|
ஜோதிபாசு மரணம்
கொல்கத்தா,ஜன.17:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சருமான ஜோதிபாசு உடல்நலக்குறைவு காரணமாக இன்று கொல்கத்தா மருத்துவமனையில் காலமானார்.அவருக்கு வயது 96. . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மூத்த தலைவரான ஜோதி பாசுவின் உடல்நிலை மோச மடைந்ததை தொடர்ந்து கடந்த 1ந் தேதி அவர் கொல்கத்தாவில் உள்ள ஏஎம்ஆர்ஐ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 96 வயதான அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் பயனாக இடையில் ஓரளவுக்கு உடல்நலம் சீரானது. ஆனால் அதன் பிறகு கடந்த இரு நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்தது.
இதனால் நுரையீரல், சிறுநீரகம், இதயம், ஈரல் ஆகிய அவரது அனைத்து முக்கிய உள் உறுப்புகளும் செயல் இழந்துவிட்டதால் அவருக்கு முழு அளவில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அவரது உடல்நலம் மோசமானதை தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மருத்துவ மனைக்கு நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் விசாரித்து அறிந்தனர்.
இந்த நிலையில் அவரது இதயத் துடிப்பு மிகவும் குறைந்து அபாய கட்டத்தை எட்டியதாக மருத் துவமனை தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில் ஜோதிபாசு இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
வாழ்க்கை குறிப்பு:முதுபெரும் மார்க்சிஸ்ட் தலைவரான ஜோதிபாசு 1914ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார். ஜோதிர் இந்திராபாசு என்பது அவரது முழு பெயராகும். கானா என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர் பட்டப் படிப்பை முடித்த பிறகு பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக 1935ம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். அதன் பிறகு படிப்பை முடித்த பின் இந்தியா திரும்பிய அவர் 1940ம் ஆண்டு பாசந்தி கோஷை திருமணம் செய்து கொண்டார். 1942ம் ஆண்டே பாசந்தி கோஷ் மரணம் அடைந்தார்.
அதன் பிறகு 1948ம் ஆண்டு கமல்பாசுவை ஜோதிபாசு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1951ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறந்த சில நாட்களிலேயே வயிற்றுப்போக்கால் உயிரிழந்தது. இதனையடுத்து கோகா என்ற ஆண் குழந்தை 1952ம் ஆண்டு பிறந்தது. தற்போது சந்தன் என்று அவர் அறியப்படுகிறார்.
1936ம் ஆண்டு முதல் 1940 வரை இங்கிலாந்தில் இருந்தபோது இந்திய மாணவர்களை ஒருங்கிணைக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் ஜோதிபாசு ஈடுபட்டார்.இந்தியா திரும்பியதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பின ரான இவர் சிறந்த தொழிற்சங்க வாதியாகவும் திகழ்ந்தார். 1943ம் ஆண்டு நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் மாகாண கமிட்டி அமைப்பாளராக அவர் தேர்ந்தெடுக் கப்பட்டார். 1946ம் ஆண்டு அவருக்கு மகாத்மா காந்தியடிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. 1951ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்ட போது கட்சியின் வங்கமொழி பத்திரிகையான சுதந்திநாடாவின் ஆசிரியர் குழு தலைவரானார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து அதன் மத்திய கமிட்டி மற்றும் பொலிட்பீரோவுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். அது முதல் இறுதி வரை அவர் இந்த இரு பதவிகளிலும் இருந்து வந்தார்.
எம்எல்ஏ பதவி:1946ம் ஆண்டு ரெயில்வே தொகுதியில் இருந்து அவர் முதல் முறையாக வங்காள சட்டமன்றத்திற்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அது முதல் மேற்கு வங்க சட்டமன்றத்தில் தொடர்ந்து உறுப்பினராக இருந்துவந்த பாசு 1972 முதல் 77 வரையிலான குறுகிய காலத்திற்கு மட்டும் உறுப்பினராக இல்லை.1971ம் ஆண்டு வரை அவர் பாரா நகர் தொகுதி உறுப்பினராக இருந்தார். 1977ம் ஆண்டு அவர் தனது தொகுதியை மாற்றிக் கொண்டு சட்காட்சியா தொகுதியில் இருந்து போட்டியிட்டார்.
முதலமைச்சர் பதவி:1967ம் ஆண்டு அவர் மேற்கு வங்க துணை முதல்வரானார். அப்போது அவரிடம் நிதி மற்றும் போக்குவரத்து இலாகாக்கள் இருந்தன. 1969ம் ஆண்டு 2வது முறையாக இடதுசாரிகள் முன்னணி அமைத்த அமைச்சரவையில் அவர் மீண்டும் துணை முதல்வராக பொறுப்பு வகித்தார். அப்போது அவரிடம் பொது நிர்வாகம், உள்துறை மற்றும் காவல்துறை பொறுப்புகள் வழங்கப்பட்டன.
1977ம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு பிறகு இடதுசாரிகள் அமைச்சர வைக்கு அவர் முதலமைச்சராக தலைமை பொறுப்பை ஏற்றார். அது முதல் 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ந் தேதி வரை சுமார் 23 ஆண்டுகளுக்கு அவர் தொடர்ந்து 5 முறை மேற்குவங்க முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். இதன் மூலம் இந்தியாவிலேயே நீண்ட காலத்திற்கு முதலமைச்சராக பதவி வகித்தவர் ஜோதிபாசு மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2000ம் ஆண்டு அவர் தாமாகவே முன்வந்து முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.
புத்தகங்கள்:மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான இவர் கட்சி பத்திரிகை களிலும், இதழ்களிலும் பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பெரும்பாலும் வங்க மொழியிலான அவரது கட்டுரைகள் 5 தொகுப்பு களாக தொகுக்கப்பட்டு வெளியிடப் பட்டுள்ளன.தன்னுடைய வாழ்க்கை நினைவுகளை அரசியல் வாழ்க்கை வரலாறாகவும் அவர் எழுதி உள்ளார்.
தலைவர்கள்இரங்கல்:ஜோதிபாசுவின் மறைவுக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
|