|
தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் வடக்கு மீள்நிர்மாணத்திற்கு ரூபா 40 ஆயிரம் கோடிஜனாதிபதி ராஜபக்ஷ அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் இரு வாரங்களே உள்ள நிலையில்,அதிகளவில் சுயாட்சிக் கோரிக்கையை முன்வைத்திருக்கும் தமிழர்களுக்குப் பல சலுகைகளை வழங்குவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்வந்திருக்கிறார். சிறுபான்மைத் தமிழ் சமூகமானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தீர்க்கமான பங்களிப்பைச் செலுத்தக்கூடிய நிலையில், அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளை முன்வைக்கப் போவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.
சட்ட வாக்க சபையில் தீர்மானங்களை எடுப்பதற்கு தமிழர்களுக்கு அதிகளவுக்கு பாக்கியம் உள்ளதாகவும் நீண்டகால கோரிக்கையான அதிகாரப்பகிர்விற்கு தீர்வு காண்பதற்குமான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு நிருபர்களுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை குறிப்பிட்டது.
யுத்தத்தின் முடிவானது நெருக்கடி முடிவடைந்துவிட்டதென அர்த்தப்படாது. தமிழர்களின் தேவைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணும் தேவை எனக்கு உள்ளது என்று அலரிமாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இச்சந்திப்பின்போது ஜனாதிபதி கூறியுள்ளார்.
புதிய சட்டவாக்க ஏற்பாடுகளில் சிறுபான்மைத் தமிழருக்கு அதிகளவு பிரதிநிதித்துவம் வழங்கவுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.இவை எல்லாவற்றுக்கும் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. அத்துடன், சர்வசன வாக்கெடுப்பு மூலம் மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. சாதாரணமான மக்கள் அமைதியாக வாழ விரும்புகின்றனர். ஆனால், அரசியல் தீர்வுக்கான கோரிக்கையும் தேவையும் அங்குள்ளது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அதேவேளை, 40 ஆயிரம் கோடி ரூபாவை வடக்கை புனரமைக்க செலவிடப்போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இந்த 40 ஆயிரம் கோடி ரூபாவில் (4 மில்லியன் டொலர்) அரசின் நிதியும் உதவி வழங்குவோரின் நிதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ரயில் பாதைகள், மின்சக்தி,நீர்ப்பாசன உட்கட்டமைப்பு ஆகியவற்றுக்காக 2010 இல் இந்தத் தொகை செலவிடப்படும் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியுள்ளார்.
கிழக்கு அபிவிருத்திக்கு 3 ஆண்டுகளில் செலவிடுவதற்காக 3 பில்லியன் டொலர்களுக்கான (30 ஆயிரம் கோடி ரூபா) தொகைக்கு நாம் ஏற்கனவே கைச்சாத்திட்டுள்ளோம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீள அணிதிரள்வதற்கான சந்தர்ப்பம் ஏதாவது உள்ளதா? என்று கேட்கப்பட்டபோது. இராணுவ ரீதியில் புலிகள் தோற்கடிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஆனால், தூரவிலக்கப்பட்டிருக்கிறார்களென்ற தமிழர்களின் கவலைகளை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். வன்செயல் மீள இடம்பெறுவதற்கான எந்தவொரு சந்தர்ப்பமும் இல்லாமல் செய்யப்படவேண்டும் எனவும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். "அநுதாபிகள் உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கம் எவ்வாறு கவனமெடுக்கின்றது என்பதிலேயே இவையாவும் தங்கியுள்ளது%27 என்று அவர் கூறியுள்ளார். தமிழ்ப் பகுதிகளுக்கு அதிகாரப் பகிர்வு தொடர்பான பிரச்சினையைப் பரிசீலிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்திருக்கின்ற போதும் அவரின் முன்மொழிவுகளில் தெளிவற்ற தன்மை காணப்படுவதாக ராய்ட்டர் செய்திச் சேவை குறிப்பிட்டிருக்கிறது.
தேர்தல் முடிவுறும் வரை உறுதியான திட்டம் எதனையும் அவர் வழங்குவாரென தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று உதவியாளர்கள் கூறியுள்ளனர்.பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் துரிதமாக வடமாகாண சபைக்கான தேர்தல் இடம்பெறும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
|