|
கண்டு கொள்ளாத காங்கிரஸ் - 'கார்டன்' கதவு திறக்குமா? சிக்கலில் தே.மு.தி.க.,
ம க்களோடு கூட்டணி என தனித்து களமிறங்கி வந்த தே.மு.தி.க., கூட்டணிப் பாதைக்கு திரும்ப முடிவெடுத்துள்ளது. இரு கழகங்களையும் பிடிக்காத, நடுநிலையாளர்களின் ஓட்டுகள் தே.மு. தி.க., விற்கு விழுந்து வந்த நிலையில், தற்போதைய கூட் டணி முடிவால் தே.மு.தி.க., வின் ஓட்டு வங்கி கணிசமாக குறையும் என, அரசியல் பார் வையாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த 2005ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் துவக் கப்பட்ட தே.மு.தி.க., சட்டசபை தேர்தல்(2006), லோக்சபா தேர்தல்(2009) உள்ளிட்ட பல் வேறு தேர்தல் களை தனித்தே சந்தித்தது. சமீபத்திய வந்தவாசி, திருச் செந்தூர் இடைத்தேர்தல்களிலும், தனித்து போட்டியிட்ட அக் கட்சி வேட்பாளர்கள் டிபாசிட் இழக் கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர். தனித்து களம் காண்பது தமிழகத்திற்கு ஒத்துவராது என்பதால், அக்கட்சிக்கு ஆரம்பத்தில் இருந்த செல்வாக்கும் தற்போது சரியத் துவங்கியுள்ளது. அரசியல் ஆதாயம்தேடி, தே.மு.தி.க., சரணாலயத்தில் தஞ்சமடைந்திருந்த, பல கட்சிகளை சேர்ந்த, "முன்னாள்' எம்.பி., எம்.எல்.ஏ.,க்களும், "சீசன்' முடிந்த பறவைகளைப்போல், மீண்டும் தாய் கழகங்களுக்குத் தாவிவிட்டனர். ஒரு சிலர் மட்டுமே மிகப்பெரிய, "எதிர்பார்ப்புகளுடன்' அக்கட்சியில் எஞ்சியிருக்கின்றனர். தொடர் தோல்விகளால், அவர்களின் எதிர்பார்ப்பும் தற்போது குறைந்து போயுள்ளது. கட்சியின் மாவட்ட செயலர்கள் மட்டுமின்றி, கிளைச் செயலர்கள் வரை அனைவரது மனதிலும், "கட்சித் தாவல்' மனஓட்டம் எழுந்துள்ளது.
இந்த மனநிலையில் இருந்து நிர்வாகிகளை மீட் டெடுக்க வேண்டிய நிர்பந்தம் தே.மு.தி.க., தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில், கடந்த 9ம் தேதி சென்னையில் பொதுக் குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை அக்கட்சி நடத்தியது.வழக்கமாக, அலுவலக வளாகத்தில், "சிம்பிளாக' பொதுக்குழுவை நடத்தி வந்த விஜயகாந்த், இந்த பொதுக்குழுவை அ.தி.மு.க., பொதுக்குழு நடந்த சென்னை வானகரத்தில் உள்ள பிரம்மாண்டமான திருமண மண்டபத்தில் நடத்த ஏற்பாடு செய்திருந்தார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தே.மு.தி.க.,வினர், பல லட்ச ரூபாய்களை வாரியிறைத்து, புதிய சட்டசபை அரங்கம் போன்ற நுழைவாயில், பிளக்ஸ் பேனர் ஆகியவற்றை வைத்திருந்தனர். பொதுக்குழு சனிக்கிழமை நடந்ததால், 40 அயிட்டங்களுடன் கூடிய சைவ விருந்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகள் அனைத்தும் அ.தி.மு.க., பாணியில் செய்திருந்தாலும், அக்கட்சி பொதுக்குழுவில் காணப்படும் உற்சாகமும், எழுச்சியும், தே.மு.தி.க., பொதுக்குழுவில், "மிஸ்' ஆகி இருந்தது.
அ.தி.மு.க., செயற்குழு, பொதுக்குழு நடந்தால் கால் வைக்ககூட இடம் இல்லாமல் இருக்கும் அந்த திருமண மண்டப வளாகம், தே.மு.தி.க., பொதுக் குழுவன்று கால்பந்துபோட்டி முடிந்த காலி மைதானமாக காட்சியளித்தது. தொண்டர்கள் அங்கொன்றும், இங் கொன்றுமாக சுற்றி திரிந்தனர். கூட்டத்தில் பேசியவர்கள் பலரும், கட்சி அழிவில் செல்கிறது என்பதை தலைமைக்கு நேராக உணர்த்தினர். அங்கு நிறைவேறிய 24 தீர்மானத்திலும், ஒன்றும் புதிதாக சொல்லிவிடவில்லை. அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சிகளின் பாணியிலேயே, தீர்மானங்கள் தயாரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு தீர்மானத்தில் மட்டும்," ஜனநாயக மீட்பு தர்மயுத்தத்தில், தே.மு.தி.க., அனைத்து தியாகங்களும் செய்ய தயாராகவுள்ளது. இந்த போராட்டத்தில், உண்மையும், அக்கறையும், ஈடுபாடும் கொண்ட அரசியல் இயக்கங்கள், தே.மு.தி.க.,வோடு இணைந்து செயல்பட முன்வந்தால், அதுபற்றி முடிவு எடுக்கப்படும்' என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம், தே.மு.தி.க.,வின் தனித்துபோட்டி என்ற, "பார்முலா' தகர்த்து எறியப்பட்டுள்ளது.
தி.மு.க.- அ.தி.மு.க.,விற்கு மாற்று சக்தியை விரும்பிய பலர், தே.மு.தி.க.,விற்கு ஓட்டளித்து வந்தனர். தே.மு.தி.க.,வின் கூட்டணி முடிவால், இந்த நம்பிக்கை பொய்த்து போகவுள்ளது. மக்கள் மத்தியில் தே.மு.தி.க., மீது இருந்த நம்பிக்கை என்ற "நீலசாயம்' இதன் மூலம் வெளுத்துவிடும் என்கின்றனர் அரசியல் பார்வையளர்கள். இந்நிலையில், பெண்ணாகரம் இடைத் தேர்தலை கூட்டணியுடன் சந்திக்கவேண்டிய நிர்பந்தம் அக்கட்சி தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க.,- காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப் புள்ளது என்ற ஹேஷ்யங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு திட்டவட்டமாக தங்களது நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளார். காங்கிரசின் இந்த அறிவிப்பால், அரசியல் களத்தில் தே.மு.தி.க., கடும் பின்னடைவை சந்தித் துள்ளது. மேலும், பொதுக்குழுவில்,"தி.மு.க., அரசை ஒழிப்பதே தனது திட்டம் என விஜயகாந்த் வெளிப்படையாக அறிவித்துள்ளதால், "போயஸ் கார்டன்' கதவை தட்டவேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது. கார்டனில் இருந்து தே.மு.தி.க.விற்கு கதவு திறக்குமா என்பதைத் பொறுத்து தமிழக அரசியல் களம் மாறும்.
- Dinamalar -
|