட்ட தம்பதிகளுக்கு எடுத்துச் சொல்ல ஆட்களில்லை. "இந்த வயதிலுமா கேட்டுக் கொண்டிருப்பது" என்கிற கேள்வியை விட பத்தாம் பசளிகள் என்கிற ஏளன நோக்கால் உண்மையைத் தொலைத்ததுடன் மூத்தோரைக் கனம் பண்ணவும் தெரியாதவராயுள்ளோம். உபயோகமற்ற, பழையவற்றைப் பரணில் போடுவது போல நம் பெற்றோரை ஆச்சிரமங்களிலும் தனித் தீவிலும் வாழ வைக்கும் கொடுமைக்கும் உட்படுத்துவதை நடைமுறை நிகழ்வாக அங்கீகரித்திருக்கிறோம்.
மொத்த மனித வாழ்விலும் இலட்சியமாக, கனவு மனிதனாக மேற்கின் பரப்புரை விரிந்துள்ளது. எல்லோரையும் சாயம் பூச வைத்து... ஒரே உடுப்பாய், உணவாய், பொழுது போக்காய்... ஆ... எத்தனை சூழ்ச்சி மிகு தந்திர மேலாதிக்க உணர்வு அது. பணம் பத்தும் பண்ணும். பூலோகத்தையே தன் கீழ் கொண்டுவர முயல்கிறது.
ஆயிரக்கணக்கில் குர்திஷைக் கொன்ற குற்றம் கூறி உலக அழிவு ஆயுதம் தலிபான் தொடர்பு என இருபுறச் செவியிலும் ஓங்காரமிட்டு நம்ப வைத்த புஷ்ஷும் பிலேயரும் இப்போது நிர்வாணமாகினர். ஈராக்கில் இருந்து துருக்கிக்கு ஊடாக போடாகப் போடப்படுகிற எண்ணெய்க் கால்வாயை ஈராக்கியர் கொழுத்துகின்றனர். ஈரக்கின் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கினர் தீர்மானிக்கின்றனர். ஆக, ஈராக்கியப் போரின் அடி மூலமே எண்ணெய்தான்.
கடைசியில் ஈராக் மக்கள் (ஆறு லெட்ஷங்கள்?) அழிந்து இவர்கள் சொல்வதெல்லாம் பொய்யாகி " மத்திய கிழக்கில் அச்சுறுத்தல் சதாம். "யுத்தத்தைத் தவிர்த்திருக்க முடியாது." என கடைவாயில் இரத்தம் வடிய இன்னும் பதில் சொல்ல பிலேயருக்கு எத்தனை வஞ்சகத்தனம் வேண்டும்.
இந்த உலகின் வல்லரசு நுகரும் திறன் கூடிய மக்களைக் கொண்ட - தனி நபர் சுதந்திரத்தில் விடாப்பிடி கொண்ட அமெரிக்காவினால்தான் உலகின் நரகம் குவன்டனாமோ பரிபாலிக்கப் படுகிறது. அதி உச்சக் கண்டுபிடிப்பான தகவல்,தொழில் நுட்பம் சர்வ நாசம் கொண்டது.
ஆயிரக் கணக்கில் பலஸ்தீனிய மக்களைக் கொல்லும் இஸ்ரேலுக்கு ஆயுதங்களைக் கொடுத்துக் கொண்டே இரு - கை கால்களை இழந்த அலி என்கிற சிறுவனைக் காப்பாற்றுகிறார்களாம் என விளம்பரமும் பண்ணும்.
"எப்படிப் பார்த்தியா எங்கிட காருண்யம்?" என மொத்த மக்களை ஏமாற்றவும் அதற்குத் தெரியும்.
அது அதனூடாக மிகப் பயங்கர ஆயுதங்களுடன் அநாகரிக மனித குலமே வெறுத்து ஒதுக்க வேண்டிய அவலங்களை கசிய விடும். பயமுறுத்துகிறர்களாம். பின்னர் நீதி செய்கிறோம் நீதிமான்களும் நாங்களே என இரண்டை வெளிக் கொணரும். அதன் கொடிய கரம் உலகில் எங்கினும் தாக்க அனுமதி பெற்றது. தாக்க வல்லது.
நாம் வாழும் உலகு மிகக் கொடுமையானது. அமெரிக்காவில் ஒரு நாள் வீசப் படுகிற உணவு, சோமாலிய மக்கள் ஒரு வாரம் உண்ணப் போதுமானது. 'ரோட்டல் கம்பனிக்கு' (Total Company) எதிரான ஆபிரிக்க மக்களின் போராட்டத்தைத் தேடி வாசியுங்கள்.
நம் மூத்த பெரியோர்களைப் பார்த்ததுமே மரியாதை, மத ஞாபகங்கள் மனதில் வந்தன. எப்போதும் உள்ள ஒரே ஒரு உண்மையைப் பத்தியம் கட்டி வாழ்ந்தவர்களாக அவர்களைக் காண்கின்றோம். அவர்களின் பலம் அவர்களின் அகச் சுத்தத்தால் புடம் போடப் பட்டு மக்களை ஈர்த்து நின்றது. அது தனியே அவருக்கானதாக இருக்கவில்லை. உதாரணமாக காந்தியைச் சூழ அவரை நம்பி உயர்ந்த ஒவ்வொரு பிரதேசப் பெரிசிகளின் அணிவகுப்பு அவர் பலமாகவே காட்டப் பட்டது. நமக்கு அவர்களெல்லாம் வெறும் தத்துவங்களாயினர்.
எல்லா மதங்களினதும் மூல அடிப்படை ஒன்றுதான். "நீ சாகப் போகிறவன், அடுத்தவரை அநியாயம் செய்யாதே"
மொத்த மானிடமும் அழிகிற இறுதி நாள் பற்றி இஸ்லாத்தில் சேதி ஒன்று உண்டு. இறுதியாக ஊதப் படுகிற பயங்கர ஓசையில் மிருகங்கள் பயந்து போய் மனிதரின் வாழுமிடம் வந்து சேருமென்று. அது வரை மிருகங்கள் எந்த விதப் பயமுமற்று ஒவ்வொரு பொழுதும் அனுபவித்தே வாழ்ந்தன. அவை திகதி போட்டு துக்கமோ சந்தோசமோ கொண்டதில்லை.
பறந்தன, நனைந்தன, இசைத்தன, மனம் - மணம் பரப்பிப் பரவசம் தந்தன. நாம் வாழக் கொடுத்து வைக்காதவர்கள். அவற்றைக் கூண்டுல் இட்டு வருடத்துக்கு ஒரு முறை உயிரியல் பூங்காவுக்குப் போய்வருபவர்கள் மட்டுமே. ஏனெனில் மிருகங்களின் எல்லா இயல்புகளையும் உள்ளாய்க் கடன் வாங்கி வருஷம் பல ஆயிற்று. உள்ளாய் மிருகம் வெளியாய்ச் சிரிக்கும் மனித முகம் கொண்டலைகிறோம்.
ஆனால் நாம் வாழ்வதற்காக எப்போதும் யாரையும் நிராகரிக்க கற்று இருக்கிறோம். வல்லவர்களின் சித்தாந்தங்களை சுயம் கெட்டு நம்பி கடை விரித்து மானுடரை மாக்களாக்கி இருக்கிறோம். இது புலியாலோ, கூட்டணியினராலோ, முஸ்லிம் கோங்கிரசாலோ திணிக்கப் பட்டமையால் மட்டும் வந்ததல்ல.
நம்மிடம் பரந்து பட்ட மனதை - வெளியே உருவாக்குவதில் தலைவர்களும் நாம் பெற்றுக்கொண்ட தகவல்களும் பெரும் பங்காற்றியுள்ளது.
நாம் என்ன சொன்னாலும் சிங்களவர்களில் பெரும் பகுதியினர் கற்றவர்களே (நூற்று வீதம் போட்டு "நாங்கதானடா வீதப் படி அதிகம்" என படித்த படிப்பின் வீதங்களைக் காட்டினாலும் கூட)
சிங்கள ஒரு சஞ்சிகையில் ஒரு கவிதை, கதை கட்டுரை எதுவாவது வந்ததாயின் குக்கிராமத்தில் கூட அவரை அதிகம் பேருக்குத் தெரிந்து விடுகிறது. அவர்களின் தலைவர்கள் மேடை மட்டுமன்றி பாராளுமன்றத்திலும் கிண்டல் நகைச் சுவையாகவே சில சமயம் பேசுவதைக் காண்கின்றோம். அது தன் இள மக்களைப் பலி கொடுத்த போதும் மொத்தத் தமிழ் மக்களையும் புலியாகப் பார்க்கவில்லை. அவர்களையும் அனுதாபப் படவேண்டியவர்களாகவே காண்கிறது. சிங்கள அரசு (நீங்கள் திருப்திப் பட வேண்டாமா?) ஆயிரக் கணக்கில் வடக்கில் இருந்து வந்தோரைக் கூடவாய் வாழ வழி விட்டிருக்கிறது.
அவர்களின் வாழ்வு, எழுத்து, ஓவியம், சினிமா எதுவும் பெரிதாக நம் மக்களுத் தெரிந்ததில்லை. தெரியவைப்பதில் நம் அரசியலும் அறிவியலும் பெரும் தடையாய் இருந்தது.
நமக்கு சுதந்திரம் என்பது தேவையில்லாததோ என தமிழ் முஸ்லிம் மக்களைப் பார்த்ததும் கேட்கத் தோன்றுகிரது. மக்களின் சுய சிந்தனைக்கு வழிவிடாத எதிரிப்பு அரசியலில் மானிட நேயம் என்பதுவை நாம் தொலைத்திருக்கிறோம். நமது தலைமைகள் எப்போதாவது சிரித்து வாழ்ந்திருக்குமா என எழுகிற நினைப்பைத் தவிர்க்க முடியவில்லை.
நாம் நம்பிக் கொண்டிருக்கிற தலமைகள் நம்மிடம் விரோதி எனச்சுட்டியவனின் பாராளுமன்றத்தில் நின்றுகொண்டு - "நீ பேசலாம், உரிமை உண்டு" என அச்சமூகம் அங்கீகரித்திருக்கும் உரிமையைப் பயன்படுத்தி அவர்களைப் பார்த்து சவப் பெட்டிகளைக் கொள்வனவு செய்யச் சொன்ன தலைமை நம்முடையது. நம் மக்களுடைய வாழவைச் சூறையாடியவர்கள் இவர்கள். நாம் இலங்கையர் எனப் பேசும் நலன் விரும்பிகளை ஒருபோதும் இவர்கள் நேசம் கொள்ளப் போவதில்லை. நமக்கு அன்பு அறிவு இரண்டினதும் வீரியம் தெரியவில்லை.
கூட்டமைப்பு முஸ்லிம் கோங்கிரஸை விடச் சற்றும் குறைவின்றி இனத்துவேசம் கக்கும் சிகல உறுமய, பூமிப் புத்ரயோ கட்சிகளை சிங்கள மக்கள் கண்டு கொள்ளவே இல்லை.
குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டியது போதும் இனி. கற்றவர்கள் இனம் கடந்து இனியாவது தமிழ் முஸ்லிம் சிறுபான்மை இன மக்களின் வாழவை மீட்டுக் கொடுக்கட்டும். இந்தப் பிணம் தின்னும் பேய்களின் சல்லாபச் சேட்டையான வார்த்தைகளில் மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாந்து போய்விட வேண்டாம். உண்மையான எந்த மத - இன வாதியுமே இவர்களின் நய வஞ்சக வார்த்தையில் தன் வாழவைப் பணயம் வைக்க வரமாட்டான். ஒவ்வொரு வாழ்க்கையின் இறுதிப் பொழுதிலும் இதற்காகவே வாழ்ந்தேன் என்கிற திருப்தியாவது இருக்க வேண்டும். அதற்கு அவனுக்கு நீங்கள் சொல்வதை விட ஆயிரம் காரணங்கள் இருக்கக் கூடும். மானிட நேயம் என்பது வாய்ப் பேய்ச்சிலும் நீங்கள் தொங்கவிடும் நாக்கின் பட்டஙக்ளினாலும் வருவதில்லை என்பதை உணருங்கள்.
உலகின் மிகக் கொடியது இளமையில் வறுமை. அதில் பிறந்தது தவிர எதுவுமே கண்டறியாதவர்களை வைத்து பத்திரிகை செய்தார்கள். அரசியல் பண்ணினார்கள் சவங்களாய் எண்ணிக்கையில் தந்தார்கள்
அவர்களின் வேதம் ஒன்றாகவே இருந்தது. "எதிரி - கொல்" நம்ம ஆளு - நேசி. யாரை நோக்கியும் சுட்டு விரல் நீட்ட இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
பகையும், பொய் வீரமும் விஷ அறமும் பேசினரே தவிர வாழ்க்கையைப் பேசவில்லை, மானிட அவலம் சொன்னதில்லை. மகாகவி மகன் துவங்கி பால(க)ன் வரை பள்ளியின் பாயில் புணர்ந்த கதை சொன்னாலும் அதில் உள்ளாய்க் கிடக்கும் நச்சு தெரிந்ததே தவிர நேசம் தெரியவில்லை.
சிங்கள தமிழ் முஸ்லீம்கள் இழந்தது அரிதான உயிர்களை. நம்மக்களின் பார்வை செவி சிந்தனை என்பவற்றில் முடமாக்கப் பட்டிருக்கிறார்கள். இன்னமும் அநேக வலைப் பின்னல்கள், பத்திரிகைகள் அதையே முதலாக வைத்து பிழைப்பை நடத்துகின்றன. மக்களின் மீது உண்மையான அக்கறை இருக்குமாக இருந்தால் முதலில் வெட்கப் பட்டு அழுங்கள். அதன் பின்னராவது சத்தியத்தைச் சொல்லுங்கள்.
நமக்கு பறவைகளின் மொழி தெரியாது. மன ஒன்றுகை தெரியாது. உயர் காவியங்கள் தெரியாது. எல்லாவற்றையும் கணிணியில் ஏற்றி வைத்து யாரோ சொன்னதை நம்பி அல்லது விரும்புவதை மட்டும் படித்துக் கொண்டு நம் வாழ்வை இழந்திருக்கிறோம்.
கடைசியாக, நாம் நம் மண்டையில் நிரப்பி வைத்திருக்கிற அத்தனை நவீன தத்துவங்களுமே மேற்கு இட்ட விஷ வாயுக்களாகும். வாழ்வின் எந்தப் பொழுதும் அனுபவிப்பதற்கானதே. எதையும் ஏன் எதற்கு எப்படி எனக் கேள். இப்படி எத்தனை சொன்னீர் முதியோரே. மிகத் தொன்மையான கலாச்சாரங்களுடன் வாழ்வின் தேவையை இலகு படுத்தும் சாதனங்களுடன் ஒரு வாழ்வு... சிந்தித்ததுண்டா? ஓரளவு ஈரான் போல.
முதலில் நம் உள்ளம் சுத்தமாகட்டும். மற்றவர் எப்போதும் நம்பும்படியாக நம்மை வைப்போம். அதன் பிறகு ஆத்ம திருப்தி சந்தோஷக் கணப் பொழுதுகள் தானாகவே வந்து சேரும். வெற்றிடமாக்கி வைப்பதில் எப்போதும் ஆதாயம் உண்டு. அப்போதுதான் புதுப் பொருட்கள் உள்வர வாய்ப்புண்டு.
கொசுறு: சுவர்ணவாஹினி வருடாவருடம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக வழங்கும் பரிசில்களில் ஒன்றைக்கூடத் தமிழ் நாடகங்கள் இதுவரை பெறும் தகுதியைப் பெறவில்லை. முந்திரிக் கொட்டை போல துவேசமாக்கும் எனப் பேச வெளிக்கிடாது நாம் நம் மக்களை வைத்திருக்கிற மட்டத்தைத் தேடிப் பாருங்கள்.
"புது"க் குடியிருப்பு
நீண்ட வருடங்களின்
பின் மகளார் தோட்டம் துப்புரவு செய்தாள்.
மகன் கூதலை விரட்ட கிணற்றடியில்பாடிக் குளித்தான்
நீண்ட ரயில் செய்து குழந்தைகள் கல்லூரி போனார்கள் சைக்கிள்களில் தோள் நிமிர்த்தி - ஊரவர் புன்னகையாய்க் கடந்தனர். "ஆபீசு போறோம்ல" மார்க்கற்றில் விலை மாரைச் சுடவில்லை மனுசி - முன் வீட்டில் மல்லிகை வாங்கி முருகனைப் பார்க்கப் போனாள் இலங்கை வானொலி வீடெங்கும் பொங்கி வழிந்தது. வெளிச் சுவரின் - பழைய வெடிக்காயம் பூச கொத்தனார் வந்திருந்தார். பின்னேர வகுப்பின் உபயம் இளசுகள் சீவிச் சிங்காரித்து சைக்கிளில் உலாவரக் கண்டேன் கிணறு தோண்டும் காலம் பார்க்க பரிகாரி தேடிப் போனேன் கொடுத்து வைத்த கடைக்காரன் எல்லா மேய்ப்பர்களின் நீதியும் நியாயமும் நாட்டு நடப்புகள் முதலில் தெரிந்தவன் அரசியல் இனிமேல் இங்கு 'ஹராம்' என்றான். அதாகப்பட்டது வீதியில் இருந்ததை வீடுவரை கொண்டு போய் பட்டது போதுமினி.
இனியென்ன புதுக் குடியிருப்புத்தான்
|