|
மாநில சுயாட்சிக்கு குரல் கொடுப்போம்: முதல்வர் கருணாநிதி
சென்னையில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில், அண்ணாவின் உருவம் பொறித்த ரூ. 5 நாணயத்தை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட, அதைப் பெற்ற
சென்னை, செப். 15"மாநில சுயாட்சிக் கொள்கை வலுப்பெற குரல் கொடுப்போம்' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அமைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வில், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும், அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா செய்தியாக அவர் கூறுகையில், ""பேரறிஞர் அண்ணாவின் லட்சியங்களையும், கொள்கைகளையும் உணர்ந்து, கடைப்பிடித்து தமிழக மக்கள் எல்லா உரிமைகளோடும் வாழ வேண்டும். நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் அவர் தொடர்ந்து எடுத்துரைத்த மாநில சுயாட்சிக் கொள்கை வலுப்பெறுவதற்கு குரல் கொடுப்போம் என்ற உறுதியை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கென அனைத்துக் கட்சிகளும் இணைந்து வேறுபாடுகளையும், மாறுபாடுகளையும் களைந்து நமது நாட்டில் சமத்துவம், சமதர்மம், சகோதரத்துவம் போற்றிட சூளுரை மேற்கொள்வோம்'' என்றார் முதல்வர் கருணாநிதி.
பிரணாப் முகர்ஜிக்கு கோரிக்கை: மாலையில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசியபோதும், இதே கருத்தை முதல்வர் வலியுறுத்தினார்.
அவர் பேசியதாவது: 1970-ம் ஆண்டில், சென்னை அண்ணா நகரில் திமுக நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டில் அப்போது "பங்களா கட்சி' என்ற மாநிலக் கட்சியின் தலைவரான பிரணாப் முகர்ஜியும் கலந்து கொண்டார்.
""மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிந்துள்ளன. முக்கியமான அதிகாரங்கள் மத்திய அரசிடமும், முக்கியத்துவம் இல்லாத அதிகாரங்கள் மாநில அரசுகளிடமும் உள்ளன. மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும். அதற்காக அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்'' என்று அப்போது பிரணாப் பேசினார்.
கேட்கும், கொடுக்கும் இடங்கள்... இப்போது நான் கேட்கும் இடத்திலும், அவர் கொடுக்கும் இடத்திலும் இருக்கிறார். உடனடியாக இல்லாவிட்டாலும் எல்லா இடையூறுகளையும் கடந்து மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் கிடைக்க பிரணாப் முகர்ஜி முன்வர வேண்டும்.
""எந்த மொழிக்கும் திமுக எதிரானது அல்ல. தமிழ் மொழிக்கு மத்தியில் உரிய இடம் வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை வங்காளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட அனைத்து மொழி பேசுபவர்களும் எழுப்பலாம்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது "இந்தி ஒழிக' என்று திமுகவினர் கோஷம் இடவில்லை. "கட்டாய இந்தி ஒழிக' என்றுதான் கோஷமிட்டோம். அதில் இன்றும் உறுதியாக இருக்கிறோம்.
அரசியலில் ஈடு இணையில்லாத அளவுக்கு நாணயத்துடன் விளங்கியவர் அண்ணா. அவருக்கு இன்று நாணயம் வெளியிடுவது பொருத்தமானது' என்றார் முதல்வர்.
முன்னதாக, அண்ணா உருவம் பொறித்த ரூ. 5 நாணயத்தை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட, முதல்வர் கருணாநிதி அதை பெற்றுக் கொண்டார்.
|