|
தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழ்-மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் : ஆர். சம்பந்தன்
"விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்து விட்ட போதிலும் தமிழர் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை.
புரையோடிப் போயுள்ள இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு அனைத்து தமிழ்-முஸ்லிம் அரசியல் கட்சிகளும் மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்" என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆர்.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
வவுனியா நகரசபைக்கான தேர்தலில் வெற்றிபெற்ற இலங்கைத் தமிரசுக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட வைபவத்தில் முக்கிய விருந்தினராக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: "இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை நாங்கள் அடைவதாக இருந்தால், வட கிழக்கில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் ஒன்றிணைய வேண்டும். அத்துடன், எல்லாக் கட்சிகளும், அல்லது கூடுதலான கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும்.
அவ்வாறு ஒன்றிணைந்து, அந்த நிலைப்பாட்டில் நாங்கள் அனைவரும் உறுதியாக நிற்க வேண்டும். அந்த உறுதிப்பாட்டின் பின்னால் போதிய அளவில் மக்களுடைய ஆதரவு இருக்கின்றது என்பதை அரசாங்கமும், பெரும்பான்மை இன மக்களும் உணரச் செய்ய வேண்டும்.
எமது உரிமைகளை மறுக்க முடியாது
அதேபோன்று இதனை, இந்தியாவும், சர்வதேச நாடுகளும் உணருமாக இருந்தால், எமது உரிமைகளை எவரும் மறுக்க முடியாது - அவர்கள் அந்த உரிமைகளை தந்தே தீர வேண்டும். அவ்வாறு தராமல், எங்களை வாழ விடாமல் அவர்கள் வாழ முடியாது என்பதைக் கூறி வைக்க விரும்புகிறேன்.
இந்தப் பிரச்சினையைச் சமாதானமாகத் தீர்ப்பதற்கு நாங்கள் தயார். இதுபற்றி நாங்கள் இந்தியாவுடன் பேசிக் கொண்டிருக்கின்றோம். சர்வதேச சமூகத்துடன் பேசிக் கொண்டிருக்கின்றோம். இதைப்பற்றி எமது புலம்பெயர் மக்களுடன் பேச விரும்புகின்றோம்.
விரைவில் நாங்கள் பேசுவோம். இதற்கு முன்பும் நாங்கள் பேசியிருக்கின்றோம்.
எல்லோருக்கும் கெளரவமான ஓர் அரசியல் தீர்வு – எமது தன்மானத்தை, எமது சுயமரியாதையை, எமது கெளரவத்தைக் காக்கக்கூடிய ஓர் அரசியல் தீர்வு – எமது மக்களுடைய பாதுகாப்பையும் எமது பிரதேசத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்யக்கூடிய ஓர் அரசியல் தீர்வு – எமது பொருளாதார, சமூக கலாசார உரிமைகளை நாங்களே பெறக்கூடிய, நாங்களே திட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தி அடையக்கூடிய ஓர் அரசியல் தீர்வைப் பெற வேண்டும். இதுவே இறுதியான ஒரு தீர்வாக இருக்க வேண்டும்.
கடுமையாக உழைப்போம்
எனவே, இதற்காக உழைக்க வேண்டியது எமது கடமை. நாங்கள் இதற்காகக் கடுமையாக உழைப்போம். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், ஏனைய தமிழ் கட்சிகள் ஆகியன ஒன்றாகச் சேர்ந்து உழைக்க வேண்டும். இதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தினார்கள். அங்கு என்ன நடக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரியும்.
தயவு செய்து கேலிக்கூத்தர்களாக ஆகாதீர்கள். இதைத்தான் நாங்கள் சொல்கிறோம். தாங்கள் ஆட்சி செய்யலாம் என்று கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் குதித்தார்கள்.
இன்று அவர்கள் முடங்கி எதனையும் சாதிக்க முடியாத நிலையில் இருந்து வெறுப்பான கருத்துக்களை வெளியிட்டும் வெறுப்பான கடிதங்களை எழுதிக்கொண்டும் இருக்கின்றார்கள். எங்களை ஏமாற்ற முடியாது.
உண்மையான தீர்வாக இருக்க வேண்டும்
நீங்கள் வழங்குவது ஓர் உண்மையான தீர்வாக இருக்க வேண்டும். நிலை நிற்கக் கூடியதாக மாற்றி அமைக்க முடியாததாக அது இருக்க வேண்டும். எமது மக்கள் பாதுகாப்பாக, சுதந்திரமாக, கெளரவமாக வாழ்வதற்கு அது வழி சமைக்க வேண்டும்.
சிங்கள மக்களை நாங்கள் நேசிக்கின்றோம். அவர்களை நாங்கள் வெறுக்கவில்லை. அவர்கள் எங்களுடைய அன்புச் சகோதரர்கள். இந்த நாட்டில் அவர்களுக்கும், அவர்களது பிரதேசத்திற்கும் இருக்கும் உரிமையைத்தான் எங்களுடைய பிரதேசத்திலும் இருக்க வேண்டும் என எமது மக்கள் சார்பில் நாங்கள் கேட்கின்றோம்.
அதற்கு மேலதிகமாக எதனையும் நாங்கள் கேட்கவில்லை. அவர்களுடைய பிரதேசங்களில் அவர்களுக்கு எவை இருக்கின்றனவோ அவை அனைத்தும் எங்கள் பிரதேசத்தில் எங்களுக்கும் இருக்க வேண்டும் என்பதைத்தான் நாங்களும் வலியுறுத்துகின்றோம்.
இதைத் தருவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துக் கொண்டிருக்க முடியாது. தரவேண்டிய கட்டாய நிலைமைக்கு அரசாங்கம் தள்ளப்படும். ஆனால் அதை நாங்கள் அடைவதற்கு விசேடமாக வட கிழக்கில் உள்ள தமிழ் பேசுகின்ற தமிழ்-முஸ்லிம் மக்களுடைய சக்தியும் பலமும் எங்களுக்குப் பின்னால் நிற்க வேண்டும்.
அவ்விதமான ஒரு நிலைப்பாட்டினை அடைவதற்கு நீங்கள் எல்லோரும் கூடிய அளவில் முயற்சி எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்."
இவ்வாறு தெரிவித்தார் தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆர்.சம்பந்தன்
|