|
இலங்கையில் தேர்தல் வன்முறைகள்
.- பி.பி.சி செய்திகள்
இலங்கையில் அடுத்த நிறைவேற்று ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு இன்னும் ஒன்பது தினங்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரங்களும் கூடவே வன்முறைகளும் அரங்கேறி வருகின்றன.
இலங்கையின் வடமேற்கே புத்தளம் மாவட்டத்தில் முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி நகரில் இன்று சனிக்கிழமை இடம்பெறவிருந்த தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றுக்கு முன்பாக இரண்டு பிரதான கட்சி ஆதரவாளர்களுக்குமிடையே இடம்பெற்ற மோதல்களில் அருண சமன்குமார என்ற 19 வயது இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளரான இந்த இளைஞனுடன் ஏனைய ஐந்து பேரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மூவின மக்களும் வசிக்கின்ற மதுரங்குளி நகரில் சனிக்கிழமை மாலை நடைபெறவருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கும் கூட்டத்த்துக்கு முன்பாகவே இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
காயமடைந்தவர்களில் மூவர் புத்தளம் வைத்தியசாலையிலும் இருவர் குருணாகல் தேசிய வைத்திய சாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வன்முறைகளின் தொடர்ச்சியாக குறித்த பகுதியை சேந்த ஐக்கிய தேசியக் கட்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீடும் வர்த்தக நிலையமும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சில தினங்களுக்கு முன்னர், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரசாரக் கூட்டமொன்றுக்கு பஸ்ஸொன்றில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவர் இலங்கையின் தெற்கே ஹுங்கம என்ற இடத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டார்.
பெப்ரல் என்ற நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான அமைப்பின் படி, இலங்கையில் தேர்தலுக்கு முன்னர் பதிவாகியுள்ள முந்நூறுக்கும் அதிகமான வன்முறைகளில் இரண்டாவது மரணம் சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது.
|