|
கிளிநொச்சி முல்லைத்தீவு தனியார் போக்குவரத்து சேவையினை இயல்பு நிலைக்கு கொண்டுவர அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவடங்களின் தனியார் போக்குவரத்து சேவைகளை இயல்பு நிலைமைக்கு கொண்டுவரும் பொருட்டு விரிவான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ். பணிமனையில் இன்று காலை இடம்பெற்ற மேற்படி கூட்டத்தில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகத்தினர் மற்றும் நூற்றிற்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதன்போது தனியார் போக்குவரத்து சேவைகளை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் பொருட்டு அதுதொடர்பான கோரிக்கைகள் சங்க நிர்வாகத்தினரால் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக கடந்த இரு தசாப்த காலத்திற்கு மேலாக எதுவித பதிவுகளும் இல்லாத நிலையில் மாவட்ட தனியார் பஸ் சேவையின் மார்க்க அனுமதிப்பத்திரத்தை புதிதாக பதிவு செய்தல் மற்றும் சாரதிகள் எவருக்குமே சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாத நிலையில் அதனைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தல் என்பனவே பிரதான காரணிகளாக காணப்பட்டன.
இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தேசிய போக்குவரத்து ஆணைக்குவின் தலைவர் விஜேவர்த்தன வடபிராந்திய போக்குவரத்து உதவி ஆணையாளர் பத்மநாதன் ஆகியோருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமுகமாக கலந்துரையாடினார். மேலும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் ஆகியோருடனும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் சட்டவரையரையின் பிரகாரம் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி வீதிப்போக்குவரத்து அனுமதி மார்க்கங்களை வழங்கி சங்கங்களையும் பதிவு செய்யுமாறு பணிப்புரை வழங்கினார்.
வன்னியில் இறுதியாக இடம்பெற்ற ஆயுதமோதல்களின்போது பெருமளவிலான தனியார் போக்குவரத்து பஸ்வண்டிகள் உரிமையாளர்களினால் கைவிடப்பட்ட நிலையில் அவற்றை மீளவும் பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் தனியார் பஸ் உரிமையாளர்களினால் கோரிக்கை விடப்பட்டது. இது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உரிய ஆவண செய்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதியளித்தார்.
இதேவேளை கிளிநொச்சி முல்லைத்தீவு தனியார் பஸ்கள் தமது மாவட்டங்களை நோக்கிய சேவையில் ஈடுபடுவதற்கு யாழ்ப்பாண மன்னார் வவுனியா மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கங்கள் அனுமதி வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து அங்கு சமூகமளித்திருந்த யாழ். மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தலைவர் பீ.கெங்காதரன் தலைமையிலான யாழ். பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டினைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்து சேவையினை கிளிநொச்சியிலிருந்தும் முல்லைத்தீவிலிருந்தும் சுழற்சி முறையில் ஆரம்பித்து நடாத்தலாம் என அறிவித்தபோது அங்கு கூடியிருந்தோர் அதனை கரகோசம் செய்து வரவேற்றனர். இதன்பிரகாரம் கிளிநொச்சியிலிருந்து பத்து பஸ்களும் முல்லைத்தீவிலிருந்து ஆறு பஸ்களும் உடனடியாக சேவையினை ஆரம்பிக்கலாம் என முடிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு தான் விஜயம் செய்யவுள்ள நிலையில் அங்குள்ள தனியார் போக்குவரத்து சங்க நிர்வாகிகளுடனும் கலந்துரையாடி உரிய அனுமதியைப் பெற்றுத்தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
இக்கூட்டத்தின் நிறைவில் உரையாற்றிய வன்னி தனியார் போக்குவரத்சேவைகளின் இணைப்பாளர் பவான் தமது கோரிக்கைகளுக்கு இவ்வளவு விரைவில் அதுவும் உடனடியாக தீர்வினைப் பெற்றுத்தந்திருக்கும் ஒருவரை தாம் நேரடியாக சந்திப்பது இதுவே முதற்தடவை எனத் தெரிவித்ததுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கரங்களைப் பலப்படுத்துவது எம்மை நாமே பலப்படுத்துவதாகும் எனவும் தெரிவித்தார். அத்துடன் தற்போது ஆபிரிக்க நாடுகளின் நிலைமையினை ஒத்திருக்கும் வன்னியை தூக்கிநிறுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் மட்டுமே முடியும் எனவும் தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இன்றைய கூட்டத்தில் வடபிராந்திய பொலிஸ் போக்குவரத்து பரிசோதகர் கே.குணவர்த்தன கிளிநொச்சி தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தலைவர் தங்கராசு ஜெகதீஸ்வரன் முல்லைத்தீவு மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் அமிர்தலிங்கம் சிவலோகேஸ்வரன் ஈபிடிபியின் யாழ். கிளிநொச்சி அமைப்பாளர்களான உதயன் மற்றும் தவநாதன் ஆகியோரும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.
|