|
தங்குமிட விடுதிகளால் தவிக்கும் மக்கள்; பூனைக்கு மணி கட்டுவது யார்?
நின்ற வெள்ளத்தை வந்த வெள்ளம் கொண்டு போன கதையாக யாழ்ப்பாணத்தின் பல வீடுகளின் நிலை மாறியிருக்கிறது. கொஞ்சக்காலத்துக்கு முன்னர் போர் உக்கிரமடைந் திருந்த போது யாழ்ப்பாணத்தில் யாருமே தேடுவாரற்று பல வீடுகள் வெறிச்சோடிக்கிடந்தன. வன்னியில் மூண்ட யுத்தம் யாழ்ப் பாணத்திலும் தாக்கங்களை உண்டுபண்ணும் என்பதாலும் இங்கிருப்பதை காட்டிலும் கொழும்பிலோ அல்லது வேறுநாடுகளிலோ தங்கிருப்பதே பாதுகாப்பானது என்ற உணர்வு எல்லோரிடமும் தொற்றிக் கொண்டதால் பலரும் யாழ்ப்பாணத்தை "அம்போ' என்று விட்டுவிட்டு தமது உயிர் வாழ்தலைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப் பறந்தோடினர். உரிமையாளர்கள் வீட்டில் இல்லாவிட்டால் உரிய பராமரிப்பு இன்றி கால்நடைகளின் கூடாரமாகத் தமது வீடுகள் மாறிவிடக் கூடும் என்ற எண்ணத்தில் பலரிடமும் காலில் விழாத குறையாக மன்றாடி தமது வீடுகளில் தங்கியிருக்குமாறு உரிமையாளர்கள் வேண்டிக் கொண்டனர். இதற்கு ஒருபடி மேலே சென்ற சிலர் தமது வீடுகளில் தங்கியிருந்து அங்குள்ள மரம் செடிகளைப் பராமரித்தால் அதற்கு ஒரு குறித்த தொகைப் பணத்தையும் மாதாமாதம் வழங்குவதற்கு முன் வந்தனர்.
எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிவிட்ட சில அரசியல், களநிலை மாற்றங்களால் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை மண்ணில் மையம் கொண்டிருந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதன் பின்னர் தான் யாழ்ப்பாண வீடுகளுக்கு திரும்பவும் மவுசு ஏற்படத்தொடங் கியது. யுத்த பயம் இல்லாமல் போன காரணத்தால் மீளவும் தமது சொந்தவீடுகளுக்குப் பலரும் திரும்பத் தொடங்கினர். இது தவிர வன்னியில் இருந்து வெளியேறி நலன்புரி நிலையங் களில் முடங்கிக் கிடந்த மக்கள் கட்டம்கட்டமாக விடுவிக்கப் படத் தொடங்கினர். இவர்களில் பெரும்பாலானோர் வன்னியைச் சொந்த இடமாகக் கொண்டிருந்தபோதும் அங்கு உடனடியாக மீளக்குடியமர்வதற்கு எந்தவிதச் சாத்தியங்க ளையும் பாதுகாப்புத் தரப்பு வழங்குவதற்கு முன்வரவில்லை. எனவே வேறுவழியின்றி யாழ்ப்பாணத்தில் உள்ள தம்முடைய உறவினர்கள், மற்றும் நண்பர்களின் வீடுகளில் நலன்புரி நிலையங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் ஒண்டிக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் எத்தனை நாளைக்குத் தான் "பிறத்தியாரின்' வீட்டிலேயே காலத்தைக் கழிக்கமுடியும்? மருந்தும் விருந்தும் மூன்று நாளைக்குத்தான்.
உறவினர், நண்பர்கள் வீடுகளிலே தங்கியிருந்தவர் களுக்கு மெல்லமெல்ல சில பிரச்சினைகள் தலைதூக்கத் தொடங்கின. இவற்றினை நிவர்த்திப்பதற்கு அவர்களுக்கு இருந்த ஒரே வழி வாடகைகொடுத்தென்றாலும் தனியே வேறொரு வீட்டில் வசிப்பது தான். எனவே வீடு தேடும் படலத்தில் இவர்கள் இறங்கினர். தவித்த முயல் அடிப்பதில் வல்லவர்களான நம்மவர்கள் இத்தகைய அரிய சந்தர்ப்பத்தை நழுவவிடத்தயாராகஇல்லை. அது நாள் வரையும் சீண்டுவார் அற்றுக் கிடந்த பல வீடுகளுக்கு ஆயிரக்கணக்கில் வாடகை நிர்ணயிக்கப்பட்டது. எப்படியாவது தனி வீட்டுக்கு வந்து விடவேண்டும் என்ற தவிப்பில் இருந்தவர்களுக்கு வாடகை ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. வன்னியிலே எல்லா வற்றையும் இழந்துவிட்டுவந்த அவர்களுக்கு மிக அதிகமான பொருளாதார நெருக்குவாரங்கள் இருந்தபோதும், நண்பர்கள், உறவினர் வீடுகளில் உண்டாகக்கூடிய பிரச்சினையைத் தவிர்ப்பதற்காக அவர்கள் வாடகையைப் பற்றி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. இதனால் யாழ்ப்பாணத்தில் எல்லா வீடுகளிலும் மீண்டும் மனித வாடை வீசத்தொடங்கிற்று.
இந்த நிலையில் தான் ஏ9 வீதியினூடான போக்குவரத்தில் இருந்த எல்லாத் தளைகளும் திடீரென ஒரு நாள் அறுந்துபோ னது. 24 மணிநேரமும் யாரும் எப்போதும் எங்கும் ஏ9 வீதியூடா கப் பயணிக்கும் நிலை 30 வருடங்களுக்குப் பின்னர் சித்தித் தது. குடாநாட்டில் இருந்து தென்பகுதிக்குச் செல்பவர்களை விடவும் தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கிப் படையெடுப்போரின் எண்ணிக்கை மிக அதிகள விலேயே இருந்தது. ஆனாலும் அவ்வாறு வருகின்ற தென்னி லங்கைப் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப இங்குள்ள தங்குமிட வசதிகள் மிகக்குறைந்தளவிலே இருந்தன.
இதற்குமுன்னர் சுற்றுலாப்பயணிகளின் தேவைகளை நிறைவு செய்யவென யாழ்ப்பாணத்தில் இருந்த சுபாஷ் ஹோட்டல், அசோகா ஹோட்டல், ஞானம்ஸ் ஹோட்டல் என்பன படைத்தரப்பின் பாவனையில் இருந்தபடியால் பயணிகளின் தங்குமிடப்பிரச்சினை அதிகளவில் நிகழத் தொடங்கியது. இதனால் துரையப்பா விளையாட்டரங்கு, வீரசிங்கம் பொதுமண்டபம் போன்ற பொது இடங்களே இவர் களின் தற்காலிக தங்குமிடமாகிப்போனது. எதையுமே வியா பாரமாக்குவதில் யாழ்ப்பாணத்தவர்களுக்கு நிகர் யாழ்ப் பாணத்தவர்களேதான். எனவே இத்தகைய தங்குமிடப் போதாமையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் சிறுசிறு தங்குமிட விடுதிகளை அமைக் கத் தொடங்கினர். எல்லாத் தொழில்களையும் விட அதிகளவு இலாபத்தினை ஈட்டித்தருகின்ற துறையாக "லொட்ஜ்'கள் மாறிப்போனமையால் இந்தத் துறையில் பலரும் கால்பதிக்கத் தொடங்கினர். ஆனாலும் சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்? ஏற்கனவே மீளக்குடியேறியோரால் எல்லா வீடுகளும் நிரம்பிவழிந்துகொண்டிருக்கும் சூழலில் புதிதாக முளைக்கும் "லொட்ஜ்'களுக்கு எங்கே வீடுகளைப் பெறுவது என்ற பிரச்சினை தலைதூக்கத்தொடங்கியது. புதிதாகக் கட்டடங்களை அமைப்பதோ அல்லது ஏற்கனவே இருக்கும் சிறு கட்டடங்களைப் பெரிதாக்குவதோ உடனடிச்சாத்திய மான காரியங்கள் அல்ல. அவற்றுக்கு நீண்ட காலம் தேவைப்படும். ஆனாலும் "லொட்ஜ்'காரர்களுக்கு அவசர அவியல் ஒன்று தேவைப்பட்டது. அவர்கள் எவருமே ஆக்கப் பொறுத்தளவிற்கு ஆறப்பொறுக்கவில்லை. எனவே புதிய மாற்றுவழிகுறித்த தேடலுக்கே அவர்கள் செல்லவேண்டி யிருந்தது.
இந்நிலையில் தான் அவர்களுக்கு பிரதான வீதிகளில் ஓரமாக அமைந்திருந்த வீடுகள் பலவும் வாடகைக்கு மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ள விடயம் மூளையில் உறைத்தது. கையிலே வெண்ணையை வைத்துக் கொண்டு ஊரெங்கும் அலைவான் ஏன்? என்ற நினைப்பில் வீட்டு உரிமையாளர்களிடம் குறித்த வீடுகளை முன்னரைக்காட்டிலும் பல மடங்கு அதிகதொகை வாடகைக்குத் தருவதாகவும், இதற்கு வீட்டிலே குடியிருப் போரை விரைவில் அகற்றித்தரும்படியும் அவர்கள் தூதுமேல் தூதாக விட்டுக்கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் இது குறித்துப் பெரிதாக அலட்டிக்கொள்ளாத வீட்டு உரிமையாளர்கள் நாளடை வில் மிகப்பெருந்தொகையை ஏன் வீணாக இழக்கவேண்டும்? என்ற எண்ணம் வரப்பெற்றவர்களாக சம்மதித்தார்கள்.
தென்னையிலே தேள் கொட்ட பனை மரத்துக்கு நெறிகட்டி யது போல அதிகரித்த தென்னிலங்கைப் பயணிகளின் வருகை வாடகைக்குக் குடியிருந்தோரின் வாழ்விடத்தை அசைக்கத் தொடங்கியது. வீட்டு உரிமையாளர்கள் சாம, தான, பேத, தண்ட வழிகளை உப யோகித்து வாடகைக்கு இருந்தவர்களை மிகக்கு றைந்த கால அவகாசத்தில் வெளி யேற்றினர். இத னால் புற்றீசல் களாய் வீதிகள், ஒழுங்கைகள் எங்கும் புதிது புதிதாகத் தங்குமிட விடுதிகள் பெருகத் தொடங்கின. வழமையாக ஒரு தங்குமிட விடுதி அமைக்கப்படவேண்டுமாயின் அதற்கென்று பிரத்தியேகமாகச் சில நடைமுறைகள் பின்பற்றப்பட்டு உரிய அதிகாரிகளின் அனுமதியின் பின்னரே அவை செயற்படத்தொடங்கவேண்டும். ஆனால் அவையெல்லாமே தூக்கி எறியப்பட்டு இத்தகைய விடுதிகளின் பெருக்கம் தன்பாட்டில் நிகழ்ந்தது. இதனால் குறித்த வீடுகளிலேயே வாடகைக்குக் குடியிருந்தோர் ஒரே நாளிலேயே நடுத்தெருவில் நிற்க வேண்டிய அவலம்கூட எழுந்தது. எங்கிருந்தோ வந்தவர்கள் தங்குவதற்காக இங்கேயே இருந்தவர்கள் இருப்பிழந்து போனார்கள்.
சரி வந்தவர்கள் தான் சௌகரியமாக இங்கே "லொட்ஜ்'களில் தங்குகிறார்களா என்று கேட்டால் அதற்குகூட இல்லையென்ற எதிர்மறை யான பதிலையே பெறவேண் டியிருக்கிறது. கையில் கிடைத்த வீட்டை ஒப்புக்காக "பெயின்ற்' அடித்து விட்டு, ஒரு சில ஒப்பனை வேலைகளைச் செய்துவிட்டு பெரிதாகத் தங்குமிட விடுதி என்ற பெயர்ப்பலகையைத் தொங்கவிடு கிறார்கள். ""சிங்காரக்கொண்டையாம் ஆனால் உள்ளே ஈரும் பேனுமாம்'' என்ற பழமொழியை நிரூபிக்கும் வகையில், பஸ்கணக்கில் வந்து இறங்குகிற பயணிகளுக்கு இவை போதா மையையே உண்டு பண்ணுகின்றன. இதனால் தங்குமிட விடுதி களில் பணத்தைக் கட்டி விட்டு பஸ்களிலேயே உறங்குகின்ற பயணி களைச் சர்வசாதாரணமாகக் காணமுடியும். "உண்மையில் இவை தங்குமிட விடுதிகள் இல்லை. ஒரு வகையில் மிகப் பெரிய கட்டணக்கழிப்பிடங்கள் என்றே இவைகளைச் சொல்லலாம்'' என்று இத்தகைய தங்குமிட விடுதியொன்றில் சில நாள்கள் இருந்த தென்னிலங்கைப் பயணி ஒருவர் கூறினார்.
இத்தகைய எல்லா அவலங்களுக்கும் அதிகாரிகள் நினைத் தால் விடிவுபிறக்கும். ஆனாலும் பூனைக்கு யார் மணிகட்டுவது?
-Uthayan_
|