|
தமிழ் மக்களுக்கு முக்கியத்துவமான தேர்தல்
நடக்கவிருக்கும் பொதுத் தேர்தல் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தீர்மானகரமானது என்றும் சவாலை உணர்ந்து தமிழ் மக்கள் செயற்பட வேண்டும் என்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்து ஊடகங்களில் வெளியாகியிருந்தது. உண்மையிலேயே இப்பொதுத் தேர்தல் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இலங்கை சுதந்திரமடைந்து அறுபத்திரண்டு வருடங்கள் கழிந்துவிட்டன. தமிழ் மக்களின் இருப்பு தொடர்பானதும் அவர்களின் தனித்துவ அங்கீகாரம் தொடர்பானதுமான பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தது. அன்று முதல் இன்று வரை தமிழ் மக்களின் அரசியல் தலைமை குறிப்பிட்ட ஒரு அரசியல் செல்வழியைச் சார்ந்ததாகவே இருந்து வருகின்றது. தலைசிறந்த மூளைசாலிகள் எனக் கருதப்பட்டவர்கள் இக் காலப் பகுதியில் அத் தலைமைப் பீடத்தை அலங்கரித்திருக்கின்றார்கள். அப்படியிருந்தும் தமிழ் மக்களின் எந்தப் பிரச்சினைக்கும் இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை. சரியாகக் கூறுவதானால், பிரச்சினை நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்தே வந்திருக்கின்றது.
இந்திய வம்சாவளியினரின் பிரசாவுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டதும் தேசிய இனப் பிரச்சினை முகிழ்ச்சி பெற்றதும் ஒரே காலப் பகுதியிலாகும். இந்திய வம்சா வளியினர் இப்போது பிரசாவுரிமையைப் பெற்றுள்ளனர். தேர்தல்களில் அவர்கள் வாக்களிக்கின்றனர். ஆனால் தேசிய இனப் பிரச்சினை வளர்ந்திருக்கின்றதேயொழிய தீரவில்லை. இந்திய வம்சாவளியினருக்குத் தலைமை தாங்கியவர்கள் பின்பற்றிய அணுகுமுறைக்கும் இலங்கைத் தமிழர்களுக்குத் தலைமை தாங்கியவர்கள் பின்பற்றிய அணுகுமுறைக்குமிடையே உள்ள வேறுபாடே இதற்குக் காரணம். இந்தப் பின்னணியிலேயே தமிழ் மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலைப் பார்க்க வேண்டும்.
தமிழ் மக்களின் இருப்பு பற்றியதும் தனித்துவம் பற்றியதும் அரசியல் உரிமை பற்றியதுமான பல கேள்விகளை இன்று நம் தலைவர்கள் எழுப்புகின்றார்கள். அவர்கள் சுட்டிக் காட்டும் குறைபாடுகளை நிராகரிப்பதற்கில்லை. அக்குறைபாடுகள் தோன்றுவதைத் தவிர்ப்பதற்கான சந்தர்ப்பம் தமிழ்த் தலைவர்களுக்குக் கிடைக்கவில்லையா என்பது பிரதானமான கேள்வி.
இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிச் செல்வதற்கு அடிப்படையான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் தமிழ்த் தலைவர்கள் அவற்றை நிராகரி த்திருக்கின்றார்கள். பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் பிரச்சினையின் தீர்வுக்குக் கிடைத்த அருமையான சந்தர்ப்பம். சமஷ்டி அடிப்படையிலான அத்தீர்வுத் திட்டத்தைத் தமிழ்த் தலைமை நிராகரித்தது.
கட்டுறுதியான கொள்கையைப் பின்பற்றாததும் பிரச்சினை தீராதிருப்பதற்கான ஒரு காரணம். சமஷ்டி, தனிநாடு, அதிகாரப் பகிர்வு என்று தமிழ்த் தலைவர்கள் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு கொள்கையை வலியுறுத்தினார்கள். அதே போல, நிரந்தரமான அணுகுமுறையையும் பின்பற்றவில்லை. கிடைக்கும் உரிமைகளைப் பெற்றுக்கொண்டு எஞ்சிய உரிமைகளுக்காகப் போராடுவது என்ற அணுகுமுறையை ஒரு காலத்திலும் முழுமையான தீர்வை மாத்திரம் ஏற்க முடியும் என்ற இறுக்கமான அணுகுமுறையை இன்னொரு காலத்திலும் பின்பற்றினார்கள்.
தலைவர்கள் விட்ட தவறுகளின் விளைவாகவே தமிழ் மக்கள் இன்று பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். தமிழ் மக்கள் துணிச்சலுடன் செயற்பட்டுச் சரியான தலைமையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. தனிநாடு சாத்தியமில்லை என்பதும் முழுமையான அரசியல் தீர்வை ஒரே தடவையில் பெறக்கூடிய சூழ்நிலை இப்போது இல்லை என்பதும் சமகால யதார்த்தம். இதைப் புரிந்து கொண்டு, கட்டங் கட்டமாக முழுமையான அரசியல் தீர்வை நோக்கிச் செல்லக்கூடியதும் அதற்கான நட்பு சக்திகளை அரவணைத்துச் செல்வதுமான தலைமையே இன்றைய தேவை.
நன்றி: தினகரன்
|