|
இலங்கையின் பல பகுதிகளில் பாதுகாப்பு நிலைவரம் முன்னேற்றம் அவுஸ்திரேலிய பிரதமர் கூறுகிறார்
வழமையாக இருந்ததிலும் பார்க்க இலங்கையின் பல பகுதிகளும் ஆப்கானிஸ்தானும் அமைதியாக இருப்பதாகவும் புகலிடம் கோருவோரின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் போது இந்த விடயம் பரிசீலனைக்கு எடுக்கப்படும் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட் கூறியுள்ளார்.
பாதுகாப்பு நிலைவரம் தொடர்ந்து மேம்பட்டு வரும் நிலையில் அதிகளவிலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் சாத்தியம் உள்ளதாகவும் கெவின் ரூட் கூறியுள்ளார்.சிட்னியிலிருந்து சாரா என்பவர் விடுத்த தொலைபேசி அழைப்பிற்குப் பதிலளிக்கும் போதே கெவின் ரூட் இதனைத் தெரிவித்துள்ளார்.
தான் தமிழரெனவும் படிமுறையான அடக்குமுறையினால் இலங்கையை விட்டு நான் வெளியேறியதாகவும் சாரா கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்த கெவின் ரூட், புகலிடம் கோருவோர் தொடர்பான கொள்கை முழுமையாக மாற்றப்பட்டிருக்கவில்லை எனவும் புகலிடம் கோருவோரின் விண்ணப்பங்கள் உண்மையற்றவையாயின் அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் ரூட் தெரிவித்திருக்கிறார்.
உண்மையிலேயே அடக்குமுறை அச்சத்தை அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு அவுஸ்திரேலியா பாதுகாப்பான புகலிடத்தை வழங்கும் என்று கெவின் ரூட் கூறியுள்ளார். "ஆனால் என்ன நடந்தது.... இலங்கையின் பல பகுதிகளில் பாதுகாப்பு நிலைவரம் இப்போது மாற்றமடைந்து வருகிறது. அண்மையில் அவர்கள் ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்தியுள்ளனர் என்று நேற்று வெள்ளிக்கிழமை காலை செவன் நெற்வேர்க்கிற்கு ரூட் தெரிவித்தார். யாழ்.குடாநாட்டுக்கு வெளியே நாட்டின் ஏனைய பகுதிகளில் சுமுகநிலை ஏற்பட்டு வருகிறது. அதிகளவிலான பகுதிகள் பாதுகாப்பானவையாக உள்ளன. சில பகுதிகளில் அவ்வாறு இல்லை. ஆதலால் மக்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதிலேயே இது தங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானிலும் இதேநிலைமை தான். முன்னரிலும் பார்க்க ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் ஸ்திரத்தன்மை காணப்படுகிறது. ஆதலால் நாடு என்று பார்க்காமல் நாட்டின் எந்தப் பகுதி என்று பார்த்தே தீர்மானம் எடுக்கவேண்டியுள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்."இலங்கையின் நிலைவரம் தொடர்ந்து மேம்பாடு கண்டால் அதிகளவிலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். புகலிடம் கோரி விண்ணப்பித்தோர் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கெவின் ரூட் கூறியதாக ஏ.பி.பி. செய்திச் சேவை தெரிவித்தது.
|