|
தீர்வுக்கான கொள்கையை முன்வையுங்கள்
- தினகரன் தலையங்கம்
இலங்கையின் உள்விவகாரத்தில் சில உலக நாடுகள் தலையிடுவதற்கு அரசாங்க தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்துக்காக ஆணை வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றது. வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தெளிவான ஆணையே சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பு என்று கூட்டமைப்பின் தலை வர் இரா. சம்பந்தன் அண்மையில் கூறியிருக்கின்றார்.
தமிழ் பேசும் வாக்காளர்கள் எதற்கு ஆணை வழங்க வேண்டுமெனக் கூட்டமைப்புத் தலைவர்கள் கேட் கின்றார்களோ தெரியவில்லை. இனப் பிரச்சினையின் தீர்வுக்காக ஆளுமையுடன் செயற்படுவோம் என்று கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மேலோட்டமாகக் கூறுகின்றார்களேயொழியத் தீர்வுக்காக அவர்கள் முன்வைக்கும் கொள்கைத் திட்டம் என்ன என்பதை மக்களுக்கு இன்னும் வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில் எந்தக் கொள்கைக்காக மக்கள் ஆணை வழங்குவது என்ற கேள்வி எழுகின்றது.
கடந்துபோன நாட்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனிநாட்டுக் கோரிக்கையுடன் தன்னை நெருக்கமாக இனங்காட்டியது. கூட்டமைப்பு ஒருபோதும் தனிநாட்டை ஆதரிக்கவில்லை என்று சில தலைவர்கள் இப்போது கூறுகின்றனர். அது சந்தர்ப்பத்தையொட்டிய பேச்சே யொழிய உண்மையான நிலைப்பாடாகக் கொள்வதற்கில்லை.
புலிகளின் நிகழ்ச்சி நிரலை முழுமையாக ஏற்றுக்கொண்ட நிலையிலேயே கூட்டமைப்பு புலிகளுடன் சேர்ந்து செயற்பட்டது. எனவே தனிநாட்டைக் கூட்டமைப்பு ஏற்கவில்லை எனக் கூறுவது அர்த்தமற்ற பேச்சு.
எவ்விதமான தீர்வு இனப் பிரச்சினைக்குப் பொருத்தமானது எனத் தீர்மானிக்கும் உரிமை எல்லா அரசியல் கட்சி களுக்கும் இருப்பது போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் உண்டு. அதேபோல, ஒரு கட்சி முன்வைக்கும் தீர்வை ஏற்பதும் நிராகரிப்பதும் சம்பந் தப்பட்ட மக்களுக்கு உள்ள உரிமை. எனவே வாக்க ளிக்கவுள்ள மக்களின் பரிசீலனைக்காகக் கொள்கைத் திட்டத்தை முன்வைக்க வேண்டியது அரசியல் கட்சிகள் தட்டிக் கழிக்க முடியாத பொறுப்பு.
கூட்டமைப்புக்குக் கொள்கை இல்லை என்ற குற்றச்சாட்டை மறுதலிப்பதற்காக, ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப் படையில் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக சம்பந்தன் கூறியிருப்பது நம்பகமானதல்ல. ஒஸ்லோவில் நோர்வே அரசாங்கத்தின் அறிக்கையொன்று வெளி யிடப்பட்டதேயொழிய அதைப் பிரகடனமெனக் கூற முடியாது. சமஷ்டி அடிப்படையில் தீர்வு காண்பதற்கு இரு தரப்பினரும் இணங்கிக் கொண்டனர் என்பதே அந்த அறிக்கையின் சாராம்சம்.
சமஷ்டி அடிப் படையிலான தீர்வில் பல வகைகள் உண்டு. எந்த வகையான தீர்வைக் கூட்டமைப்பு முன்வைக்கின்றது என்பது பற்றிச் சம்பந்தன் எதுவுமே கூறவில்லை. கொள்கை இல்லை என்ற குற்றச்சாட்டை மறுதலிப்ப தற்காக ஏதோ கூறியிருக்கின்றார் என்றே கருத வேண் டியுள்ளது.
தலைவர்களின் தவறான வழிகாட்டல் காரணமாகத் தமிழ் மக்கள் பல பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து நொந்து போயுள்ளனர். நடைமுறைச் சாத்தியமற்ற எதிர் பார்ப்புகளைத் தோற்றுவித்தும் சர்வதேச சமூகம் பற்றிப் பேசியும் மீண்டும் அவர்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கக் கூடாது.
சர்வதேசம் இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் எனக் கூறுவது போன்ற அதீத கற்பனை வேறொன்றும் இல்லை. இலங்கை அரசாங்கத்துடன் பேசியே பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். தீர்வில் அக்கறையுள்ள சகல அரசியல் கட்சிகளும் இதைக் கவனத்தில் எடுத்துத் தீர்வுக்கான கட்சியின் கொள்கையை மக்களின் பரிசீல னைக்காக முன்வைக்க வேண்டும். அதுவே அரசியல் தீர்வுபற்றிய அக்கட்சியின் கருத்தீடுபாட்டை உறுதிப் படுத்தும்.
|