|
உங்கள் கேள்விகளுக்கு வரதரின் விடைகள் (பகுதி 2)
எழுப்பப்படும் கேள்வி:-
தமிழர்களின் அபிலாஷைகளின் அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வைப் பெறும் வகையாக சிங்களத் தலைவர்களைப் பணிய வைப்பதற்கு புலிகள் தமிழர்களின் அரசியல்-இராணுவப் பலமாக இருந்தார்கள். இப்போது புலிகள் அழிக்கப்பட்டதால் தமிழர்கள் பலமிழந்து போயிருக்கிறார்கள் அல்லவா? புலிகள் அழிக்கப்பட்டதால் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை யாரால் நிரப்ப முடியும்? தமிழர்களுக்குரிய அரசியற் தீர்வைப் பெறுவதற்கு சிங்களத் தலைவர்களை பணிய வைக்க இனிமேல் யாரால் முடியும்?
அதற்கான விடை
கேள்வியை எழுப்பியுள்ள அன்பார்ந்த நண்பர்களே! உங்களின் கேள்விலேயே பல தவறுகள் உள்ளன. புலிகள் இராணுவரீதியில் ஒரு பலம் வாய்ந்த சக்தியாக இருந்தார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் புலிகள் தமிழர்களின் அரசியல் இராணுவ பலமாக இருந்தார்கள் என்பதே உங்கள் கேள்வியிலுள்ள முதலாவது தவறு. அதைப்பற்றிய விளக்கத்துக்கு போவதற்கு முதலில் உங்கள் கேள்வியில் உள்ள இரண்டாவது தவறையும் சுட்டிக் காட்டுவது அவசியம் என்று கருதுகிறேன். அதாவது, புலிகள் சிங்களத் தலைவர்களை அடிபணிய வைக்கக் கூடிய சக்தியாக இருந்தார்கள் என்பது இரண்டாவது தவறாகும். உங்களது கேள்வியில் உள்ளடங்கியிருக்கும் மூன்றாவது தவறையும் இங்கு கூறிவிடுகிறேன். அதாவது புலிகள் அழிக்கப்பட்டதால் தமிழர்களின் அரசியல் பலத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று சொல்வதே மிகப் பெரிய தவறாகும். மேலும் புலிகள் அழிக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில் சிங்களத் தலைவர்களைப் பணிய வைக்க யாரால் முடியும் என்று ஆதங்கத்துடன் கேட்பதே அடிப்படையில் ஒரு தவறாகும்.
ஆக மொத்தத்தில் அன்பர்களே! உங்கள் கேள்விகளில் உள்ள தவறுகளை அடிப்படையாகக் கொண்டு விளங்கப்படுத்தினாலே உங்கள் கேள்விக்குரிய பதிலைத் திருப்திகரமானத் தந்தவன் ஆவேன் என நினைக்கிறேன்.
முதலாவதாக! தமிழர்களின் அரசியல் இராணுவ பலமாக புலிகள் இருந்தார்களா? ஏன்ற கேள்விக்கான விடையைக் காண்போம். இதற்கான விடையை உங்களுக்கு நான் புரிய வைப்பதற்கு புலிகளின் இராணுவப் பலம் மற்றும் தமிழர்களின் அரசியற் பலம் ஆகிய இரண்டும் வௌ;வேறானவை – அவை ஒன்றுக்கொன்று முரண்பாடான வௌ;வேறு அம்சங்களாகவே செயற்பட்டன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். புலிகளிடம் நிறைய ஆயுதங்கள் இருந்தன.
பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களுக்கு ஆயதப் பயிற்சி கொடுத்து ஆயுததாரிகளாக்கினார்கள் அந்த இளைஞர்களை போர்க்களங்களில் விட்டு புலிகள் விடாப்பிடியாக சண்டை பிடித்தார்கள், ஏனைய தமிழ் இயக்கங்களையெல்லாம் தடை செய்து அவற்றை மக்கள் மத்தியில் நின்று சுதந்திரமாக அரசியல்ரீதியாகவோ இராணுவரீதியாகவோ செயற்பட முடியாமற் பண்ணினார்கள். அந்த இயக்கங்கள் ஒவ்வொன்றையும் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான போராளிகளைக் கொன்றார்கள். ஓராயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினரைக் கொன்றார்கள். பல ஆயிரக்கணக்கான சிறீலங்கா அரசின் படையினரைக் கொன்றார்கள். தமிழ் அரசியற் தலைவர்களைக் கொன்றார்கள். இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை அதிபர் பிரேமதாசா என அரசுகளின் தலைவர்களையே கொல்லும் வல்லமை பெற்றிருந்தார்கள். பல அமைச்சர்களைக் கொன்றார்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி சிங்களவர்களை பெண்கள் குழந்தைகள் என்ற வேறுபாடின்றி குரூரமாகக் கொன்றார்கள் இந்திய இராணுவத்துடன் தொடர்பு வைத்திருந்தது வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு ஆதரவளித்தது என்பவற்றிகாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சாதாரண தமிழர்களை சித்திரவதை செய்து பலியெடுத்தார்கள்; தம்மை நம்பிய முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களை யுத்த களங்களில் பலி கொடுத்தார்கள் இவையெல்லாம் புலிகள் கொண்டிருந்த இராணுவ பலத்தின் சாட்சியங்கள் என்பதை நான் மறுக்கவில்லை!
ஆனாலும் இந்தத் தரவுகளை – தகவல்களை வைத்துக் கொண்டு புலிகளின் இராணுவப் பலமானது தமிழர்களின் அரசியற் பலமாக இருந்தது என்று தப்பாகக் கணக்குப் போடாதீர்கள்.. மாறாக புலிகளின் இராணுவப் பலமானது தமிழர்களின் உண்மையான அரசியற் பலங்களை முற்று முழுதாக பலவீனமாக்கியது என்பதே உண்மையாகும்.
உங்களுக்குத் தெரியும்! 1983ம் ஆண்டு ஜூலையில் சிறி லங்கா அரசு கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலைக் கலவரத்தைத் தொடர்ந்து அப்போது இருந்த நிலைமைகளை மீட்டுப் பாருங்கள். அவற்றை வரிசைப் படுத்துகிறேன் கவனியுங்கள்:-
- எமக்கெதிரான சிங்கள இனவாதத்தின் கொடூரம் கண்டு உலக நாடுகள் முழுவதுவும எமக்கு அநுதாபம் காட்டின!
- இந்தியா உடனடியாக சிறி லங்கா அரசை மிரட்டி அடக்கி எமக்கு ஆதரவாகத் தோள் கொடுத்து எமது இளைஞர் இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சிகள் தந்து ஆயுதங்கள் தந்து எந்த சர்வதேச விமர்சனங்களையும் பொருட்படுத்தாது ஆதரவு காட்டியது!
- தமிழக அரசென்ன! தமிழகத்தில் அரசியல்வாதிகளென்ன! பெருந்தொழிற்சாலை அதிபர்கள் தொடக்கம் வீதிகளிலே கடதாசி பொறுக்கிப் பிழைக்கும் வறுமைப்பட்ட தொழிலாழி வரை ஈழத் தமிழர்களுக்கு உணர்ச்சி ப+ர்வமாக ஆதரவளித்து நின்றார்கள்! அகதிகளான ஈழத் தமிழர்களை வரவேற்றார்கள்! அன்போடும் இரக்கத்தோடும் ஆதரித்தார்கள்! அரவணைத்தார்கள்!
- ஈழத்தமிழ்த் தாய்மார்;களும் தந்தையர்களும் எமது ஒரு பிள்ளை இந்த இயக்கத்திலே மற்ற பிள்ளை அந்த இயக்கத்திலே என்று புலியா ஈபிஆர்எல்எவ்பா, ரெலோவா, புளொட்டா என்ற வேறுபாடின்றி இவையெல்லாம் ஈழத்தமிழர்களின் வௌ;வேறு படைப்பிரிவுகள் என்று கருதி சோற்றுப் பார்சல் தொடக்கம் தமது உயிர்களைத் தியாகம் செய்வது வரை உறுதியோடு நின்று உளப் பூர்வமாக ஆதரவு தந்து நின்றார்களல்லவா?
- சிங்கள மக்கள் மத்தியில்; இடதுசாரிக்கட்சிகளும் விஜய குமாரதுங்கா போன்ற ஜனநாயகவாதிகளும் மேலும் பல நூற்றுக் கணக்கான செல்வாக்கு மிக்க புத்திஜீவிகளும் ஏன் கணிசமான அளவு பிக்குமார்களும் எமது அடிப்படையான கோரிக்கைகளுக்கு ஆதரவாக ஒத்துழைப்புக் குரல் தந்தார்களல்லவா?
- இயக்கங்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்ப்பதற்கு ஓர் ஐக்கிய முன்னணி அமைவது அவசியம் அதுவே தமிழர்களுக்கு ஓர் அரசியற் பலத்தை ஏற்படுத்தும் என்பதற்காக நாம் எத்தனையோ வேறுபாடுகளின் மத்தியிலும் 1984-85ம் ஆண்டுகளில் ஈழத்தேசிய விடுதலை முன்னணியை உருவாக்கி அதனை முன்னேற்றுவதற்காக எத்தனையோ முயற்சிகளையும் விட்டுக் கொடுப்புகளையும் மேற்கொண்டோம். ஏன் சில உயிர்த் தியாகங்களையும் கூட தாங்கிக் கொண்டோம். அந்த ஒற்றுமையைக் காட்டி இந்தியா சிறிலங்கா அரசை பூட்டானுக்கு வரப்பண்ணி ஒரு பேச்சுவார்த்தைக்கும் ஏற்பாடு செய்தது. திம்புப் பேச்சுவாத்தையின் போது எமது ஒற்றுமை கண்டு அன்று இலங்கை அரசாங்கமே அலறி நின்றது. ஆனால் அந்த ஒற்றுமை முயற்சிகளையெல்லாம் சிதறடித்தது சீரழித்தது புலிகளல்லவா!
இவ்வாறு தமிழருக்கு இருந்த அரசியற் பலங்களையெல்லாம் ஒவ்வொன்றாக நாசம் பண்ணியதுதானே புலிகள் செய்த சாதனை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
சகோதர இயக்கங்களை அழித்து தங்களை ஆதரிக்காத தமிழர்களையெல்லாம் கொலை செய்து தமிழர்களை எந்த நேரமும் புலிகளின் துப்பாக்கிகளுக்கு பயந்தே வாழ வேண்டிய ஒரு நிலையை உருவாக்கியதன் மூலம் சந்தேகங்கள் கொண்ட தமிழ் மக்கள் மத்தியில் போராட்டம் பற்றி இருந்த நம்பிக்கைகளையெல்லாம் சிதறடித்ததுவும் புலிகள்தானே!
புலிகள் தமிழர்கள் மத்தியில் அடிப்படையான ஜனநாயகத்தை அனுமதித்தார்களா! குறைந்த பட்சமான கருத்து சுதந்திரத்தையாவது அனுமதித்தார்களா? இல்லையே!
தமிழ் இயக்கங்கள் தொடர்பாக தமிழ்மக்கள் பயமற்று தமது பிள்ளைகளின் இயக்கங்கள்தானே என்று உரிமையோடு உறவு கொண்டிருக்க புலிகள் அனுமதித்தார்களா? அதுவும் இல்லையே!
புலிகள் தமது இராணுவ பலத்தைக் கொண்டு தமிழர்களை ஓர் அரசியல் அடிமைகளாகத் தானே வைத்திருந்தார்கள்!
தமிழர்கள் போராட்டத்தில் விரக்தியடைய வேண்டும்.
தமிழர்கள் தமது மண்ணைவிட்டு வெளிநாடுகளுக்கு ஓடி விட வேண்டும் என்ற சிங்களப் பேரினவாதிகளின் ஆசைகளை நடைமுறையில் நிறைவேற்றிக் கொடுத்தவர்கள் புலிகள்தானே!
அவை மென்மேலும் நிறைவேறும் நிலைமைகளை ஏற்படுத்தியதுவும் புலிகள்தானே!
தமிழர்கள் மத்தியில் சட்டரீதியாகவும் அரசியல் ப+ர்வமாகவும் மிகுந்த வாக்கு வல்லமை கொண்ட மதிப்பிற்குரிய திரு அமிர்தலிங்கம் மற்றும் தங்கத்துரை போன்ற மூத்த தலைவர்கள்,
மனிதாபிமான அடிப்படையில் எல்லோரையும் ஒரு சமூகப் போராட்டத்தில் அணைத்துச் செல்லும்; வல்லமை கொண்ட பத்மநாபா, மற்றும் சுபத்திரன், போன்ற தலைவர்கள், அரசியல் யாப்பு நிபுணத்துவம் கொண்ட நீலன் திருச் செல்வம் மற்றும் கேதீஸ் போன்ற அறிவுசார் நிபுணர்கள், ரஜனி திரணகம மற்றும் மத்திய கல்லூரி அதிபர் ராஜதுரை போன்ற சமூக உணர்வு கொண்ட கல்வித்துறை சார் நியுணர்கள், பஞ்சலிங்கம் மற்றும் மன்னார் மன்சூர் போன்ற நிர்வாகத் துறை சார் நிபுணர்கள் சிவபாலன் மற்றும் மதிமுகராசா போன்ற தன்னலமற்ற சமூக சேவகர்கள் என தமிழ்ச் சமூகத்தின் சக்தி மிக்க அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களையும் பல்துறை நிபுணர்களையும் சமூக அக்கறை கொண்ட தியாக சீலர்களையும் அநியாயமாகப் பலியெடுத்து தமிழர்களை சிங்கள இனவாதிகளுக்கு எல்லா வகையிலும் வசதியாக்கினவர்களல்லவா புலிகள்;!
தமிழர்களுக்கு ஆதரவாகவும் நட்பு சக்தியாகவும் இருந்த இந்தியாவை அந்த நிலையிருந்து தூரவிலகுவதற்குக் காரணமாக செயற்பட்டதுவும் புலிகளே!
புலிகள் அன்றைக்கு இந்திய-இலங்கை சமாதான உடன்பாட்டுக்கு ஆதரவாக இந்தியாவுக்கு அணைவாக நின்று செயற்பட்டிருந்தால் இந்த 13வது அரசியல் யாப்பு திருத்தந்தான் தமிழர்களுக்கான அரசியற் தீர்வு என்ற நிலையை மாற்றி தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளுக்கு உரிய விதமாக ஓர் அரசியற் தீர்வை இந்தியாவின் அனுசரணையுடன் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஜனாதிபதியாக இருந்த காலத்திலேயே பெற்றிருக்கலாமல்லவா?
அடுத்து சந்திரிகா தாமாகவே முன்வந்து எந்தவொரு சிங்களத் தலைவரிடம் இருந்தும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தமிழர்களுக்கான அதிகாரப்பரவலாக்கலை முன்வைத்து ஒரு வருடங்களாக பேச்சுவாத்தை மூலம் முயற்சித்தார்களே அப்போதாவது புலிகள் அந்தச் சந்தர்ப்பத்தில் முறையாகவும் நியாயமாகவும் பேச்சுவார்த்தை நடாத்தி சிங்கள மக்களின் அனுமதியுடனேயே ஓர் அரசியற் தீர்வைப் பெற்றிருக்கலாமல்லவா?
ஆனால் தமிழர்களுக்கு தமிழீழ விடுதலையை அடைவோம் என்று ஆசை காட்டி தானாக வந்த சந்தர்ப்பத்தை எல்லாம் நாசம் பண்ணியவர்களல்லவா புலிகள்!
2002ம் ஆண்டு உலக நாடுகள் இலங்கை அரசை வற்புறுத்தி புலிகளுக்கு சாதகமான ஒரு யுத்த நிறுத்தத்தையும் ஆக்கி தமிழர்களுக்கு அதிகபட்சமான மாநில சுயாட்சிக்கு இலங்கை அரசை ஒப்புக் கொள்ள வைத்ததே!
ஆனால் அன்றைய இலங்கை அரசின்; அரசியல் மற்றும் இராணுவ பலத்தில் இருந்த பலவீனங்கள் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்து வானுக்கும் மண்ணுக்கும் கடலுக்கும் தமக்கு இறைமை வேண்டும் என முட்டாள்த்தனமாகக் கேட்டு சர்வதேச நாடுகளின் அளவில் தமிழர்களுக்கு கிடைத்த அந்த நல்ல வாய்ப்பையும் வீணாக்கியவர்களல்லவா புலிகள்!
புலிகள் தமிழர்களின் அரசியற் பலமாக இருக்கவில்லை. மாறாக தமிழர்களை அரசியல் ரீதியில் பலவீனப் படுத்தியது மட்டுமே புலிகள் செய்த சாதனை!
ஈழத்தமிழர் இயக்கங்கள் தங்களுக்குள்ளேயே சண்டைபிடிக்கின்றன என்று கண்டு கொண்ட தமிழக மக்கள் ஈழத்தமிழர் இயக்கங்கள் மீது கொண்டிருந்த ஆதரவைக் குறைக்கத் தொடங்கினார்கள். தமிழர்களுக்கு உதவுவதற்காக வந்த இந்தியப் படைகளுடன் புலிகள் சண்டை தொடுத்ததனால் ஈழத் தமிழர்கள் மீது கொண்டிருந்த அன்பும் அநுதாபமும் தமிழக மக்கள் மத்தியில் வெகுவாகக் குறைந்தது. கடைசியில் தமிழகத்தில் வைத்து தமது அன்பிக்குரிய இளம் தேசத் தலைவர் ராஜீவ் காந்தியைப் புலிகள் கொன்றார்கள் என்ற வேதனையாலும் கோபத்தாலும் தமிழக மக்கள் ஈழத் தமிழர்கள் என்றாலே ஆபத்தானவர்கள் அண்டத் தகாதவர்கள் என்ற நிலைக்குப் போனார்கள். இதற்கெல்லாம் காரண கர்த்தாக்கள் புலிகள்தானே!
சர்வதேச சட்டங்கள் மற்றும் ஒழுங்குகளையெல்லாம் மீறி பயங்கர ஆயுதங்கள் கடத்தியமை, சர்வதேசங்கள் ரீதியாக போதைப் பொருட்கள் கடத்தியமை, ஏனைய உலக பயங்கரவாத இயக்கங்களோடு ஆயுதங்கள் ரீதியாகவும் பயிற்சிரீதியாகவும் போதைப் பொருட்கள் வகையாகவும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டமை என்பனவற்றால் புலிகள் இலங்கை அளவிலும் இந்து சமுத்திர மற்றும் தென்னாசிய பிராந்திய மட்டத்திலும், ஏன்! குறிப்பிட்ட அளவில் சர்வதேசங்கள் ரீதியிலும் ஆபத்தான இயக்கமே புலிகள் என உலக நாடுகள் கருதின.
இதனால் புலிகளை பயங்கரவாத இயக்கம் என உலக நாடுகள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாகத் தடை செய்தன. புலிகளின் ஆதரவாளர்கள் மீது நாடுகள் ஒவ்வொன்றும் தத்தமது பொலிஸின் சங்தேகங்களை உஷார் படுத்தின. மொத்தத்தில் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து இருக்கும் தமிழர்கள் அனைவரையும் உலக நாடுகள் சந்தேகத்துக்குரிய பிராணிகளாக பார்க்க, கண்காணிக்க ஆரம்பித்தன.
ஒருகாலத்தில் ஈழத் தமிழர்கள் என்றால் மேற்கத்தைய நாடுகளில் திறமைக்கும் நம்பிக்கைக்கும் உரியவர்கள்; என்று பெயர் பெற்றிருந்தார்கள்!
இந்த நிலைமைகளை முற்றுமுழுதாக நாசம் பண்ணியவர்கள் புலிகளும் புலிகளின் பிரமுகர்களும்; புலிகளின் ஏஜன்டுகளும் அல்லவா!
அவ்வாறிருந்த போதும், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் உலக நாடுகள் புலிகளோடு உறவு கொண்டு சிறிலங்கா அரசையும் பேச்சுவார்த்தைக்கு வரப்பண்ணி முயற்சித்தன. ஆனால் அந்த வாய்ப்புகளையெல்லாம் வீணடித்தது புலிகளல்லவா!
தமிழில் வைக்கோற் பட்டடை நாய் போல என்று சொல்வார்கள். அது போல புலிகள் தானும் எந்த நன்மையையும் தமிழர்களுக்கு பெற்றுக் கொடுக்காமல் பெற்றுக் கொடுக்க முயற்சித்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியையும் ஆக்கபூர்வமாக செயற்படவிடாமல் தடைகள் செய்து பிரேமதாசாவுடன் கூட்டுச் சேர்ந்தும் சர்வதேச ஆயுதக்கடத்தல்காரர்களில் தங்கியும்; தமிழ்நாட்டின் சில சில்லறை அரசியல்வாதிகள் மற்றும் சினிமாக்காரர்களை நம்பியும் தமிழர்களின் போராட்டத்தையே கடைசியாக ஒரு விழலுக்கு இறைத்த நீராக ஆக்கிய விண்ணர்களல்லவா புலிகள்!.
புலிகளின் இராணுவப் பலம் தமிழர்களுக்கு செய்ததென்ன?
முதலில் மற்ற தமிழ் இயக்கங்களுக்கு எதிராக சண்டைகளைத் தொடுத்து மற்ற இயக்கங்கங்களைத் தடை செய்ததன் மூலம் புலிகள் சாதித்த தென்ன?.
நீங்கள் இரண்டாம் வகுப்பு பாலர் பாடத்திலேயே படித்திருப்பீர்கள் ஒற்றுமைக்கும் பலத்துக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி.. நான்கு மாடுகள் ஒற்றுமையாக நின்ற போது அவை ஒவ்வொன்றையும் எப்படியாவது தனது இரையாக்கிவிட நினைத்த சிங்கத்தால் முதலில் ஒன்றும் செய்ய முடியவில்லை. மாடுகள் ஒன்றோடு முரண்பட்டு மோதி தனித்தனியான போது சிங்கம் ஒவ்வொரு மாட்டையும் அடித்து கடித்து தின்று விட்டது . இதை நாங்கள் ஆரம்பத்திலேயே மீண்டும் மீண்டும் கூறினோம்;.
ஒரு கையில் உள்ள விரல்களில் பெருவிரல் பலமான ஒன்று தான் அதற்காக மற்ற நான்கு விரல்களையும் வெட்டி லிட்டால் அந்தக் கை பலமானதாக இருக்கமாட்டாது என்று கூறினோம்
ஒரு சுள்ளியை உடைக்கலாம் ஆனால் அந்த சுள்ளி விறகுகளை ஒன்று சேர்த்த விறகுக்கட்டை அவ்வளவு சுலபமாக உடைக்க முடியாது என்று சொன்னோம்
புலிகள் கேட்டார்களா? அல்லது புலிகளின் ஆதரவாளர்கள்தான் கேட்டார்களா?
அடிப்படையான இரண்டாம் வகுப்பு அறிவையே விளங்கிக் கொள்ளாமல் செயற்பட்டு தமிழர்களின் அரசியல் பலத்தை பலவீனப் படுத்திய முன்னாள் புலிகளும் புலி ஆதரவாளர்களும் தாம் ஈழத் தமிழ் சமூகத்துக்கு செய்த மாபெரும் சமூகத் தவறை உணர்ந்து இனியாவது திருந்துவார்களா? இன்று ஈழத்தமிழ் சமூகம் சிங்கள இராணுவ வீரர்களின் முன்னால் ஒரு கௌரவமான பிரஜைகளாக அல்லாமல் தமது ஒரு சாண் வயிற்றுக்காகவும் தமது பிள்ளைகளுக்கு பால்மாவுக்காகவும் வரிசையில் நின்று தமக்குள் ஆளையாள் முந்துவதற்காக நெருக்கி அடிபட்டு அண்ணே! அண்ணே! ஐயா! ஐயா! என்று கையேந்தி பிச்சை கேட்டு நிற்கும் நிலையில்தால் புலிகள் ஈழத் தமிழர்களை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.
மழை முடிந்தாலும் தூவானம் விடவில்லை என்பார்கள். அதேபோல உள்ளுரில் புலிகளின் கதை முடிந்தாலும் வெளிநாடுகளில் எஞ்சியிருக்கும் புலிப்பிரமுகர்களும் புலி ஏஜண்டுகளும் இன்னமும் தமிழர்களின் உண்மையான நலனில் அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை. இல்லாத ஊருக்குப் போக வழி காட்டுபவன் போல, சர்வதேச குற்றவாளியான பத்மநாதனை புலித் தலைவனாக்கி, போராட்டம் என்றால் என்ன என்றே அதன் வாசனை கூட அறியாமல் உலகம் புரிகிற காலத்தில் அமெரிக்காவில் வளர்ந்த உருத்திரகுமாரனைக் கொண்டு வானில் தவழும் தமிழீழ தேசம் ஒன்றை கட்டுவதற்காக எந்தத் தேச மண்ணிலும் வெளிப்படையாகக் கூட முடியாத பாராளுமன்றம் ஒன்றை உருவாக்கப் போவதாக ஒரு விக்கிரமாதித்தன் திட்டத்தை வேதாளங்களைக் கொண்டு பரப்புகிறார்கள். அவர்கள் ஆடுவதும் பாடுவதும் காசுக்கே! என்பது இப்போது அம்பலத்துக்கு வந்துவிட்டது.
வெளிநாட்டுத் தமிழர்களிடம் தொடர்ந்து பணம் பறிப்பதற்கும் வெளிநாடுகளில் இதுவரை திரட்டியுள்ள சொத்துக்களைப் பராமரிப்பதற்குமே இந்த புதிய தெருக் கூத்துகள்; என்பதை இப்போது தமிழர்கள் நன்கு கண்டு கொள்ள வேண்டும். இருந்தாலும் பிரபாகரன் காட்டிய சண்டித்தன சுகமும் ஒவ்வொரு தமிழனது கதவையும் தட்டி பணம் புரட்டிய ருசியும் அவர்களை இன்னமும் விடுவதாக இல்லை.
இப்போது புதிய புலித் தலைவர் பத்மநாதன் கைது செய்யப்பட்டு இலங்கை அரசின் விசாரணைக்கு உட்பட்டுள்ளார். அவர் நிச்சயமாக புலிகளின் சொத்து விபரங்கள் ஆயுதக் கடத்தல் போதைப் பொருட்கள் கடத்தல் பற்றிய தொடர்புகள், அவற்றில் தொடர்பான வெளிநாட்டுத் தமிழர்கள் மற்றும் உள்நாட்டவர்கள் பற்றிய விபரங்களையெல்லாம் நிச்சயமாகக் கக்குவார். ஏற்கனவே பொட்டம்மான் தேவையான அளவுக்கு இலங்கை அரசின் புலனாய்வாளர்களிடம் கக்கிவிட்டார். எனவே பத்மநாதன் எதையும் மறைப்பது சாத்தியமில்லை.
இந்தியா, அமெரிக்கா உட்பட வெளிநாடுகளும் பத்மநாதனை விசாரிக்கவுள்ளன. இதனால் கொஞ்ச நாளைக்கு வெளிநாட்டுப் புலிகள் தமது பிரச்சார நாயனங்களை அடக்கித்தான் வாசிப்பார்கள்.
புலிகளின் இராணுவப் பலம் பொலு பொலுவென உதிர்ந்து போனதனால் புலிப் பிரமுகர்கள் வெளிநாடுகளிலாயினும் தமக்கென ஓர் அரசியல் மாளிகையைக் கட்டிவிட வேண்டும் என்ற ஆசையுடன் புது வேசம் போட்டு முனைந்தார்கள். பத்மநாதன் கைதால் அந்த நினைப்பிலும் இப்போது மண் விழுந்து விட்டது. ஆனாலும் வெளி நாட்டுத் தமிழர்களை ஏமாற்றுவதிலும் பணம் திரட்டிக் குவிப்பதிலும் புலிகள் ஊரில் இருந்தவரை நிலைநாட்டியிருந்த அந்தத் தனியுரிமை காட்டிய ஆசை புலிகளின் பிரமுகர்களையும் ஏஜன்டுகளையும் இன்னமும் விடவில்லை.
கடைசி ஈழத்தமிழன் உழைப்பையும் காசாகக் கறக்கும்வரை இந்தப் புலித் தொழில் முதலாளிகள் சும்மா,,,,, சுலபமாக ஓய்ந்து விட மாட்டார்கள்.
புலிகளுக்கு இருந்த கொலைவெறியும்
புலிகளை அண்டிப் பிழைத்தோருக்கு இருந்த இலாப வெறியும்
புலிகளுக்கு தூக்கு தூக்கி காவித் திரிந்தோருக்கு இருந்த பதவி வெறியும்
புலிகளை வைத்து தெண்டிப் பிழைத்தோருக்கு இருந்த பண வெறியுமே
புலிகளின் பலம்!
இவற்றை நாம் தமிழர்கள் கொண்டிருந்த அரசியற் பலம் என்று சொல்வது, கருதுவது எவ்வளவு தவறானது என்பதை இப்போது சிந்தித்துப் பாருங்கள்.
புலிகளின் பலத்தால் ஈழத் தமிழர்கள்
வீடுவாசல்களை இழந்து சுய தொழில்களை இழந்து சொந்த மண்களை இழந்து அகதிமுகாம்களில் வாழவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி சின்னாபின்னமான சமூகம் ஆகிப் போனார்கள்
தமது அடிப்படையான உரிமைகளுக்கான போராட்டங்கள் மீதே நம்பிக்கையற்றப் போனார்கள். மீண்டும் போராட்டம் என வந்துவிடுவார்களோ என்று அஞ்சுபவர்களாக ஆகிப் போனார்கள்
அரசியல் தீர்வைப் பற்றி சிந்திப்பதை காலம் தள்ளிப் போடும் அளவுக்கு சிதைந்து போனார்கள்
அனைத்து முஸ்லிம் சகோதரர்களிடமிருந்தும் அந்நியப்பட்டுப்போனார்கள்
ஆதரவாக இருந்த சிங்களவர்களையும் பெருமளவு இழந்து போனார்கள்
பிராந்திய ரீதியிலும் உலகரீதியிலும் நண்பர்களற்ற ஓர் அரசியல் அனாதைச் சமூகமாக ஆகிப் போனார்கள்
அகதிகளாகப் போவதற்கு இன்னமும் இடம் கிடைத்தாலும் ஆங்காங்கே அவ்வப்போது அநுதாபக் குரல்கள் வெளிப்பட்டாலும் இந்திய மக்கள் மத்தியில் அக்கறையற்ற ஒரு சமூகமாகிப் போனார்கள்
இவ்வாறாக தமிழர்களின் அரசியற் பலங்களாக இருந்த ஒவ்வொன்றையும் நாசமாக்கி கடைசியாக உலகில் நண்பர்களென தமிழர்களுக்கு யாருமே இல்லாத நிலையை உருவாக்கி தமிழர்களை அரசியல்ரீதியில் நாதியற்றவர்களாக ஆக்கியவர்கள்தானே புலிகள்!
புலிகளால் தமிழர்கள் இழந்த அரசியற் பலங்களை நாம் மீண்டும் பெற்றுத் தர முடியுமா! அப்படித்தான் முடிந்தாலும் அதற்கு எத்தனை பத்தாண்டுகள் எடுக்குமோ? அதற்கிடையில் இலங்கைவாழ் தமிழர்களின் அரசியலில் எவ்வளவோ மாற்றஙகள் நடந்து முடிந்துவிடுமல்லவா!
தந்தை செல்வநாயகம் தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்றார்.
புலிகளோ ஈழத் தமிழர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாத அளவுக்கு நாசம் பண்ணி விட்டு தாமும் நாசமாகிப் போனார்கள்.
நான் கூறியவற்றைப் பார்த்து ஈழத் தமிழர் சமூகத்தின் எதிர்காலப் பற்றி வெறும் விரக்தியையும் நம்பிக்கையீனத்தையும் மட்டுமே வெளிப்படுத்துவதாகக் கருதாதீர்கள். மாறாக எதிர்வரவிருக்கும் அரசியற் தலைமையானது இமாலய அளவுக்கு சவால்ளை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்துக்கு விடப்பட்டிருக்கிறது என்பதை அடையாளம் கண்டு புரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் கேள்வியிலுள்ள பிரதானமான விடயத்துக்கு நான் சற்று நீளமாகவே பதிலளித்திருக்கிறேன். உங்களின் கேள்வியில் நான் கண்டுள்ள இரண்டாவது தவறான அம்சத்தைப் சற்று சுருக்கமாகவே கூறுகிறேன். அது பற்றி இப்போது பார்க்கலாம்:-
புலிகளின் பலம் சிங்கள தலைவர்களை பணிய வைக்கக் கூடியதாக இருந்தது என்றும் புலிகள் அழிக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில் தமிழர்களுக்கான அரசியற் தீர்வை ஒத்துக்கொள்ள வைக்கும் விதமாக சிங்களத் தலைவர்களை இனிமேல் யாரால் பணிய வைக்க முடியும் என்ற உங்கள் கேள்வியின் சாராம்சமே மிகத் தவறானதாகும்.
தமிழர்களுக்கான அரசியற் தீர்வுக்கு சிங்களத் தலைவர்களை ஒத்துக் கொள்ள வைக்க வேண்டும். அதற்கு பெரும்பான்மையான சிங்கள மக்களின் மனப்பூர்வமான ஆதரவை நாம் திரட்ட வேண்டும் என்று சொல்வதெல்லாம் சரியானதும் தேவையானதுமான விடயங்களே. ஆனால். சிங்களத் தலைவர்களை ஏதாவதொரு பலம் கொண்டு பணிய வைக்க வேண்டும் என்று நினைப்பதே தவறாகும்.
அதுதான் புலிகள் தமிழர்களுக்கு வழங்கிய பிழையான புரிதலாகும்.
என்றைக்கு நாங்கள் ஒரு வரலாறு மிக்க சமூகத்தை அதன் தலைவர்களை இன்றைய ஜனநாயகப் பண்பாடுகள் மற்றும் மானுட நாகரீகம் வளர்ந்துள்ள காலத்தில் சேரசோழபாண்டியர்களின் காலத்தை கற்பனையில் வைத்துக் கொண்டு எமக்கு அடிபணிய வைக்க நினைக்கிறோமோ அப்போதே நாம்; அரசியல்ரீதியில் எம்மையே தோற்கடித்து விடுகிறோம்.
புலிகளின் படுதோல்விக்கும் திடீர் அழிவுக்கும் அதுதான் காரணம்.
புலிகளின் இராணுவ பலத்தை சிங்களத் தலைவர்கள் முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பது உண்மைதான்.
1988 நடுப்பகுதிவரை அதற்கு இந்தியாவும் முக்கியத்துவம் கொடுத்தது. பெருந்தொகையான சிங்களத் தலைவர்கள் மற்றும் சிங்கள புத்திஜீவிகள் அதைக் கவனத்திலெடுத்து ஒரு நியாயமான அரசியற் தீர்வை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
சந்திரிகா ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டு மட்டுமல்ல புலிகளோடு சண்டை பிடித்துக் கொண்டிருந்த அதேநேரத்தில் புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி ஓர் அரசியற் தீர்வைக் காணுவதற்கு தயார் என மீண்டும் மீண்டும் கூறி வந்தார். 2002ம் ஆண்டு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த ரணில் விக்கிரமசிங்கா புலிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் இழுபட்டாரே! ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷவும் ஓராண்டுகளுக்கு மேல் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீhவைக் காணத் தயாரான சர்வதேச நாடுகளின் துணையை நாடினார்தானே!.
இந்த சந்தர்ப்பங்களையெல்லாம் புலிகள் நல்லெண்ணத்தோடும் நட்புணர்வோடும் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும் நியாயமான அடிப்படையிலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு முடிந்த அளவுக்கு இரண்டு பக்கமும் ஏற்புடைய அளவுக்கு ஓர் இணக்கத்தை ஏற்படுத்தியிருந்தால் புலிகளின் இராணுவப்பலம் தமிழர்களின் அரசியற் பலமாக மாறியிருக்கும்.
ஆனால்! சிங்களத் தலைவர்கள் முன்வந்ததை இளக்காரமாக எடுத்துக் கொண்ட ஈசாப்பு நீதிக் கதையொன்றில் வரும் கிணற்றுத் தவளைபோல தனது பலத்தைப் பற்றி கண்மூடித்தனமாக அகங்காரம் கொண்டு உலகநாடுகளின் தலைவர்களை மடையர்கள் என நினைத்து சிங்களத் தலைவர்களை அடிபணிய வைத்து தமிழீழம் பெற நினைத்ததுதான் புலிகளின் அழிவுக்கே காரணமாகியது. உள்ளதையும் கெடுத்தான் நொள்ளைக் கண்ணன் என்பது போல நம்பிய தமிழர்கள் கொண்டிருந்த எஞ்சிய அரசியற் பலத்தையும் நாசமாக்கியதுதான் புலிகள் செய்த வேலை.
சிங்களத் தலைவர்களை அடிபணிய வைத்து தமிழர்களின் உரிமையைப் பெற வேண்டும் என்ற நினைப்பை தமிழர்கள் கொண்டிருக்கக் கூடாது, அவ்வாறான கருத்தைப் பரப்புபவர்கள் தமிழர்களுக்கு மீண்டும் அழிவையே தேடித் தருவார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அவ்வாறான கருத்துக்களை முளையிலேயே புறக்கணிக்க வேண்டும்.
மாறாக, ஈழத் தமிழர்கள் சிங்கள மக்களின் மனங்களை வெல்ல வேண்டும், சிங்களத் தலைவர்களின் மனச்சாட்சியை வெல்லவேண்டும். எந்த சமூகத்திலும் எப்படியும் ஒரு பகுதியினர் இனவாத தீவிரவாதிகளாக இருக்கவே செய்வார்கள். அவர்களை வைத்துக் கொண்டு பெருந்தொகையானவர்களைக் குறித்து நாம் எடுக்கும் முயற்சிகளில் நாம் தளராது செயற்பட வேண்டும்.
மகாத்மா காந்தியின் வன்முறையற்ற போராட்டம் கண்டு ஆங்கில ஏகாதிபத்தியம் கதிகலங்கியது. ஆனால் அண்ணல் காந்தி அவர்கள். இந்தியர்களின் போராட்டம் ஆங்கிலேயர் எவரையும் அச்சுறுத்துவதற்காக அல்ல மாறாக ஒவ்வொரு ஆங்கிலேயனதும் மனச்சாட்சியை வென்றெடுப்பதற்காகவே என்றார். யாரையும் அச்சுறுத்தி அடிபணிய வைத்து சுதந்திரம் பெற முடியாது, அப்படித்தான் பெற்றாலும் அந்த சுதந்திரம் நீடிக்காது நிலைக்காது என்பதை அவர் மீண்டும் மீண்டும் பல்வேறு வடிவங்களிலும் குறிப்பிட்டார். அதனை நாம் ஒரு கட்டாயமான பாடமாக எடுத்துக் கடைப்பிடிப்போம்;.
புலிகள் அழிக்கப்பட்டதால் தமிழர்களின் அரசியற் பலத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. அதனை யார் இனி எப்படி நிரப்பப் போகிறார்கள் என்பதுவும் உங்களது மனங்களை கடந்த சில மாதங்களாக நிறைத்து நிற்கும் கேள்வியே.
நான் முன்னரும் பல தடவை கூறிய ஒரு விடயத்தை இப்போதும் வலியுறுத்த விரும்புகிறேன். அதாவது, புலிகள் தமிழர்களின் அரசியற் பலமாக எந்தவேளையிலும் இருக்கவில்லை.
எனவே, புலிகளின் அழிவால்;தான் தமிழர்களின் அரசியற் பலத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்றில்லை.
அந்த வெற்றிடம் சிறி லங்கா அரசின் எந்தக் கொடூரத்தாலும் ஏற்பட்டதல்ல. சிங்கள இனவாதிகள் எவராலும் அதனை நேரடியாகச் சாதிக்க முடியவில்லை. முhறாக, புலிகளாலேயே தமிழர்கள் மத்தியில் தமிழர்களுக்கு இந்த அரசியல் வெற்றிட நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
தமிழர்களின் அரசியல் பலம் தொடர்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புகின்ற முயற்சிகளை ஆரம்பிப்பதற்குக் கூட புலிகளின் நிரந்தர அழிவு முன்தேவையான ஒன்றாக இருந்தது.
புலிகள் அழிக்கப்படாமல் தமிழர்களின் அரசியற் பலத்தை மீண்டும் நிலைநாட்ட யாராலும் முடியாது என்ற நிலைமையே இருந்தது. இப்போது புலிகள் மீளமுடியாது அழிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இனி மெது மெதுவாக தமிழர்களின்; அரசியற் பலம் திரண்டு அதிகரிக்கும் நிலை தொடங்கும் என்பதில் சந்தேகமில்லை.
நான் இப்படிக் கூறுவது சிலருக்கு ஆத்திரத்தையும் சிலருக்கு வியப்பையும் ஏற்படுத்தலாம். ஆனால் அவர்கள் உவர்ப்பு காண்ப்பு இன்றி உண்மையை உண்மையாக ஆராய்ந்து பார்த்தால் இதன் உண்மையைப் புரிந்து கொள்வார்கள்.
நான் ஈழத் தமிழர்களுக்கு மிகமிக அவசியம் எனக் கூறக்கூடியது, சமூக அரசியல் விடயங்களில் உண்மையைப் பேசப் பழகுங்கள், அவற்றில் உண்மைகளைக் கண்டு கொள்ளப் பழகுங்கள், அவற்றில் உண்மையானவற்றை ஆதரிக்கப் பழகுங்கள்.
அப்பொழுதுதான் உண்மையான உங்கள் சமூக அபிலாஷைகளை உண்மையாகவே நீங்கள் அடைய முடியும்.
|