|
சட்ட விரோத காணி சுவீகரிப்பைத் தடுக்க வேண்டும் : கி.மா.ச. உறுப்பினர் இரா.துரைத்தினம் வலியுறுத்து
- மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் சட்ட விரோத காணி சுவீகரிப்பை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைத்தினம் மாகாண முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீப காலமாக காணி தொடர்பான அத்துமீறல்கள் தமிழ் - முஸ்லிம், தமிழ் - சிங்கள எல்லைப் புறங்களில் இடம்பெற்று வருவதாகவும், இது தொடர்பாக முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
"குறிப்பாக வாகரைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள எல்லைப் புறமான தோணி, தாண்டமடு, புச்சாக்கேணி போன்ற கிராமக் காணிகள், பொலன்னறுவை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு சட்ட விரோதமாகக் கையாளப்படுகின்றன.
தமது கடிதத்தில், "இப்பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பணிச்சங்கேணி, சுங்காங்கேணி, காயாங்கேணி, சேத்துக்குடா ஆகிய பகுதிகளை உள்ளடக்கி 300 ஏக்கர் காணி நன்னீர் மீன் வளர்ப்புக்கு என பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிய முடிகின்றது.
கொக்கட்டிச்சோலை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கெவிலியாமடு பிரதேசத்தில் தமிழர்களுக்குரிய காணிகளில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு விவசாயம் செய்யப்படுகின்றது. நாவலடிச் சந்தி தொடக்கம் பிள்ளையாரடி வரை சட்ட விரோத காணி சுவீகரிப்புகள் தொடர்கின்றன" என்பன போன்றவை உட்பட பல்வேறு விடயங்களை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
"வியாபார நோக்கத்துடன் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் காணி கோரி விண்ணப்பித்திருந்தாலும் முதலிலும் பிரதேசத்திற்கும் அடுத்ததாக மாவட்டத்திற்கும் முன்னுரிமையளிக்கப்பட வேண்டும்.
மாவட்டத்தில், மாகாணத்தில் காணி தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்கு பிரதேச மற்றும் மாவட்ட ரீதியாக, காணி பயன்பாட்டுத் திட்டமிடல் குழு அமைக்கப்பட வேண்டும். அது போல், மாகாணத்திற்கும் காணி பயன்பாட்டுத் திட்டமிடல் குழு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றும் தமது கடிதத்தில் மாகாண முதலமைச்சரை துரைரத்தினம் வலியுறுத்திக் கேட்டுள்ளார்.
|