|
தமிழர்களை முட்டாள்களாக்கும் திருமாவளன்
- ஈழப்பிரியன்
புலிகள் மீதான அவரது பார்வையைத் தவிர்த்து பார்த்தால் திருமாவளவன் மீது மதிப்பு வைத்திருப்பவர்கள் அதிகம். அண்மைக்காலத்தில் மாத்திரம் மூன்று தடவை இலங்கை சென்று திரும்பியிருக்கிறார் அவர்.
அண்மையில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமைச்சர் பெ.சந்திரசேகரனின் மரணச்சடங்கில் கலந்துகொள்ள இலங்கை வந்திருந்த அவர் அடுத்த சில தினங்களிலேயே மீண்டும் வந்தார்.
பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் மரணச்சடங்கில் கலந்துகொள்ள வந்திருந்த அவர், வல்வெட்டித்துறை வரை சென்று இறுதிச்சடங்குகளில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலிருந்து தமிழகம் திரும்பியதும் ஜுனியர் விகடனுக்கு பேட்டியளித்த அவர், தமிழ் மக்களை எவ்வளவு முட்டாள்கள் என்று நினைத்தாரோ தெரியவில்லை.வேலுப்பிள்ளை அவர்களின் சடலம் வவுனியாவில் வைக்கப்பட்டிருந்தபோது அங்கு போய்ச் சேர்ந்திருக்கிறார் திருமா. அப்போது பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளும் அங்கே இருந்திருக்கிறார். இவர் அவரைச் சந்தித்தபோது அவருக்கு தமது கணவர் இறந்த செய்தி தெரியாதாம். அவர் சாமி கும்பிடப் போயிருப்பதாகவே அவரிடம் கூறப்பட்டிருந்ததாம்.
விகடனில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்வியும், திருமாவின் பதிலையும் முதலில் பார்ப்போம்.
இலங்கை போய் இறங்கியவுடன் முதலில் எங்கு போனீர்கள்?
எம்.பி-யான செல்வம் அடைக்கலநாதன்தான் என்னை அழைக்க வந்திருந்தார். கொழும்பில் இருந்து வவுனியா 280 கிலோமீட்டர் தூரம். ஒன்பதாம் தேதி விடியற்காலை மூன்று மணிக்கு செல்வம் அடைக்கலநாதன், அரியனேந்திரன், தாமஸ் வில்லியம் ஆகிய எம்.பி-க்களோடு நானும் தமிழக வழக்கறிஞர்களான சந்திரசேகர், பிரபு ஆகியோரும் புறப்பட்டோம். வவுனியாவில் உள்ள ஸ்வர்கா என்ற ஹோட்டலில் வேலுப்பிள்ளை அவர்களின் உடலை ராணுவப் பாதுகாப்போடு வைத்திருந்தார்கள். அங்கே பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாவும் இருந்தார். முதலில் அவரைத்தான் பார்த்தோம். அங்கு வரும் வரை பார்வதி அம்மாவுக்கு தன் கணவர் இறந்தது தெரியவில்லை. முதுமையும் வேதனையும் அவரை ரொம்பவே சுகவீனமாக்கி இருந்தது.
அந்தத் தாயைப் பார்த்ததுமே என் கண்கள் பொங்கி நிறைந்துவிட்டன. அவர்களை நெருங்கி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். 'ஐயா" என வேலுப்பிள்ளை குறித்து நான் வாய் திறந்ததுமே, 'அவர் சாமி கும்பிடப் போயிருக்கார், அல்லவா, சீக்கிரமே வந்திடுவார்" எனச் சொன்னார். அவரிடம் அந்த நிமிடம் வரை அப்படித்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள் என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது.
'அம்மா" நீங்கள் என்னோடு இந்தியாவுக்கு வந்து விடுகிறீர்களா? எனக் கேட்டேன். 'ஐயா வந்ததும் அவரை கேட்டுவிட்டுச் சொல்கிறேன்" என்றார். கணவர் மீது அவர் வைத்திருந்த மரியாதையைப் பார்த்து என் கண்கள் குளமாகிவிட்டது!
திருமாவின் இந்தப் பதிலில் இருந்து அவர் வவுனியாவில் பார்வதி அம்மாவைச் சந்தித்தபோது அவரது கணவர் இறந்தசெய்தி அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.அதே திருமா தனது அடுத்த கேள்விக்கு எப்படி பதிலளிக்கிறார் என்று பார்ர்ப்போம்.
'வேலுப்பிள்ளை சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக ஒரு கருத்து இருக்கிறதே..?"
'தமிழ் மக்கள் அடைக்கப்பட்டிருக்கும் வழக்கமான அகதிகள் முகாம்களில் மேதகு பிரபாகரனின் பெற்றோர் தங்க வைக்கப்படவில்லை. ராணுவ முகாமான பனகொடா முகாமில்தான் அய்யா வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். சிலநாட்களாகவே அய்யா வேலுப்பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லையாம். உயர் ரத்த அழுத்தத்தால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை வெளியே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், உள்ளுக்குள்ளேயே சிகிச்சை அளித்திருக்கிறார்கள். ஒரு மாதத்துக்கு முன்பு வரை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாளும் அருகருகேதான் வைக்கப்பட்டு இருந்தார்களாம். வேலுப்பிள்ளைக்கு சிகிச்சை அளிப்பதாகச் சொல்லி அவரை மட்டும் பிரித்து வேறெங்கேயோ தங்க வைத்திருக்கிறது ராணுவம்.
கடந்த ஆறாம் தேதி இரவே வேலுப்பிள்ளை இறந்து விட்டாராம். அந்தத் தகவலை ராணுவத் தரப்பு அடுத்த நாள் காலையில்தான் வெளியிட்டிருக்கிறது. பிரபாகரனின் தங்கையான விநோதினியின் வேண்டுகோளை ஏற்று, வேலுப்பிள்ளையின் உடலை சிவாஜிலிங்கம் எம்.பி-யிடம் ஒப்படைக்க ராணுவம் முடிவெடுத்தது.
வேலுப்பிள்ளை இறந்த தகவல் பார்வதி அம்மாளிடம் சொல்லப்பட அவர் அதை நம்பாமல் அழத் தொடங்கி விட்டார். எங்க ஐயா செத்திருக்க மாட்டார் எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். உடல் நிலை சரியில்லாததால், அவர் இறந்து விட்டதாக ராணுவத்தினர் பார்வதி அம்மாவிடம் சொல்லி இருக்கின்றனர். அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ராணுவத்தினர் ஏதோ செய்து விட்டதாகவே அவர் அஞ்சுவதாகத் தெரிகிறது.
இது திருமாவின் இரண்டாவது பதில்.
அதாவது பார்வதி அம்மாவுக்கு அவர் கணவர் இறந்த செய்தியை இராணுவத்தினர் கூறியிருக்கின்றனர். இவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ராணுவத்தினர் ஏதோ செய்துவிட்டதாகவே அவர் அஞ்சவதாகத் தெரிகிறது.
இந்தப் பதிலில் அவர் கூறவருவது என்ன?
பார்வதி அம்மாவுக்கு உடல் வவுனியா கொண்டுபோன பின்னர்தான் ராணுவத்தினர் இவர் இறந்த செய்தியை கூறினார்களா? சாமி கும்பிடப்போனவர் வந்த பின்னர் அவரிடம் கேட்டுத்தான் தான் இந்தியாவக்கு வரமுடியும் என்று கூறகின்ற அளவிற்கு நினைவில் இருக்கும் அவர், வவனியா வரை தனது கணவரின் சடலத்துடன் சென்றபோதும் அவருக்கு அவர் கணவன் இறந்தசெய்தி தெரியாது என்று கதையளக்கும் திருமா, இந்தப் பேட்டியைப் படிக்கின்ற ஈழத் தமிழழர்கள் இழிச்சவாயர்கள் என்று நினைக்கிறார் போலும்.
அத்தோடு விடவில்லை திருமா, பார்வதி அம்மாள் கனடா போனபின்னர் தனது மகன் பிரபாகரன் அங்கு வந்து தன்னைச் சந்திப்பார் என்றாராம் என்று வேறு கதையளக்கிறார்.
தனது கணவர் இறந்து விட்டபின்னர் அவர் சாமி கும்பிடப்போயிருக்கிறார் என்று அவர் கூறுவது அவரது நம்பிக்கை. அவர் கணவர்மீது கொண்ட நம்பிக்கையினால் வந்தது. அதுபோலத்தான் கனடா போனபின்னர் மகன் தன்னிடம் கனடாவுக்கு வருவார் என்பதும். அல்லது அவர் தனது முதல் மகன் கனடா வருவதைக் கூற, திருமா பிரபாகரன் என்று விளக்கம் தருகிறார் போலும்.
|