|
இறுதித் தீர்வை நோக்கி நகரும் அணுகுமுறையே இன்றைய தேவை
புதிய பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் நாளை திருகோணமலையில் கூடுகின்றனர். எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக முடிவு எடுப்பதற்காகவே இவர்கள் கூடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த கால செயற்பாடுகள் மூலம் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதே பொருத்தமானது. அப்போது தான் சரியான முடிவுக்கு வரமுடியும்.
இனப் பிரச்சினை தொடர்பாகத் தமிழ்த் தலைவர்கள் கடந்த காலங்களில் மேற்கொண்ட நிலைப்பாடுகளுள் பிரதான மானவை என இரண்டைக் குறிப்பிடலாம். முழுமையான அரசியல் தீர்வுக்குக் குறைவான எதையும் ஏற்பதில்லை என்பது ஒரு நிலைப்பாடு. தனிநாடு அமைக்க முடியும் என்பது மற்றைய நிலைப்பாடு.
இவ்விரு நிலைப்பாடுகளும் நடைமுறைச் சாத்தியமற்றவை என்பது ஒருபுறமிருக்க, இவை தொடர்பாகத் தமிழ்த் தலைவர்கள் நிலையான கொள்கையைப் பின்பற்றவில்லை. ஈடாட்டத்தன்மையை வெளிப்படுத்தினார்கள். வட்டுக்கோட்டையில் தனிநாட்டுத் தீர்மானம் நிறைவேற்றியவர்கள் பின்னர், கிடைக்கும் அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டு மேலதிக அதிகாரங்களுக்காகத் தொடர்ந்து போராடுதல் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் மாவட்ட சபையை ஏற்றார்கள். அதன்பின், அதிகாரப்பகிர்வுக்காகத் தனிநாட்டுக் கொள்கையைக் கைவிட்டார்கள். மீண்டும் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலை ஏற்று ஆயுதப் போராட்டத்துக்குச் சார்பாகச் செயற்பட்டார்கள்.
சரியான கொள்கையையும் அதில் நிரந்தரமான ஈடுபாட்டையும் கொண்டிருக்கும் பட்சத்தில் மாத்திரமே ஒரு விடுத லைப் போராட்டம் வெற்றி காண முடியும். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய வர்கள் சரியான கொள்கையைக் கொண்டிருக்கவுமில்லை. ஏதேனுமொரு கொள்கையில் நிரந்தரமான ஈடுபாட்டை வெளிப்படுத்தவுமில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்று வரை வெகு தூரத்தில் இருப்பதற்கு இதுவே காரணம்.
இனப் பிரச்சினையின் தீர்வுக்கான போராட்டம் தமிழ் மக்கள் மீது புதிய பாரங்களைச் சுமத்துவதாகவோ அவர்களுக்கு இழப்புகளையும் அழிவுகளையும் ஏற்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது. ஆனால் நடந்தது வேறு. தலைவர்கள் தவறான நிலைப்பாடுகளை மேற்கொண்டதால் இழப்புகளும் அழிவுகளும் உட்பட ஏராளம் இன்னல்களைத் தமிழ் மக்கள் அனுபவிக்க நேர்ந்தது.
மூலோபாயத்தையும் தந்திரோபாயத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழம்பாமல் ஒவ்வொரு காலகட்டத்தினதும் யதார்த்தத்துக்கு அமைவான முடிவுகளை எடுத்துச் செயற்படுவதன் மூலம் முழுமையான அரசியல் தீர்வை நோக்கி நகரமுடியும்.
முழுமையானதாக இல்லாத போதிலும் உயர்வான அரசியல் தீர்வொன்றைப் பெறக் கூடியதான சந்தர்ப்பத்தைத் தமிழ்த் தலைவர்கள் தவறவிட்டுவிட்டார்கள். அத் தவறின் விளைவாகப் பேரினவாத சக்திகளின் குரல் சற்று ஓங்கி ஒலிப்பதற்கும் காரணமாகிவிட்டார்கள்.
இன்றைய நிலையில் முழுமையான அரசியல் தீர்வைப் பெறு வது சாத்தியமில்லை. தனிநாடு ஒருபோதும் சாத்தியமில்லை. எனவே உடனடியாகச் சாத்தியமான அதிகாரங்களை ஏற்பதும் மேலதிக அதிகாரங்களைப் பெறுவதற்குத் தொடர்ந்து முயற்சிப்பதுமான அணுகுமுறையைத் தமிழ்த் தலைவர்கள் பின்பற்ற வேண்டும். தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் முழுமையான அரசியல் தீர்வை நோக்கிச் செல்வதற்கும் இதுவே பொருத்தமான அணுகுமுறை. திருமலையில் கூடும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான முடிவை எடுப்பார்க ளென நம்புகின்றோம்.
- தினகரன் தலையங்கம் -
|