|
அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் : இலங்கைக்கு முற்றுகிறது நெருக்கடி
கொழும்பு : "வன்னி தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும், உடனடியாக தங்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும்' என, பிரிட்டன் கத்தோலிக்க பிஷப்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை போருக்கு பின், கரித்தாஸ் தொண்டு அமைப்பின் செயற்பாடுகளை காண, ஷிபீல்ட் பிஷப் ஜோன் ரோவ்ஸ்தோர்ன் மற்றும் வெஸ்ட் மினிஸ்டர் பிஷப் ஜோன் ஆர்னல்ட் ஆகிய இருவரும், இலங்கை சென்றனர். எளிதில் யாருமே அனுமதிக்கப்படாத தடுப்பு முகாம்களுக்கு சென்று வரும் வாய்ப்பு, இவர்கள் இருவருக்கும் கிடைத்தது. அங்கு எட்டு நாள் தங்கியிருந்த அவர்கள், அகதிகள் முகாம்களை சென்று பார்வையிட்டனர். அத்துடன் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள், மதகுருக்கள், கன்னியாஸ்திரிகளையும் சந்தித்து பேசினர்.
இதுகுறித்து, ஜோன் ரோவ்ஸ்தோர்ன் மற்றும் ஜோன் ஆர்னல்ட் கூறியதாவது: முகாம்களில் உள்ள மக்கள் நிலை கண்டு துயரடைந்தேன். அங்கு ஜனநெருக்கடி அதிகமாக இருப்பதால், போதிய அளவு உணவு, சுகாதார சேவை இல்லை. அண்மையில் பெய்த மழையால், அவர்களின் அரைகுறை இருப்பிடங்களைக் கூட இழந்துள்ளனர். மேலும், பருவமழை காலம் விரைவில் வரவுள்ளது. அகதிகள் முகாம்களில், அவர்களை அடைத்து வைப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக அவர்களின் கிராமங்களுக்கு திரும்பி செல்ல, கட்டாயமாக அனுமதிக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து வந்தாலும், அவர்கள் முகாம்களில் இருக்க விரும்பவில்லை. தமது குடும்பத்தாருடன் இணைந்து, அவர்களது வீடுகளுக்கு திரும்பி செல்லவே விரும்புகின்றனர். 180 நாட்களில், பெரும்பாலானவர்களை அவர்களது இடங்களுக்கு திருப்பி அனுப்பவதாக இலங்கை அரசு தெரிவித்தது. ஆனால், 90 நாள் கடந்த நிலையில், தனது வாக்குறுதியை நிலைநாட்ட, இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். எப்படியானாலும், அமைதியை அடைவதற்கான பாதை நீண்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை: "மனித உரிமை மீறல்கள் குறித்து பதிலளிக்கவில்லை என்றால், இலங்கைக்கு வரிச்சலுகை கிடையாது' என, ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் மீறப்படுவது குறித்து, ஐரோப்பிய ஆணைக்குழு கருத்து தெரிவித்துள்ள அறிக்கைக்கு, நேற்றுக்குள் இலங்கை அரசு பதிலளிக்க வேண்டும். பதிலளிக்கவில்லை எனில், "ஐரோப்பிய நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, இலங்கை இதுவரை அனுபவித்து வந்த வரிச்சலுகை கிடையாது' என ஐரோப்பிய யூனியன் தெரிவித்திருந்தது. இதற்காக, நான்கு அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்றை, இலங்கை அதிபர் ராஜபக்ஷே சில நாட்களுக்கு முன் நியமித்திருந்தார். ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக, அவர்கள் கருத்து தெரிவித்தும், "தெளிவான, உறுதியான பதில் தேவை' என, ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஐரோப்பிய யூனியன் அமைச்சர் ஒருவர் கூறியதாவது: ஐரோப்பிய ஆணைக்குழுவின் அறிக்கை, இலங்கைக்கு ஏற்றுமதி வரிச்சலுகை இன்னும் மூன்று ஆண்டுக்கு நீடிக்காது என்பது உறுதிபடுத்தியுள்ளது. இனி சலுகை நீடிப்பது கடினம். இவ்வாறு அவர் கூறினார்.
-Dinamalar-
|