|
திபெத் நெருக்கடியின் உண்மையும் பொய்யும்
வெகுஜனன்
"ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் எடுத்துரைத்து வந்தால் அது சில நாட்களில் உண்மை என ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும்" இதனை முன்மொழிந்து செயலாக்கி வந்தவர் ஹிட்லரின் பிரசார அமைச்சரான கொயபல்ஸ். அதனாலேயே பின் நாட்களில் "கொயபல்ஸ் பொய்கள்" எனப்பட்டது. இன்றும் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.யும் மற்றும் மேற்குலக உளவு நிறுவனங்களும் அவ்வப்போது தமக்குத் தேவையான பொய்களையும் புழுகுகளையும் திட்டமிட்டு கட்டவீழ்த்து விட்டுக் கொள்வார்கள். அவற்றை சர்வவல்லமை கொண்ட அமெரிக்க - மேற்குலக ஊடகங்கள் அணி மணிகள் பூட்டி மீண்டும் மீண்டும் பரப்புரை செய்து கொள்கின்றன. "இரவு பி.பி.சி. விபரமாகச் சொல்லிருக்கு" "ராய்ட்டரில் சகலதும் வந்திருக்கு "என்றவாறு கேள்வி நியாயம் எதுவும் இன்றி இச் சர்வதேச ஊடகங்களை அப்படியே நம்புகின்ற பாமரத்தனம் நம் நாட்டில் மட்டுமன்றி உலகம் பூராவும் இருந்து வருகிறது.
இத்தகைய உலக ஊடக ஆதிக்கச் சூழலிலேயே அண்மைய தீபெத் பிரச்சினை என்பது ஊதிப் பெருப்பிக்கப்பட்டு வருகின்றமையைக் காண முடிகின்றது. கடந்த மார்ச் மாதத்தில் சீனாவின் சுயாட்சி மாகாணமான தீபெத்தின் தலைநகர் லாசா வில் சில ஆர்ப்பாட்டங்களும் வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றன. இவற்றில் கலந்து கொண்டவர்களில் லாமாக்கள் எனப்படும் தீபெத்திய பௌத்தத் துறவிகள் எனப்படுவோர் ஊக்கத்துடன் கலந்துகொண்டனர். இந்த மஞ்சள் அங்கியும் மொட்டையடிக்கப்பட்டவர்களுமான இந்த லாமாக்கள் அறுபது பேர் வரை ஆர்ப்பாட்டம் காரணமாக தீபெத்தின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சில வன்முறையாளர்கள் சீன ஹான் இனத்தவர்களினதும் சீன முஸ்லிம்களினதும் வர்த்தக வியாபார நிறுவனங்களைத் தாக்கி தீயிடவும் அடித்து நொறுக்கவும் செய்தனர்.
இவ் ஆர்ப்பாட்டங்கள் "தீபெத் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டதன்" வருடாந்த நினைவாக மார்ச் 14 ஆம் திகதி இடம்பெற்றதாகவே அமெரிக்க - மேற்குலக ஊடகங்களால் பரப்புரை செய்யப்பட்டது. இச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா, நேபாளம் மற்றும் மேற்குலகின் சில நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தீபெத்திய லாமாக்களும் வேறு சிலரும் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் என்ற பெயரில் எதிர்ப்புகள் தெரிவித்தனர். தீபெத்தை சீன ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்து சுதந்திர நாடாக மாற்ற வேண்டும் என்பது அமெரிக்க சீ.ஐ.ஏ.யினதும் தலாய்லாமாவினதும் அடிப்படை நிலைப்பாடாகும். உலக மேலாதிக்கம் என்ற மூலோபாயத்தில் செயல்பட்டு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவை உடைக்கவும் அதன் வளர்ந்துவரும் பொருளாதார வளர்ச்சியை முடக்கவும் தீபெத் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளது. அதற்கு கிடைத்த கருவியே ஆன்மீகத் தலைவர் எனப் பிரசாரப்படுத்தப்படும் தலாய்லாமா என்ற நிலவுடைமை வழிவந்த பௌத்த மடாதிபதியாவார். ஆதலால் தீபெத் பிரச்சினை பற்றியும் தலாய்லாமா பற்றியும் கூறப்படுவன பற்றிய மறுபக்கத்தை பார்ப்பது அவசியமாகின்றது.
உலகின் முகடு என வர்ணிக்கப்படும் தீபெத் பீடபூமியானது நீண்ட நெடுங்காலமாகவே சீனாவின் சுயாதிபத்தியத்திற்கு உட்பட்ட பிரதேசமாக இருந்துவந்துள்ளது. நிலவுடைமைக் காலகட்டமான மிங் வம்ச ஆட்சிக் காலத்திலும் (1368 - 1644) பின்பு குயிங் வம்ச ஆட்சிக் காலத்திலும் (1644 - 1911) தீபெத் சீனாவின் ஆட்சியதிகாரத்திற்கு உட்பட்டதாக இருந்து வந்தமையைப் பல்வேறு ஆய்வுகள் எடுத்துக் கூறியுள்ளன. இருபதாம் நூற்றாண்டு வரை மொங்கோலிய ஊடுருவல்காரர்களும் மற்றும் நேபாள, பிரித்தானியர்களும் அவ்வப்போது தீபெத்தில் ஊடுருவி குறுக்கீடுகள் செய்து வந்துள்ளனர். அதன் தொடர்ச்சியே இரண்டாவது உலக யுத்தத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் திட்டமிட்ட குறுக்கீடு தீபெத் மீது இடம்பெற்று வருகின்றது.
சீனாவின் ஏனைய பிரதேசங்கள் போன்றே தீபெத்திலும் நிலவுடைமையின் கீழான விவசாய அடிமை முறை பின்பற்றப்பட்டது. சனத்தொகையில் எண்பது வீதமான மக்கள் அடிமைகளாகவே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு வந்தனர். நிலவுடைமையாளர்கள் பலர் யுத்தப் பிரபுக்களாகத் தத்தமக்கான படைகளையும் கொண்டிருந்தனர். சீனாவில் பௌத்தம் பரவிய போது தீபெத் மக்களின் இனமொழி பண்பாட்டுக்கு அமைவாகவும் நிலவுடைமைப் பாரம்பரியங்களின் அடிப்படையிலும் பௌத்த மடாலயங்களும் துறவிகள் எனப்பட்டவர்களும் தோன்றி வளர்ந்தனர். பௌத்தத்தின் பெயரிலான இம் மடாலயங்களும் துறவிகளும் பெருந்தொகை நிலங்களையும் அவற்றில் உழைக்கும் அடிமைகளையும் சொந்தமாகக் கொண்டிருந்தனர். சகல செல்வங்களையும் அனுபவித்து பௌத்தத்தின் பெயரால் லாமாக்கள் எனப்படும் இத்துறவிகள் சுகபோக வாழ்வு வாழ்ந்தனர். மக்கள் அடிமைகளாகவும் வறுமையின் பிடியில் சிக்கியவர்களாகவும் இருந்தனர். இந்த லாமாக்களில் இரண்டு பிரதான தலைமை லாமாக்களாக விளங்கியவர்களே தலாய்லாமாவும் பஞ்சன் லாமாவும் ஆவர். இலங்கையில் நான்கு பௌத்த பீடங்கள் இருந்த போதிலும் அஸ்கிரிய, மல்வத்த பீடங்களே ஆதிக்கமும் செல்வாக்குச் செலுத்துபவையுமாக விளங்கி வருகின்றன. அவ்வாறே மேற்படி தலாய்லாமா தலைமை வகித்த மடாலயமும் பஞ்சன் லாமா தலைமைதாங்கிய பீடமுமாக இருந்துவந்தது.
இத்தகைய சூழலிலேயே 1949 இல் சீனப் புரட்சியானது வெற்றிபெற்றது. நிலவுடைமை முதலாளித்துவம் முறியடிக்கப்பட்டது. விவசாயிகளும் தொழிலாளர்களும் சிறுபான்மைத் தேசிய இனங்களும் விடுதலை பெற்றனர். சீன மக்கள் குடியரசு உதயமாயிற்று. சியாங்கை சேக்கும் அவரது படையினரும் அமெரிக்க ஆதரவுடன் தப்பி ஓடி தாய்வான் தீவில் தஞ்சமடைந்தனர். அமெரிக்கா தாய்வானையே சட்டபூர்வமான சீன அரசாங்கம் எனக் கூறி 1975 ஆம் ஆண்டுவரை ஐ.நா. சபையில், சீன மக்கள் குடியரசுக்குரிய இடத்தை மறுத்து வந்தது. 1949 இல் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டபோதும் தீபெத் பிரதேசம் 1950 இல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியாலும் அதன் தலைமையிலான மக்கள் விடுதலைச் சேனையாலும் யுத்தப் பிரபுக்களின் இராணுவம் தோற்கடிக்கப்பட்டும் மீட்கப்பட்டது. 1951 அக்டோபர் 26 இல் மக்கள் விடுதலைச் சேனை தீபெத்தின் லாசா நகரிற்குள் பிரவேசித்துக் கொண்டது. அதே ஆண்டில் சீன மத்திய ஆட்சி நிர்வாகத்தின் கீழ் பிரதேச ஆட்சிமுறை நிறுவப்பட்டது.
தீபெத்தின் சகல நிலை வளர்ச்சித் திட்டங்களும் வடிவமைக்கப்பட்டன. நிலச்சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன் கீழ் நிலப்பிரபுக்கள், யுத்தப் பிரபுக்கள் பௌத்த மடாலயங்கள், தலைமைத் துறவிகள் என்போர் வசம் இருந்த நிலங்கள் மீட்கப்பட்டு அடிமை நிலையில் வைக்கப்பட்டிருந்த விவசாயிகளுக்கும் நிலமற்றோருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன. அத்துடன், பௌத்த மதத்தின் பெயரிலான மடாலயங்களும் தலைமை லாமாக்களின் அதிகாரங்களும் பிடுங்கப்பட்டன. இத்தகைய மாற்றங்களை தீபெத்திய ஆளும் வர்க்க சக்திகளாக இருந்தவர்களால் பொறுக்க முடியவில்லை. அதேவேளை, மற்றொரு தலைமை லாமாவாக இருந்து வந்த பஞ்சன் லாமாவும் அவரோடு இணைந்த லாமாக்களும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் சீன அரசாங்கத்துடனும், தமது பூரண ஒத்துழைப்பை வழங்கினர். அரசாங்க நிர்வாகத்தில் பங்குகொண்டு தீபெத்தின் பொருளாதார சமூககல்வி அபிவிருத்தி மேம்பாட்டிற்காக இணக்கமுடன் செயல்பட்டனர்.
அதேவேளை, தலாய்லாமாவும் அவரது மடலாலயத்தைச் சேர்ந்தோரும் தீபெத்தின் விடுதலையை ஏற்றுக்கொள்ளவில்லை. தீபெத் பிரதேசத்தையும் அதன் மக்களையும் வழிநடத்தும், பொறுப்பு தமது மடாலயத்திற்கும் லாமாக்களுக்கும் உரியதாகும். என்ற நிலைப்பாட்டில் சீனாவை எதிர்த்து வந்தனர். அதன் அடிப்படையில் அமெரிக்க சி.ஐ.ஏ. யின் இரகசிய ஆயுத வழங்கல்களுடனும் சதித் திட்டங்களுடனும் 1959 ஆம் ஆண்டு மார்ச் மாத முற்பகுதியில் லாசாவில் ஒரு ஆயுதக் கிளர்ச்சி தூண்டிவிடப்பட்டது. ஆனால், மிக இலகுவாகவே சீன மக்கள் விடுதலைச் சேனை அக்கிளர்ச்சியை முறியடித்துக் கொண்டது. அதேவேளை, இக் கிளர்ச்சியை வழிநடத்திய தலாய்லாமாவும் அவரது சீடர்களுமான ஒரு ஆயிரம் பேர் தீபெத்தின் எல்லை கடந்து இந்தியாவிற்குள் புகுந்து தஞ்சமடைந்து கொண்டனர். இவர்கள் இந்தியாவிற்குள் வரும் போது தமது மடாலயங்களில் வைத்திருந்த விலை மதிப்புள்ள தங்கம், வைரம், முத்துக்கள் போன்றவற்றையும் கடத்தி வந்தனர். இவ்வாறு அகதிகளாக வந்தவர்களே இந்தியாவிலும் நேபாளத்திலும் மேற்கு நாடுகளிலும் தஞ்சமடைந்தனர். இவ்வாறு 1959 ஆம் ஆண்டின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்ட மார்ச் மாதத்தையே தமது சுதந்திரம் பறிக்கப்பட்டு சீன ஆக்கிரமிப்பு இடம்பெற்ற மாதமாக தலாய்லாமாவும் அவரது சீடர்களும் பிரசாரம் செய்யத் தொடங்கினர். அதனையே அமெரிக்க - மேற்குலக ஊடகங்கள் "சீன ஆக்கிரமிப்பு" என்ற அப்பட்டமான பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறி அதனை உண்மை போல நம்பச் செய்து வருகின்றனர்.
அமெரிக்காவும் மேற்குலகமும் தீபெத்தின் மீது கண்கள் பதித்து செயலாற்றுவது வெறுமனே அரசியல் காரணம் மட்டுமன்று. அங்குள்ள பொருளாதார வளங்கள் மீதான அக்கறைகள் காரணமாகின்றன. ஆசியாவின் தண்ணீர்க் கோபுரம் என்னும் அளவிற்கு குயிங் - தீபெத் பீடபூமியின் நீர்வளம் நிரம்பியுள்ள பிரதேசமாகும். அடிப்படையான இந்த நீர்வளம் முழுச் சீனாவினதும் பொருளாதார வளர்ச்சியில் பிரதான பங்கினை வழங்கக்கூடியதாகும். அத்துடன், செப்பு, இரும்பு, ஈயம், சைனிக், கடிமியம் போன்ற கனிவளங்களுடன் எண்ணெய் எரிவாயு போன்றனவும் தீபெத்தின் வளங்களாகக் காணப்படுகின்றன. இவற்றுடன் அதன் அதி உயர்ந்த அமைவிடம் பிரதான கேந்திர முக்கியத்துவத்தையும் வழங்கவல்லதாகக் காணப்படுகிறது. இவற்றினடிப்படையில் தான் தீபெத் சுதந்திரம் பற்றி அமெரிக்கா அழுது வடித்து நிற்கிறது. இதற்கு கையாட்களாகவும் கருவிகளாகவும் கிடைத்தவர்களே ஆன்மீகத் தலைவர் என்ற பட்டை நாமத்துடன் இருந்து வரும் தலாய்லாமாவும் அவருடன் இருந்துவரும் தீபெத்தியர்களுமாவர்.
1959 இல் இருந்து வடஇந்தியாவில் தர்மசாலா என்ற பெயரில் மடாலயம் அமைத்து "வெளிநாட்டில் தீபெத்திய அரசாங்கம்" நடாத்தி வருவதாகக் கூறி வரும் தலாய்லாமா பகிரங்கமாகவே வாஷிங்டனுடன் உறவும் நட்பும் பூண்டு செயலாற்றி வருகிறார். இவரை அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் வரவேற்று கட்டியணைத்து வருகின்றமை புதுமையல்ல. உலக மக்களின் வெறுக்கத்தக்க பொது எதிரியாகக் கணிக்கப்படும் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் இந்த தலாய்லாமாவின் தோளோடு தோள் பூண்ட நண்பன் என்பது பகிரங்கமானதொன்றாகும். தீபெத்தில் அமெரிக்க உறவு நிறுவனமான சீ.ஐ.ஏ. எவ்வாறு செயல்பட்டு வந்தது என்பதை விபரிக்கும் நூல் ஒன்று 2002 இல் வெளிவந்தது. அதன் தலைப்பு "தீபெத்தில் சி.ஐ.ஏ. யின் இரகசிய யுத்தம்" என்பதாகும். இதன் இணை ஆசிரியர்கள் கென்னத் கொன்போய் (ஹெரிரேஜ் பவுண்டேசன்) ஜேம்ஸ் மொறிசன் (சீ.ஐ.ஏ.யின் முன்னாள் ஊழியர்). இந்த நூலில் 1959 ஆம் ஆண்டின் ஆயுதக் கிளர்ச்சியைப் பற்றிய விபரங்கள் வெளிவந்துள்ளன. தலாய்லாமாவின் சகோதரர் ஹயாலோ தோடுப் மேற்படி ஆயுதக் கிளர்ச்சிக்குப் பொறுப்பாக இருந்து செயற்பட்டமை உட்பட தீபெத்திய கூலிப்படை யப்பானில் பயிற்சி பெற்றமை வரை விரிவாக அந்நூலில் கூறப்பட்டுள்ளமை கவனத்திற்குரியதாகும்.
இவ்வாறு சீ.ஐ.ஏ. யும் அமெரிக்கத் தலைவர்களும் தீபெத்திற்குள் ஊடுருவதற்கு தலாய் லாமாவை வழிவெட்டி விடும் கருவியாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இத்தகைய ஆன்மீக அரசியல் துறவிக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கிடைக்க வழி செய்து அதனை ஒரு நற்சாட்சிப் பத்திரமாக்கியதும் அமெரிக்காவேயாகும். அண்மையில் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க காங்கிரசின் சபாநாயகர் நான்சி பெலோசி நேரடியாகவே இமாலயப் பிரதேசத்தில் அமைந்துள்ள தர்மசாலாவிற்குச் சென்று தலாய்லாமாவைக் கட்டியணைத்து தமது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டார். இப்போது இதே தலாய்லாமா வெள்ளை மாளிகையின் விருந்துக்கும் கௌரவத்திற்கும் மட்டுமன்றி அடுத்த கட்டச் சீன எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குத் திட்டமிடவும் அமெரிக்கா செல்லவுள்ளார்.
உண்மையில் தலாய்லாமா ஆன்மீகத் தலைவர் என்ற பெயரில் உள்ள ஒரு அரசியல் பௌத்த துறவியாகவே உள்ளார். துறவி என்று கூறுவதைவிட மஞ்சள் அங்கியும் மயிரையும் மழித்துக் கொண்ட அரசியல்வாதியாவார். அண்மைய தீபெத் வன்முறைகளுக்குப் பின்பு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தீபெத் பிரதேசத்திற்கான தலைமையாளர் காங்குயிங்லீ தலாய்லாமா பற்றிக் கூறுகையில் "பௌத்தத் துறவியின் மஞ்சள் ஆடை தரித்த குள்ளநரி தான் தலாய்லாமா" என்று விபரித்திருந்தார். அதில் போதிய உண்மை உண்டு. அமெரிக்காவும் தலாய்லாமாவும் தற்போது முடுக்கி விட்டுள்ள தீபெத் பிரச்சினை என்பது எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் பெய்ஜிங்கில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியைக் குறிவைத்த நடவடிக்கையேயாகும்.
|