|
முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்கள் நிலை என்ன? நேரடியாக பார்வையிடுகிறார் ஐ.நா., சிறப்பு பிரதிநிதி
கொழும்பு:முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களின் நிலையை நேரடியாக ஆராய்வதற்காகவும், அங்குள்ள தமிழ் மக்களை விரைவில் விடுவிக்க வலியுறுத்தியும், ஐ.நா., பொதுச்செயலரின் சிறப்பு பிரதிநிதி, நேற்று கொழும்பு புறப்பட்டார்.இடம்பெயர்ந்த மக்களின் நிலை தொடர்பாக, ஐ.நா., செயலர் பான் கீ மூன், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் தொலைபேசியில் நேற்று முன்தினம் உரையாடினார்.
தனது சிறப்புப் பிரதிநிதியாக பாஸ்கோவேயை கொழும்புக்கு அனுப்பி வைப்பதாக, அப்போது அவர் தெரிவித்தார்.இன்று கொழும்பு சென்றடையும் பாஸ்கோ, கொழும்பு மற்றும் வவுனியாவில் தங்கியிருப்பார். வடபகுதி முகாம்களில் உள்ள மக்களை நேரில் பார்வையிட்டு, அவர்கள் முகாம்களை விட்டு விரைவில் வெளியேற, வேண்டிய நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.மேலும், இலங்கை அதிபர் ராஜபக்ஷே, முக்கிய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ்க் கட்சி உறுப்பினர்களுடனும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
வன்னியில் நடைபெற்ற போரால் இடம் பெயர்ந்த, இரண்டு லட்சத்து 80 ஆயிரம் பேர், தொடர்ந்து முகாம்களில் உள்ளனர். இவர்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு குடியேற விரைந்து நடவடிக்கை எடுக்க, ஐ.நா., உட்பட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.முகாம்களில் உள்ள மக்கள், மோசமான முறையில் நடத்தப்படுவதாகவும், தேவையின்றி நீண்டகாலம் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ஆனால், "வன்னி மக்கள் குடியிருப்பு பகுதியில், கண்ணிவெடிகளை அகற்றுவதாலும், முகாம்களில் உள்ள புலிகளின் உறுப்பினர் அடையாளம் காண வேண்டி இருப்பதாலும், அவர்களை வெளியேற்ற தாமதமாகிறது' என, இலங்கை அரசு கூறி வருகிறது. "உரிமை மீறல் நடைபெற்றால், அது தொடர்பாக விசாரணை நடத்தி, தமிழர்களுடன் அரசியல் பேச்சு தொடங்கப்படும்' என, இலங்கை அதிபர் ராஜபக்ஷே அறிவித்திருத்தார்.
இந்த வாக்குறுதிகள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்தும், தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐ.நா., பணியாளர் இருவரின் நிலை மற்றும் யுனிசெப் அமைப்பின் பேச்சாளரை நாட்டை விட்டு வெளியேற்றிய விவகாரம் தொடர்பாக, இலங்கை அதிகாரி களுடன் பேச்சுவார்த்தை நடத்த, சிறப்பு தூதுவராக பாஸ்கோவே சென்றுள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.
|