|
பொன்சேகாவின் கைது இராணுவ ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கை எதிர்க்கட்சித் தலைவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் சம்பந்தமாகக் கலந்துரையாடப்பட்ட போதும் சரத் பொன்சேகாவின் கைது தொடர்பிலேயே விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ; சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளமை எவ்வகையிலும் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதொன்றல்ல. இராணுவ ஒழுக்கம் மற்றும் இராணுவ சட்டத்திற் கிணங்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை யாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த ஜனாதிபதி, தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன் சேகாவுக்குத் தேவையான சகல வசதிகளும் எவ்வித குறைபாடுகளுமின்றி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் கைது செய்யப்பட்டமை சம்பந்தமாக நீதிமன்றத்திற்குச் செல்வதற்கும் உரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
சரத் பொன்சேகா தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர் குற்றமிழைத்திருக்காவிட்டால் அவரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க; தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவிற்கு உணவு எடுத்துச் செல்லும் அவரது மனைவி அனோமா பொன்சேகாவுக்குப் பதிலாக வேறு ஒருவரை அனுமதிக்க முடியுமா என ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டார். அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி; அதனை இராணுவத் தளபதியே தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தமது கணவரைப் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அனோமா பொன்சேகா தொடர்ந்தும் ஊடகங்களினூடாக வேண்டுகோள் விடுத்ததை தாம் பார்த்ததாக ஞாபகப்படுத்திய ஜனாதிபதி; அனோமா பொன்சேகா விரும்பினால் அவரது கையினாலேயே உணவு வழங்குவது மிகவும் பொருத்தமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அன்று நாம் மக்களுக்காகச் செயற்படப்போய் சிறையிலடைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கர்ப்பிணியாகவிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ காலையிலும் மாலையிலும் தமக்கு உணவு எடுத்துக் கொண்டு தம்மைப் பார்க்க வந்ததை ஜனாதிபதி இங்கு நினைவுகூர்ந்துள்ளார்.
|