|
யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமை -முள்ளை முள்ளால் எடுக்கும் இராணுவம்
- மதிவாணன்
யாழ்.பல்கலைக்கழகம் கடந்த வருட முற்பகுதியில் விடுதலைப்புலிகளால் பரபரப்பான செய்தி ஒன்றுஉலகம் முழுவதும் பரப்பப்பட்டது. அது வேறொன்றுமல்ல. தாம் வெகுவிரைவில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றப் போகிறோம் என்பதே அது. முதலில் இச்செய்தி புலம்பெயர் தமிழர்களிடையே தான் இச்செய்தி பரப்பப்பட்டது.அவர்களில் பலர் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் தொலைபேசி எடுத்துவிசாரிக்க ஆரம்பித்த பின்னரே, இங்குள்ளவர்களுக்கு விடயம் தெரிய வந்தது. யாழ்ப்பாண மக்களைப் பொறுத்தவரையில் இச்செய்தி அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியமாக இருந்தது. ஏனெனில் இப்பொழுது யாழ்ப்பாணத்தில்வாழ்கின்ற மக்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளுக்கு மட்டுமின்றி கொழும்புக்கும் தப்பியோட வழியில்லாதவர்கள். 1995ல் புலிகளின் கட்டாயத்தின்பேரில் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறியவர்கள், வன்னியில் சென்று வாழ அவர்கள் விரும்பாதபடியால், இராணுவம் யாழ்க்குடாநாட்டினை முழுமையாகக் கைப்பற்றியதும் இங்கு வாழ்வதற்கு திரும்பி வந்தவர்கள். அதனால் புலிகளுக்கு அவர்கள் மீது பேய் ஆத்திரம். யாழ்ப்பாணத்தில் வாழத்திரும்பி வந்தவர்களை “துரோகிகள்” என்றும், தாம் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பி வரும்போது அவர்களை பழிவாங்கப் போவதாகவும் புலிகளின் ஆஸ்தான கவிஞர் புதுவை இரத்தினதுரை வன்னியிலிருந்து கவிதை கூட எழுதியிருந்தார். இப்படியான ஒரு சூழ்நிலையில் புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றப் போகிறார்கள் என்ற செய்தி இங்குள்ள எல்லோருக்கும் வயிற்றில் புளியைக்கரைத்துவிட்டது.
முன்பு ஆனையிறவு இராணுவ முகாமைக் கைப்பற்றியபோதும் அரியாலை வரை முன்னேறி வந்திருந்தனர். அப்பொழுதும் இங்குள்ள மக்கள் அச்சமடைந்ததைக் காணமுடிந்தது. பலர் அவசரம் அவசரமாக தமது வயதுவந்த பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு கொழும்புக்கு ஓடியதைக் காணமுடிந்தது. அவ்வாறு ஓடமுடியாதவர்கள் தமது இஸ்ட தெய்வங்களுக்கு நேர்த்திக்கடன் வைத்துவிட்டு அச்சத்துடன் காத்திருந்தனர். பின்னர் இராணுவம் அவசரமாக பாகிஸ்தானிலிருந்து கொண்டுவந்த பல்குழல் பீரங்கிகளால் தாக்கத் தொடங்கியதும், புலிகள் பின்வாங்கி முகமாலைக்குத் தப்பியோடினர். அதன் பின்னர் இங்குள்ள மக்கள் நின்மதிப் பெருமூச்சுவிட்டு தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக் கொண்டனர். சென்ற வருடம் (2007) புலிகள் யாழபபாணத்தைக் கைப்பற்றும் கதை இங்கு மீண்டும் வெளிவந்ததும் அச்சச் சூழல் பரவியது. பலர் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு கொழும்புக்கு இடம் பெயர்ந்தனர் வியாபாரத்தில் ஈடுபட்டோர் முதலீடுகளைக் குறைத்தனர். புதிய வீடுகளைக்கட்ட எண்ணியிருந்தோர், புதிதாக தொலைபேசி எடுக்க இருந்தோர் அனைவரும் அதை நிறுத்திவிட்டனர். ஆனால் எதிர்பார்த்ததிற்கு மாறாக நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. கிழக்குமாகாணத்திலிருந்து புலிகள் முற்றாக விரட்டியடிக்கப்பட்டனர். மன்னாரில் சிலாவத்துறையும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் இராணுவப் புலனாய்வுப் பொறுப்பாளர் சாள்ஸ்முக்கிய நபர்கள் கொல்லப்பட்டனர். புலிகளின் பல முகாம்கள் குண்டுவீசிஅழிக்கப்பட்டன. இந்த தாக்குதல்களின் போது கடந்த வருடம் (2007) முழுவதும் வன்னியில் 25க்கும் குறைவான பொதுமக்களே உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகள் ‘யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றப் போகிறோம்’ என்ற பிரச்சாரத்தைவலுப்படுத்த வேறு சில கதைகளையும் கட்டிவிட்டார்கள. அதாவது ஏராளமான புலிகள் போர்நிறுத்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஊடுருவி மக்களோடு மக்களாக பதுங்கி இருக்கிறார்கள் எனவும், போதிய ஆயுதங்கள் யாழ்ப்பாணத்திற்குள் கொண்.டு வந்து சேர்க்கப்பட்டு விட்டது எனவும், வன்னியிலிருக்கும் புலிகள் முகமாலை மற்றும் நாகர்கோவில் இராணுவ முன்னரங்க நிலைகளை உடைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்துக்குள் நுழையும் போது, இங்கு பதுங்கியிருக்கும் புலிகள் அவர்களுடன் சேர்ந்து தாக்குதலை ஆரம்பிப்பார்கள் என்றும் கூறப்பட்டது. அத்துடன் இங்குள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் பாடசாலை மாணவர்களும் அவர்களுக்கு உதவியாகச் செயற்படுவார்கள என்றும் கதை பரப்பப்பட்டது. புலிகளுக்கு இந்தவகையான நோக்கம் இருந்தது என்னவோ உணமைதான். கடந்த காலத்தில் யாழ் பல்கலைக்கழகம் புலிகளின் ஒரு குட்டி இராணுவமுகாம் போலவே செயற்பட்டு வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மை. அதை ஆரம்பித்து வைத்தவர் இப்பொழுது யாழ் மாவட்ட எம்.பியாக இருக்கும் குதிரை கஜேந்திரன். இன்னொருவர்; இங்கு நாடக விரிவுரையாளராகக் கடமையாற்றிய க.சிதம்பரநாதன். ஆரம்பத்திலிருந்தே தன்னை ஒரு நடுநிலைமையாளர்; என்று சொல்லிக்கொண்டு புலிகளின் விசுவாசியாக செயல்பட்டுவந்த சிதம்பரநாதன், யாழ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சகல வேலைகளுக்கும் பின்னணியில் இருந்து வந்துள்ளார்;. அது மட்டுமல்ல 1991ல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த செல்வி, மனோகரன் ஆகியோரும் ஆசிரியர் தில்லைநாதனும் புலிகளுக்கு எதிரானவர்கள் என்பதற்காகவும், தனக்கு போட்டியாக நாடகத்துறையில் ஈடுபட்டதற்காகவும், புலிகள் மூலம் அவர்களைக் கடத்தி சித்திரவதை செய்து கொலை செய்ததில் சிதம்பரநாதனுக்கு முக்கிய பங்குண்டு என்ற அபிப்பிராயம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் பரவலாக உண்டு. அதற்கு நன்றிக்கடனாகவே அவரது மனைவி பத்மினிக்கு புலிகள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கினர்.
யாழ்ப்பாணத்தில் இராணுவம் புலிகளை வழித்துத் துடைக்கும் வேலையை ஆரம்பித்ததை அடுத்து, சிதம்பரநாதன் இங்கிருந்து ஓடி கொழும்பில் தனது மனைவியின் அந்தரங்க செயலாளர் என்ற போர்வையில் தங்கியிருக்கிறார். புலிகள் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து கொண்டு யாழ் மாவட்ட சிவில் நிர்வாக வேலைகளை சீர்குலைத்ததுடன், இராணுவத் தாக்குதல்களையும் திட்டமிட்டு நடாத்தி வந்தனர். அத்துடன் பாடசாலை மாணவர்களைத் திரட்டி அடிக்கடி பகிஸ்கரிப்பு ஆர்ப்பாட்டம் ஊர்வலம் என நடாத்தி அவர்களது கல்வியை நாசமாக்கி வந்தனர். ஆனால் இந்த மாதிரியான பிரச்சாரத்தை இங்கு யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டதன் நோக்கம் உடனடியான இராணுவ நடவடிக்கையில் இறங்குவதற்கல்ல. மாறாக, வெளிநாடுகளிலுள்ள ஆதரவாளர்களை குஷிப்படுத்தி அங்கு வீழ்ச்சியடைந்து கொண்டுவரும் தமது நிதி வசூலிப்பையும் ஆதரவையும் தூக்கி நிறுத்துவதுதான். அதேவேளையில் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களையும் புலிகளை நினைத்து அச்சத்துடனும் கலவரத்துடனும் வாழவைப்பதே. ஆனால் இவர்கள் ‘பிள்ளையார் பிடிக்கப்போக அது குரங்காக மாறிய கதை’யாக எல்லாம் மாறிவிட்டது. புலிகளின் சவடால் பிரச்சாரம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கும் எட்டியது. அவர்கள் விடயத்தில் சுறுசுறுப்பானார்கள். அதேவேளையில் மறுபக்கத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லும் கப்பல்களுக்கும் புலிகள் இடையூறு விளைவித்து அங்கு உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டையும் விலையுயர்வையும் செயற்கையாக ஏற்படுத்தினார்கள். தனியார் வர்த்தகர்களும் உணவுப் பொருட்களைக் கொண்டுவரக்கூடாது என மிரட்டித் தடுத்தனர். பின்னர் இந்த நிலைமையை வைத்துக்கொண்டு யாழ்ப்பாண மக்களை இலங்கை அரசு பட்டினி போட்டுக் கொல்கின்றது என உலக அளவில் பிரச்சாரம் செய்தனர். தமிழகத்திலும் அவர்களது பினாமிகள் யாழ்ப்பாண மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடித்தனர். கூலிக்கு மாரடிக்கும் நெடுமாறன் போன்றோர் தமது வழமையான பாணியில் படகின் இயந்திரத்தைக் கழற்றி வைத்துவிட்டு படகில் ஏறிநின்று ‘யாழ்ப்பாணத்திற்கு உணவு கொண்டு போகிறோம்’ என தமாஸ் விட்டனர். புலிகளின் இந்த வெற்றுவேட்டுகளையெல்லாம் முடிவுக்கு இராணுவம் கொண்டுவர முடிவெடுத்து செயலில் இறங்கியது. நேரம் காலம் என்றில்லாது எல்லாப்பகுதிகளிலும் தீடீர் தீடீர் என சுற்றிவளைத்து தேடுதல் நடாத்தியது.இதில் பல புலி உறுப்பினர்கள் அகப்பட்டதுடன், பெருந்தொகையான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. அடுத்ததாக புலிகளின் நெருங்கிய ஆதரவாளர்கள் அவர்களுக்கு உதவியோர் இனங்காணப்பட்டு வெள்ளை வான்களில் வந்தோரால் ‘அழைத்துச்’ செல்லப்பட்டனர். அல்லது மோட்டார் சைக்கிள்களில் வந்தோரால் தீர்த்துக்கட்டப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் பதுங்கியிருந்த பல புலிகள் உயிருக்கு அஞ்சி யாழ் மனித உரிமை ஆணைக் காரியாலயத்தில சரணடைந்தனர். இந்த நடவடிக்கைகள் கடந்த ஒரு வருடமாக இங்கு நடைபெற்று வருகின்றது. இராணுவம் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கைளால் யாழ்ப்பாணம் இப்பொழுது பெரும்பாலும் புலிகளிடமிருந்து ‘சுத்திகரிக்கப்பட்டு’ விட்டது என்றே கூறலாம். யாழ்ப்பாணத்தில் இப்பொழுது எந்த இடத்திலும் புலிகள் பதுங்கியிருக்க முடியாது. அப்படி யாராவது சந்தேகத்துக்கு இடமானவர்கள் பதுங்கியிருந்தால் அல்லது கிராமங்களில் நடமாடினால் பொதுமக்களே இராணுவத்துக்கு தகவல் கொடுத்து விடுகின்றனர். அம்மாதிரியான ஒரு சம்பவம் அண்மையில் பருத்தித்துறையில் நடைபெற்றது. பொதுமக்கள் கொடுத்த தகவலில் இராணுவம் ஒரு வீட்டைச் சுற்றி வளைத்தது. அங்கு பதுங்கியிருந்த இரு புலிகள் தப்பியோட முடியாத நிலையில் தாங்கள் வைத்திருந்த குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அவ்வீPட்டுப் பெண் வேறு ஒரு இடத்தில் தங்கியிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். அதுபோல பல இடங்களில் பொதுமக்கள் கொடுத்த தகவலினால் பெருமளவு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு யாழ்ப்பாணத்தில் புலிகளின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதினால் பொதுமக்கள் அச்சமின்றி வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்னொரு முக்கியமான விடயம் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் உணவுப்பொருள் தட்டுப்பாடும் ஓரளவு நீங்கியுள்ளது. பொருட்களின் விலை கொழும்பை விட சற்றுக்கூடுதல் என்றாலும், பொருட்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. முன்னர் புலிகளின் மிரட்டலுக்கு அஞ்சிய யாழ் தனியார் வர்த்தகர்கள் இப்பொழுது தாராளமாகப் பொருட்களைக் கொழும்பிலிருந்து கொண்டு வருகின்றனர். அரசின் இன்னொரு நடவடிக்கையாக அண்மையில் யாழ்ப்பாணத்தில் குடிசனமதிப்பு எடுக்கப்பட்டது. குடிசனமதிப்பில் ஈடுபடும் அரச அதிகாரிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என புலிகள் எச்சரித்தும் அதையும் மீறி அவர்கள் அதைச் செய்தார்கள். புலிகளால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. குடிசனமதிப்பின் பின்னர் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக வாழும் மக்களுக்கு விசேட அடையாள அட்டை வழங்கபபட்டு வருவதால் இனிமேல் யாழ்ப்பாணத்தில் புலிகள் கள்ள அடையாள அட்டையுடன் நடமாடுவது முடியாத காரியம். இந்த நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு சில சிரமங்கள் ஏற்படுகின்றன என்ற போதிலும், தாம் தெரியாத்தனமாக உருவாக்கிவிட்ட புலிகள்தான் இதற்கெல்லாம் காரணமென இங்குள்ள மக்களுக்கு தற்போது நன்கு விளங்குகின்றது.
யாழ்ப்பாண மாணவர்களின் கல்வியும் இப்பொழுது முன்னேறி வருகின்றது.சென்ற முறையைவிட (2006 ஆண்டைவிட) இம்முறை, அதாவது 2007 ஜீ.சீ.ஈ சாதாரண பரீட்சைப் பெறுபேறுகள் நல்ல முறையில் அமைந்துள்ளன. இதற்குக் காரணம் 2006 ஆண்டு இங்குள்ள மாணவர்களைப் புலிகளிடம் இருந்து விடுவித்தமையே. முன்பு யாழ் பல்கலைக்கழகத்தைத் தளமாகக் கொண்டு செயற்பட்ட புலிகள், பாடசாலை மாணவர்களைத் தூண்டி அடிக்கடி பகிஸ்கரிப்பு ஊர்வலம் வீதிமறியல் என ஈடுபடுத்தி வந்தனர். அதனால் அவர்களது படிப்பு நாசமானதுடன், பாதுகாப்பு படையினருடனும் தேவையில்லாத சச்சரவுகள் ஏற்பட்டன. புலிகளின் தலைவர் பிரபாகரனும் ஏனைய தலைவர்களும் தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிப்பித்துக் கொண்டு, யாழ்ப்பாணத்தின் சாதாரண மக்களின் பிள்ளைகளின் கல்வியை நாசமாக்கி யுத்த முனைகளுக்கு அனுப்பி வந்தனர். இராணுவம் புலிகள் மீது எடுத்த கடுமையான நடவடிக்கை காரணமாக இப்பொழுது யாழ் பல்கலைக்கழகமும் பாடசாலைகளும் வழமையான செயற்பாட்டுக்குத் திரும்பியுள்ளன. வெளியிடங்களுக்கான யாழ்ப்பாண மக்களின் போக்குவரத்துப் பிரச்சனைதான் இன்னமும் தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாக இருந்து வருகின்றது. கடல் மற்றும் ஆகாய மார்க்கமான பிரயாணங்கள் நீண்ட நாட்கள் எடுக்கின்றன. ஆனால் இப்பொழுது மன்னாரில் இராணுவம் முன்னேறி வருவதால் விரைவில் கேரதீவு - சங்குப்பிட்டி பூநகரிக்குள்ளால் திறக்கப்படும் என இங்குள்ள மக்கள் நம்புகின்றனர். அத்துடன் வன்னி பெருநிலப்பரப்பும் விரைவில் இராணுவத்தால் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதால், ஏ-9 வீதியும் திறக்கப்படும் என்ற நம்பிக்கையும் இங்கு நிலவுகின்றது. யாழ்ப்பாண மக்களின் எதிர்காலம் மட்டுமல்ல முழு தமிழ் மக்களினதும் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு புலிகளிடம் எஞ்சியுள்ள வன்னியையும் மீட்டெடுப்பது ஒன்றே ஒரே வழி என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.
|