|
கூட்டமைப்பின் முடிவுக்கு இந்தியா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியது!
-ஈழப்பிரியன்
கூட்;டமைப்பின் முடிவுக்கு புதுடில்லி சாதகமான சமிக்ஜை." கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகளில் இன்றைய (17.01.2010) தலைப்புச் செய்தி இதுதான்
'ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவினை ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பின் முடிவுக்கு புதுடில்லி சாதகமான சமிக்ஜை." தமிழ்க் கூட்டமைப்பினர் தமிழ் மக்களை எவ்வளவு முட்டாள்கள் என்று இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு விளக்கம் தேவையில்லை.
சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற தமது முடிவால் இந்தியா தம்மீது ஆத்திரமடைந்திருக்கும் என்ற நம்பிக்கையுடனேயே கூட்டமைப்பினர் புதுடில்லி சென்றிருந்தனர். தாம் ஏன் அந்த முடிவை எடுத்தார்கள் என்பதற்கு விளக்கம் சொல்லுவதுதான் அந்த விஜயத்தின் நோக்கம்.சம்பந்தன் தலைமையில் சென்ற அந்த நால்வர் குழுவில் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் அடங்கியிருந்தனர். முதலில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபாமா ராவ் அவர்களைச் சந்தித்து கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பாகவும் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை குறித்தும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பு மேற்கொண்ட தீர்மானத்திற்கான அடிப்படைக் காரணம் குறித்தும் நிருபமா ராவ் தலைமையிலான இந்திய வெளிவிவகார அமைச்சைச் சார்ந்த உயரதிகாரிகளுக்கு விபரமாக தாங்கள் எடுத்துக்கூறியதாகவும் தங்களது நிலைப்பாடு தொடர்பாக கேட்டறிந்த அவர்கள் பூரணமாக திருப்தியைத் தெரிவித்ததாகவும் புதுடில்லியிலிருந்து தொலைபேசி மூலம் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.
இந்தச் செய்தியையே தமிழ்ப் பத்திரிகைகள் இன்று தலைப்புச் செய்தியாக்கியிருந்தன. இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பு வந்தபோது, சரத் பொன்சேகா ஜனாதிபதியாகுவதை இந்தியா விரும்பவில்லை என்றும், அவர் தேர்தலில் போட்டியிடவிருப்பதாக முதல் முதலில் செய்தி வந்ததும் அதுகுறித்து ஆராய்வதற்காகவே அவர் அவசரமாக இங்கு வந்ததாகவும் இந்தப் பத்திரிகைகள் தான் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன.
இப்போது, தமிழ்க்கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிப்பது இந்தியாவிற்கு பிடிக்காத விடயம் என்று தமிழ் மக்கள் கருதிவிடக்கூடாது என்பதற்காகவே மாவை சேனாதிராஜா புதுடில்லியிலிருந்து அவசரம் அவசரமாக இந்த செய்தியை வெளியிட்டிருக்கின்றார்.
இந்தியாவின் ஒரு அதிகாரியைச் சந்தித்து தமது முடிவுக்கான காரணத்தை சொல்லும்போது அவர் அது குறித்து அவர்களின் கருத்தை கேட்கமுடியுமே தவிர கருத்துச் சொல்ல முடியாது என்ற சாதாரண விடயம் கூடவா தமிழ் மக்களுக்குத் தெரியாது.
அவர்களின் முடிவு புதுடில்லிக்கு சாதகமாக இருந்திருந்தால் அடுத்து என்ன நடந்திருக்கும்? வெள்விவகார அமைச்சின் செயலாளர் என்ன செய்திருப்பார்? அடுத்த கட்டமாக வெளிவிவகார அமைச்சரை சந்திக்க அல்லவா ஏற்பாடு செய்திருப்பார். இவர்கள் புதுடில்லியில் தவம்கிடந்தபோதும், வெளிவிவகார அமைச்சரை என்ன, பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனைக் கூட சந்திக்க முடியவில்லையே. அதன் அர்த்தம் என்ன? உங்களின் முடிவை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதானே!. இதுகூடவை மாவைக்குப் புரியவில்லை. அல்லது புரிந்தும் தமிழ் மக்களுக்கு குடும்பி கட்டலாம் என்ற நம்பிக்கையில் அப்படி அவசரம் அவசரமாக அறிக்கை விடுத்தாரா?
புதுடில்லியில் சரத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதை விடுத்து, வடக்கு கிழக்கில் பிரச்சாரத்தை நடத்துங்கள். அப்போதுதான் உங்கள் சொல்லை கேட்டு தமிழ் மக்கள் வாக்களித்தார்கள் என்று கணக்குக் காட்ட வசதியாக இருக்கும்.
|