|
கனடா – ரொறன்ரோ நகரில் மிகப்பெரிய ஸ்ரீலங்கா பல் பொருள் விற்பனை நிலையம்!
- கனடா கந்தசாமி
உண்மை என்னவென்றால், உலகிலேயே தனக்கு எதிராகப் போரிடும் ஒரு பயங்கரவாத இயக்கத்துக்கு, அரசாங்கம் உணவையும், மருந்தையும், இதர அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கி வந்தது என்றால் அது இலங்கை அரசாங்கம் தான்!
புலிகள் வன்னியில் தமது பிடியில் பணயக் கைதிகளாக வைத்திருக்கும் மக்களுக்காக, அரசாங்கம் உணவுப் பொருட்களையும், மருந்து வகைகளையும் அனுப்பி வைக்கவில்லை என ஒரு பக்கத்தில் ஒப்பாரி வைத்துக்கொண்டு, மறுபக்கத்தில் தமக்கு தொடர்ந்து பண உதவி வழங்கிவரும் புலம் பெயர் தமிழர்கள,; இலங்கை உற்பத்திப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தக்கூடாது எனப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். வன்னியில் புலிகள் அழிவின் விளிம்பில் நிற்பதால் இந்த ஞானம் பிறந்துள்ளதோ என்னவோ? கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஒரு பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த வேளையில், இந்த பொருள் பகிஸ்கரிப்பை ஏன் புலிகள் மேற்கொள்ளவில்லை என்ற கேள்விக்கு ஒருபோதும் விடை தரமாட்டார்கள். 2002 ஆண்டு யுத்தநிறுத்த ஒப்பந்த்தின் பின்னர், விற்பனைவரி செலுத்தி தெற்கில் வாங்கப்பட்ட இலங்கை உற்பத்திப் பொருட்களுக்கு ஓமந்தையில் வைத்து கப்பம் வாங்கினார்களேயன்றி, இலங்கை உற்பத்திப் பொருட்களை பகிஸ்கரிக்கக் கோரவில்லை. ஆனால் உண்மை என்னவென்றால், உலகிலேயே தனக்கு எதிராகப் போரிடும் ஒரு பயங்கரவாத இயக்கத்துக்கு, ஒரு ‘முட்டாள்தனமான’ அரசாங்கம் உணவையும், மருந்தையும், இதர அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கி வந்தது என்றால் அது இலங்கை அரசாங்கம் தான்! ‘சோழியன் குடுமி சும்மா ஆடாது’ என்பது போல, புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகள் இலங்கைப் பொருட்களைப் பகிஸ்கரிக்கக் கோருவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. கடந்த காலத்தில் புலிகள் கேட்ட நேரமெல்லாம் பெருமளவு பணத்தை டொலர்களாகவும் யூரோக்களாகவும் அள்ளி வழங்கிய புலம் பெயர் தமிழ் வர்த்தகர்கள், புலிகள் வன்னியில் முடக்கப்பட்டு முற்றாக அழிக்கப்படும் நிலை ஏற்பட்டதால், “இனி உங்களுக்கு பணம் எதற்கு, போராட்டம் தான் முடிவுக்கு வந்துவிட்டதே?” என்ற கேள்வியை, புலிகளின் பணக் கறப்பாளர்களிடம் எழுப்பத் தொடங்கியுள்ளனர். புலம் பெயர் தமிழ் மக்களும் இதே கேள்வியை, புலிகளை நோக்கி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த புலிகள், புலம் பெயர் தமிழ் வர்த்தகர்களையும் மக்களையும் மிரட்டும் நோக்கிலேயே இந்த பொருள் பகிஸ்கரிப்பு நாடகத்தை ஆரம்பித்ததாக தெரிய வருகிறது. ஆனால் புலிகளின் இந்த மிரட்டலுக்கு பெரும்பாலான தமிழ் வர்த்தகர்கள் செவிசாய்க்கவில்லை என்பது, மேலும் புலிகளை ஆத்திரப்படுத்தினாலும், முன்னைய காலங்களைப் போல மிரட்டிப் பணிய வைக்க முடியாத நிலையில் புலிப்பினாமிகள் தடுமாறி நிற்கின்றனர். புலிகளின் இந்த மிரட்டல் குறித்து பொதுமக்களும் மிகவும் ஆத்திரமடைந்துள்ளனர். தமது மிரட்டல் பயனளிக்காத நிலையில,; புலிகள் இப்பொழுது புலம்பெயர் வர்த்தகர்களுடன் சில சமரசங்களுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது. அதன்படி புலம்பெயர் வர்த்தகர்கள் இலங்கைப் பொருட்களை விற்பதை புலிகள் கண்டும் காணாமல் இருப்பது எனவும், வர்த்தகர்கள் முன்னைய காலங்களைப் போல பெருமளவு நிதி தராவிட்டாலும், ‘ஏதாவது பார்த்துத் தரும்படி’ புலிகள் வேண்டியதாகவும் தெரியவருகிறது. இதில் முக்கியமான விடயமென்னவெனில், எல்லா புலம்பெயர் நாடுகளிலும், இலங்கையிலிருந்து அனைத்துப் பொருட்களையும் இறக்குமதி செய்து அங்குள்ள வர்த்தகர்களுக்கு விநியோகிப்பவர்கள் புலிகளின் பினாமிகளே! இந்த நிலைமை இவ்வாறு இருக்க, பெருந்தொகை தமிழர்கள் வாழும் கனடாவில் புலிகள் இலங்கைப் பொருட்களை விற்பதற்கு தடைவிதித்ததைத் தொடர்ந்து, அங்குள்ள சிங்கள வர்த்தகர்களும், சில தமிழ் வர்த்தகர்களும் இணைந்து, ரொறன்ரோ நகரில் மிகப்பெரிய இலங்கைப் பல்பொருள் விற்பனை அங்காடி (Department Stores) ஒன்றை திறப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது. அந்த விற்பனை நிலையத்தில் இலங்கையின் மளிகைப்பொருட்கள், கடலுணவு – மரக்கறி வகைகள், பிஸ்கட் - சொக்கிளேற் வகைகள், குளிர்பானங்கள், பழவகைகள், செருப்பு வகைகள், துணிவகைகள் என்பன விற்பனை செய்யப்படும் என்று தெரிய வருகிறது. இலங்கையர்கள் சிலர் இணைந்து மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு கனடிய வர்த்தக சபையினதும், கனடிய அரசாங்கத்தினதும் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன் இதுபோன்ற சில முயற்சிகள் ஐரோப்பிய நாடுகளிலும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகிறது.
|